Skip to main content

போலீஸ் பாதுகாப்பு இருந்தும் பயம்! - நீதிமன்றத்தில் இருந்து தப்பியோடிய எஸ்.வி.சேகர்

Published on 20/06/2018 | Edited on 20/06/2018




பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறு கருத்து தெரிவித்த விவகாரம் தொடர்பாக சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் இன்று காலை ஆஜரானார்.

முன்னதாக எஸ்.வி.சேகர் தனது மயிலாப்பூர் இல்லத்தில் இருந்து சென்னை எழும்பூர் நீதிமன்றம் வரும் வரை மயிலாப்பூர் காவல்துறை டி.சி.சரவணக்குமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு வழங்கினர். எழும்பூர் நீதிமன்றத்திலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

நீதிமன்றத்திற்கு சரியான நேரத்திற்கு வந்த அவர், நீதிபதி அழைக்கும் வரை காத்திருக்க வேண்டும் என்பதால் மற்ற வழக்குகளுக்காக வந்தவர்கள் நின்றுக்கொண்டிருக்கும்போது எஸ்.வி.சேகரை மட்டும் உட்கார வைத்திருந்தனர். எஸ்.வி.சேகரின் வழக்கு அரை மணி நேரத்திற்கு பிறகு 11 மணிக்கு மேஜிஸ்திரேட் மலர்விழி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மறுபடியும் அழைப்பதாக கூறியதால், அவரை மீண்டும் உட்கார வைத்திருந்தினர்.
 

 

 

பின்னர் 12.50 மணிக்கு அழைத்தவுடன் சென்றார். அப்போது ஜாமீன் மனு தாக்கல் செய்தது குறித்து கேட்கப்பட்டது. ஜாமின் பெறுவதற்காக கையெழுத்துப்போடவும், பிணைத் தொகை கட்டவும் இரண்டு பேர் உள்ளனர் என எஸ்.வி.சேகர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் யார் என மாஜிஸ்திரேட் கேள்வி எழுப்பினார். அதற்கு ஜெயச்சந்திரன், சீனிவாசன் ஆகியோர் இருவரும் குடும்ப நண்பர் என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து தலா பத்தாயிரம் ரூபாய் பிணைத் தொகையை கட்டுமாறு உத்தரவிட்ட மாஜிஸ்திரேட், 18.07.2018 அன்று இந்த வழக்கில் மீண்டும் எஸ்.வி.சேகர் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார். எஸ்.வி.சேகருக்காக பிணைத் தொகை கட்டி ஜாமீன் எடுத்தவர்களில் ஜெயச்சந்திரன் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். நீதிமன்றத்திற்கு அவர் வந்தபோது தனது சட்டைப் பையில் ஜி.கே.வாசன் புகைப்படத்தை வைத்திருந்தார்.

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கருப்பு நிற காரில் கோர்ட்டுக்கு வந்த எஸ்.வி.சேகர், பத்திரிகையாளர்களையும், புகைப்படக்காரர்களையும் பார்த்தவுடன் அதே காரில் செல்ல தயங்கினார். பத்திரிகையாளர்கள் கேள்வி மேல் கேள்வி எழுப்புவார்கள் என்ற பயத்தில் வெறொரு காரில் ஏறி தப்பித்தார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

“வருத்தம் போதாது, மன்னிப்பு கேட்க வேண்டும்” - எஸ்.வி சேகர்

Published on 30/11/2023 | Edited on 30/11/2023

 

s Ve Shekher about ameer gnanavel raja issue

 

இயக்குநர் அமீர் மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இருவருக்கும் நீண்ட காலமாக பருத்தி வீரன் படம் தொடர்பாகப் பிரச்சனை இருந்து வருகிறது. இது தொடர்பாக சமீபத்திய பேட்டியில் பேசிய ஞானவேல் ராஜா, அமீர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் வைத்தார். இதையடுத்து அதை மறுத்து அமீர் அறிக்கை வெளியிட்டார். இந்த விவகாரம் தொடர்பாக சசிகுமார், சமுத்திரக்கனி, பொன்வண்ணன் உள்ளிட்டோர் அமீருக்கு ஆதரவாக நின்றனர். மேலும் ஞானவேல் ராஜாவிற்கு எதிராக காட்டமாக அவர்களது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருந்தனர். இவர்களைத் தொடர்ந்து கரு. பழனியப்பன், பாரதிராஜா உள்ளிட்டோரும் ஞானவேல் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.

 

இப்படி தொடர்ந்து திரைப் பிரபலங்கள் இந்த விவகாரம் தொடர்பாக பேசி வந்த நிலையில், ஞானவேல் ராஜா மௌனம் காத்து வந்தார். ஒருவழியாக மௌனம் கலைத்த அவர், வருத்தம் தெரிவிப்பதாக அறிக்கை வெளியிட்டார். இந்த விவகாரம் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் எஸ்.வி சேகர், எமகாதகன் பட இசை வெளியீட்டு விழாவில் ஞானவேல் ராஜா மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறினார். அவர் பேசியதாவது,  “எனக்கு சினிமாவில் ரொம்ப பிடிச்ச நபர் அமீர். ஏனென்றால் அவருடைய சொந்த பெயரை, அதாவது முஸ்லீம் என்றால் அதை மறைக்காமல் வெளிப்படையாக சொல்லகூடிய தைரியம் மிகுந்த நபர். 

 

சினிமாவிற்கு சாதி, மதம், மொழி இப்படி எதுவுமே இல்லை. அப்படிப்பட்ட சினிமாவில் சமீபத்தில் இப்படிப்பட்ட சர்ச்சை ஏற்பட்டிருக்க கூடாது. ஒரு தயாரிப்பாளர் கிட்ட எவ்ளோ வேண்டுமானாலும் பணம் இருக்கலாம். ஆனால் அதை ஒரு இயக்குநர் தான் ஸ்கீரீனுக்கு கொண்டு வருகிறார். ஒரு படம் ஜெயித்த பிறகு, 10 வருஷம் கழித்து தப்பா பேசுவது சரியான விஷயம் கிடையாது. ஞானவேல் ராஜா வருத்தம் தெரிவித்தார். ஆனால் மன்னிப்பு தான் கேட்க வேண்டும். வருத்தம் தெரிவித்தால் அவர் யாரை சொல்கிறாரோ அவருக்கு தான் வருத்தமா இருக்கும். 

 

நமக்கு பிடிச்சத ஒருவன் செஞ்சா அவன ஆகா ஓகோ-னு புகழ்ந்து பேசனும், பிடிக்காதத ஒருவன் செஞ்சிட்டா என்ன வேணா பொதுவெளியில் பேசலாம் என்பது தவறான ஒரு விஷயம். ஞானவேல் வருத்தம் தெரிவித்தது மட்டுமல்லாமல், அவர் பேட்டி கொடுத்த வீடியோவை டெலிட் செய்ய சொல்ல வேண்டும். ஒருவரை குறை சொல்வதற்கு முன்னாடி நாம சரியாக இருக்கோமா என்பதை பார்க்க வேண்டும். அப்படி பார்க்காத வரைக்கும் எதுவுமே சரியா வராது. கருத்து வேறுபாடு இருக்கலாம். ஆனால் வெறுப்பு இருக்க கூடாது என்பது என்னுடைய பாலிசி” என்றார். 

 

 

 

 

Next Story

“அண்ணாமலை இருக்கும் வரை ஒரு சீட்டு கூட வெற்றி பெறாது” - எஸ்.வி. சேகர் பேட்டி

Published on 10/08/2023 | Edited on 10/08/2023

 

nnn

 

அதிமுக கூட்டணி தான் பாஜகவிற்கு பலம். அண்ணாமலை இருக்கும் வரை தமிழகத்தில் இருக்கும் பாஜக ஒரு சீட்டு கூட வெற்றி பெறாது என எஸ்.வி. சேகர் தெரிவித்துள்ளார்.

 

இன்று செய்தியாளர்களைச் சந்தித்த  நடிகர்  எஸ்.வி. சேகர்  பேசுகையில், ''ஒவ்வொரு முறையும் நம்பிக்கையில்லா தீர்மானம் வரும்போது மோடி அரசை குறை சொல்ல வேண்டும் என எதிர்க்கட்சிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து, ஒன்று சேர்ந்து என்ற அந்த வார்த்தையே ஒரு கேள்விக்குறி. இதுவரைக்கும் எதிர்க்கட்சிகள் எல்லாமே ஒருமித்த கருத்தாக ஒன்று சேரவே இல்லை. அவர்கள் அவர்களது குறைகளை பாராளுமன்றத்தினுடைய புத்தகங்களில் பதிவு செய்ய வேண்டும் என நினைத்து செய்கிறார்கள். ஆனால் எண்ணிக்கை மூலமாக இன்று மோடி பதில் சொல்லப் போகிறார். மக்கள் நம்பிக்கையில் அவர் தான் வெற்றி பெறுவார். நம்பிக்கையில்லா தீர்மானம் இந்த முறையும் தோல்வியைத் தான் அடையும்.

 

தமிழ்நாடு பாஜக தலைமை சரியான நிலையில் இல்லை. அதை ஒன்றும் செய்ய முடியாது. தலைமைக்கு நடைப்பயணம் போகவே டைம் இல்ல. நடைப்பயணம் பஸ்ல போய்க்கொண்டிருக்கிறார். ஒரு நாளைக்கு இரண்டு கிலோமீட்டர் மூன்று கிலோ மீட்டர் நடக்கிறாராம். அதுவே அவருக்கு முடியவில்லை. இந்த நடைப்பயணத்தினால் ஒன்றும் நடக்காது. அண்ணாமலை என்பது அரசியல் பூஜ்ஜியம் தான் தமிழ்நாட்டில். பாஜகவை பொறுத்தவரை தமிழ்நாட்டில் குறைந்தது பத்து வருடம் கொஞ்சம் கொஞ்சமாக மேலே வருபவர்களுக்கு தான் பாஜகவின் ஐடியாலஜி எல்லாம் தெரியும். ஆனால் யாரோ ஒருத்தர் திடீரென வந்து சிலரை சந்தோஷப்படுத்த திடீரென பதவி கொடுத்திருக்கிறார்கள். இது பாஜகவிற்கு தான் நஷ்டத்தை ஏற்படுத்துமே தவிர அண்ணாமலைக்கு பெரிய லாபம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

 

ஆட்சிக்கு பிஜேபி வரும் டெல்லியில். தமிழ்நாட்டினுடைய உதவியே இருக்காது. அண்ணாமலை இருக்கும் வரை தமிழகத்தில் இருக்கும் பாஜக ஒரு சீட்டு கூட வெற்றி பெறாது. அதற்கு வாய்ப்பே கிடையாது. அண்ணாமலையை பொறுத்தவரை அதிமுக கூட்டணி வரக்கூடாது என்பது போன்றே அவர் பேசிக் கொண்டிருக்கிறார். அதிமுக கூட்டணி தான் பாஜகவிற்கு பலம். அந்த பலத்தை புரிந்துகொண்டு செயல்பட வேண்டும்.'' என்றார்.