Skip to main content

விவசாயிகளை ஏமாற்றிய சர்க்கரை ஆலை, அவற்றிற்கு துணை நின்ற வங்கிகளையும் கண்டித்து ஆர்ப்பாட்டம்!  

Published on 17/10/2018 | Edited on 17/10/2018
Sugar mill that cheated the farmers



கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த அம்பிகா மற்றும் ஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகங்கள்  விவசாயிகளுக்கு கரும்பு நிலுவை தொகை வழங்குவதாக கூறி  கருவேப்பிலங்குறிச்சி, சிறுபாக்கம், கழுதூர் ஆகிய ஊர்களில்  உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் 300 கோடி கடன் வாங்கியுள்ளன. 
 

ஆனால் விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டிய நிலுவை தொகைகளை வழங்காமல் ஆலை நிர்வாகங்கள் காலம் தாழ்த்தி வருகின்றன. இதனால் விவசாயிகள் பல்வேறு போராட்டங்கள், சாலை மறியல் நடத்தியும் ஆலை நிர்வாகம் விவசாயிகளை கண்டு கொள்ளவில்லை. 
 

இந்நிலையில் பாரத ஸ்டேட் வங்கி, 'வாங்கிய கடனை கட்டுங்கள்' என்று விவசாயிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியது. இதனால் அதிர்ச்சியடைந்த விவசாயிகள் வங்கி மேலாளரிடம் விசாரித்தபோது, ஆரூரான் மற்றும் அம்பிகா சர்க்கரை ஆலை நிர்வாகம் விவசாயிகள் பேரில் கடன் வாங்கியது தெரிய வந்துள்ளது. 
 

இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் ஜனநாயக விவசாய சங்கத்தின் சார்பில் கருவேப்பிலங்குறிச்சி பாரத ஸ்டேட் வங்கி முன்பு கண்டன முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். 
 

இந்த ஆர்ப்பாட்டத்தில் அம்பிகா மற்றும் சித்தூர் ஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகம் வாங்கிய கடனுக்கு, கடன் வாங்காத விவசாயிகளை ஜாமீன்தாரராக ஆக்கியதை ரத்து செய்ய வேண்டும், விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டிய 5 ஆண்டு நிலுவைத் தொகையான 58 கோடியை வட்டியுடன் வழங்க வேண்டும், மத்திய அரசு அறிவித்த கொள்முதல் விலையை அமல்படுத்த வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
 

மேலும் பாரத ஸ்டேட் வங்கி மேலாளரிடம் ஆலை வாங்கிய கடனுக்கும், விவசாயிகளுக்கும் சம்பந்தமில்லை என்று மனு அளித்தனர். சர்க்கரை ஆலை நிர்வாகம் மற்றும் தமிழக அரசானது விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், அனைத்து விவசாயிகளையும் திரட்டி தலைமை செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
 

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

“அனைவரும் ஒன்றுபட வேண்டும்” - விவசாயிகளுக்கு ஆதரவாக காலா பட நடிகர்

Published on 07/03/2024 | Edited on 07/03/2024
nane patekar about farmers

இந்தி மற்றும் மராத்தியில் பல்வேறு படங்களில் நடித்து பிரபலமானவர் நானா படேகர். கடைசியாக தி வேக்ஸின் வார் படத்தில் நடித்திருந்தார். தமிழில் ரஜினியின் காலா படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இப்போது ஜேர்னி (Journey) என்ற தலைப்பில் ஒரு படம் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

திரைப்படங்களில் நடித்துக் கொண்டே மற்றொரு மராத்தி நடிகரான மகரந்த அனஸ்புரேவுடன் இணைந்து ‘நாம்’ என்ற அறக்கட்டளையை நடத்தி வருகிறார். இதன் மூலம் மகாராஷ்டிராவில் உள்ள வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார். இந்த நிலையில், நாசிக்கில் நடைபெற்ற ஷேத்காரி சம்மேளன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசுகையில், “விவசாயிகள் நல்ல நேரத்துக்காகக் காத்திருக்காமல் விடாமுயற்சியின் மூலம் நல்ல காலங்களைக் கொண்டு வர வேண்டும். 

எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வரும் என்பதை நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும். தங்கம் விலை உயரும்போது, அரிசி விலை ஏன் உயரவில்லை? விவசாயிகள் முழு தேசத்திற்கும் உணவு வழங்குகிறார்கள். ஆனால் அவர்களின் குறைகளை தீர்க்க அரசுக்கு நேரமில்லை. இதுபோன்ற அரசிடம் விவசாயிகள் எதையும் கோர வேண்டாம். எந்த மாதிரியான இலட்சியத்தை இளம் தலைமுறைக்கு முன் வைக்கிறீர்கள்? நீங்கள் என்ன செய்கிறீர்கள்? நான் வெளிப்படையாக பேசும் நபர் என்பதால் என்னால் அரசியலில் சேர முடியாது. தற்போதைய நிலையை மாற்ற நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும்” என்றார். 

Next Story

போராட்டத்திற்கு தேதி குறித்த விவசாயிகள்!

Published on 03/03/2024 | Edited on 03/03/2024
 Farmers on the date for the struggle 

விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை, விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் அறிக்கையை அமல்படுத்துவது என்பன உள்ளிட்ட 12 அம்ச வேளாண் கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப், அரியானா மாநில விவசாயிகள் ஆயிரக்கணக்கானோர் டிராக்டர்களில் உணவு, மருந்து பொருட்களுடன் ‘டெல்லி சலோ’ என்ற பெயரில் தலைநகர் டெல்லியில் போராட்டம் நடத்தச் சென்றபோது மாநில எல்லையிலேயே முள்வேலிகள், தடுப்புக்கட்டைகள் அமைத்து தடுக்கப்பட்டனர்.

இந்த தடுப்புக்கட்டைகளைத் தகர்த்தெரிந்த விவசாயிகள் தடைகளை மீறி டெல்லி நோக்கி புறப்பட்டபோது விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீசியும் தண்ணீரை பீய்ச்சி அடித்தும் நிலைகுலையச் செய்தனர். மேலும் ரப்பர் குண்டுகளால் சுடப்பட்டனர். கண்ணீர் புகை குண்டுகளால் ஏற்பட்ட நச்சுப் புகையால் மூச்சுத் திணறிய 65 வயது கியான் சிங் என்ற விவசாயியும், ரப்பர் குண்டு பட்டுத் தலையில் காயமடைந்த 21 வயது இளம் விவசாயி ஒருவரும் போராட்டக் களத்திலேயே உயிரிழந்தனர். இதற்கிடையில் விவசாயிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் சுமூகமான உடன்பாடு ஏதும் ஏற்படவில்லை. அதே சமயம் டெல்லி எல்லைகளில் தொடர் போராட்டத்தை தீவிரப்படுத்துவது குறித்து விவசாயிகள் விரிவான ஆலோசனை செய்து வந்தனர்.

இந்நிலையில் மார்ச் 10 ஆம் தேதி மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என விவசாயிகள் அறிவித்துள்ளனர். இது குறித்து விவசாயிகள் சங்கத் தலைவர் ஜக்ஜித் சிங் தலேவால் கூறுகையில், “டெல்லிக்கு பேரணியாக செல்லும் எங்கள் (விவசாயிகள்) திட்டம் அப்படியே உள்ளது. அதிலிருந்து நாங்கள் பின்வாங்கவில்லை. எல்லையில் பலத்தை அதிகரிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. மார்ச் 6 ஆம் தேதி விவசாயிகள் நாடு முழுவதிலும் இருந்து ரயில், பேருந்து, விமானம் மூலம் டெல்லிக்கு செல்ல திட்டமிட்டுள்ளோம். அங்கு போராட்டத்தில் கலந்துகொள்ள அரசு அனுமதிக்குமா இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். மார்ச் 10 ஆம் தேதி நாடு முழுவதும் ரயில் மறியல் போராட்டம் நடத்துவோம். அன்றைய தினம் நன்பகல் 12 மணி முதல் மாலை முதல் 4 மணி வரை ரயில் மறியல் போராட்டம் நடைபெறும்” எனத் தெரிவித்தார்.