Skip to main content

ஜேடர்பாளையத்தில் தொடரும் மர்மம்; தூக்கம் தொலைத்த மக்கள்

Published on 15/05/2023 | Edited on 15/05/2023

 

Sugarcane mill workers residence set on fire at Namakka

 

நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையத்தில் கரும்பு ஆலை தொழிலாளர்கள் குடியிருப்புக்கு மர்ம நபர்கள் தீ வைத்த சம்பவத்தில் மூன்று தொழிலாளர்கள் பலத்த  தீக்காயம் அடைந்தனர். பெண் மர்மச்சாவு, பெட்ரோல் குண்டு வீச்சு உள்ளிட்ட மர்ம சம்பவங்களால் ஜேடர்பாளையம் மக்கள் தூக்கம் தொலைத்துள்ளனர்.     

 

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே வடகரை ஆத்தூர் சரளைமேடு, ராஜீவ்காந்தி காலனியைச் சேர்ந்தவர் முத்துசாமி. இவர் கரும்பில் இருந்து வெல்லம் தயாரிக்கும் ஆலை நடத்தி வருகிறார். இந்த ஆலையில் வேலை செய்து வரும் தொழிலாளர்கள் அருகிலேயே ஆஸ்பெஸ்டாஸ் கூரை வேய்ந்த கொட்டகையில் தங்கி உள்ளனர்.  

 

இந்நிலையில் மே 14ம் தேதி அதிகாலை 01:30 மணியளவில் மர்ம நபர்கள் அந்த கொட்டகையின் பின்பக்கத்தில் அட்டையை உடைத்து துணியில் மண்ணெண்ணெய்யை நனைத்து தீ வைத்து கொட்டகைக்குள் வீசியுள்ளனர். இதனால் கொட்டகைக்குள் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த ராக்கி (24), சுக்ராம், யஷ்வந்த் ஆகிய மூன்று பேர் மீது தீ பரவியது. இதில் தீக்காயமடைந்த அவர்களுக்கு பரமத்திவேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

 

தகவல் அறிந்த ஜேடர்பாளையம் காவல்நிலைய காவல்துறையினர் நிகழ்விடம் விரைந்தனர். காவல்துறை மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. தடய அறிவியல் நிபுணர்கள் நிகழ்விடத்தில் பதிவாகியுள்ள தடயங்களைச் சேகரித்தனர். தீ பற்ற வைத்த இடத்தில் சிதறிக்கிடந்த ஆஸ்பெஸ்டாஸ் அட்டை துண்டுகள், தீ பற்ற வைத்த துணிகள் ஆகியவற்றை தடய அறிவியல்  நிபுணர்கள் சேகரித்தனர்.

 

இதற்கிடையே, தகவல் அறிந்த மேற்கு மண்டல காவல்துறை ஐ.ஜி சுதாகர் நிகழ்விடத்தைப் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மர்ம நபர்களைப் பிடிக்க நாமக்கல் மாவட்ட எஸ்.பி கலைச்செல்வன், ஈரோடு எஸ்.பி சசிகுமார், சேலம் எஸ்.பி சிவக்குமார் ஆகியோர் மேற்பார்வையில் தனிப்படைகள் அமைத்து உத்தரவிட்டுள்ளார்.

 

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஜேடர்பாளையம் பகுதியில் ஆடு மேய்க்கச் சென்ற பெண் ஒருவர் மர்மமான முறையில் இறந்தார். அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என சந்தேகம் வலுத்துள்ள நிலையில், அந்தப் பெண்ணின் மரணத்தில் உள்ள மர்ம முடிச்சுகள் இன்னும் அவிழ்க்கப்படவில்லை. இந்த சம்பவத்தின் தொடர்ச்சியாக ஜேடர்பாளையத்தில் திடீர் திடீரென்று சிலரின் வீடுகள் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசிய சம்பவங்களும் அரங்கேறின. இது தொடர்பாகவும் இன்னும் குற்றவாளிகள் கைது செய்யப்படாத நிலையில்தான் தற்போது வெல்லம் காய்ச்சும் ஆலையின் தொழிலாளர்கள் குடியிருப்பு மீது தீ வைத்துள்ளனர்.

 

மர்ம நபர்களின் அட்டகாசங்களால் அப்பகுதியில் பெரும் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளதை அடுத்தே தற்போது காவல்துறை ஜேடர்பாளையம் விவகாரத்தில் தீவிர கவனம் செலுத்தத் தொடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது. மர்ம நபர்களின் அட்டூழியங்களால் ஜேடர்பாளையம் மக்கள் தூக்கம் தொலைத்துள்ளனர்.  

 

 

சார்ந்த செய்திகள்