Skip to main content

தமிழக மீனவர்கள் இந்திய தூதரகத்தில் ஒப்படைப்பு!

Published on 28/08/2024 | Edited on 28/08/2024
Tamil Nadu fishermen handed over to the Indian Embassy

தமிழகம் மற்றும் புதுவைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் சம்பவம் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. அதோடு மீனவர்களின் படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படும் சூழலும் நிலவி வருகிறது. இந்த துயரச் சம்பவங்களுக்கு இடையே தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்களும் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இத்தகைய சூழலில் தான் இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று முன்தினம் (26.08.2024) மீன் பிடிப்பதற்கான அனுமதிச் சீட்டு பெற்று சுமார் 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் ஏராளமான மீனவர்கள் மீன் பிடிக்கக் கடலுக்குச் சென்றனர். இத்தகைய சூழலில் தான் ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேர் ஒரு விசைப்படகில் கச்சத்தீவு அருகே 8 கடல் மைல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது ஏற்பட்ட சூறைக்காற்று மற்றும் அதிகப்படியான அலைகள் காரணமாக விசைப்படகு கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் சிக்கிய இருவர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். அதாவது கச்சத்தீவு கடற்பரப்பில் உயிருக்கு ஆபத்தான நிலையில் கரை ஒதுங்கிய இரு மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் மீட்டனர். மேலும் கடலில் மாயமான 2 பேரைத் தேடும் பணி தீவிரமடைந்துள்ளது. முன்னதாக நேற்று (27.08.2024) அதிகாலையில் எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரத்தைச் சேர்ந்த ஒரு படகையும் எட்டு மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மீட்கப்பட்ட தமிழக மீனவர்கள் இருவரையும் இலங்கை கடற்படையினர் யாழ்பனத்தில் உள்ள இந்தியத் தூதரகத்திடம் ஒப்படைத்தனர். அதனைத் தொடர்ந்து மீனவர்கள் இருவரும் நாளை (29.08.2024) விமானம் மூலம் தாயகம் திரும்புகின்றனர். 

சார்ந்த செய்திகள்