Skip to main content

லாரி ஸ்டிரைக்: ரூ.3000 கோடி வர்த்தகம் பாதிப்பு!; அத்தியாவசிய பொருள்கள் விலை உயரும்!!

Published on 22/07/2018 | Edited on 27/08/2018
lo

 

மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் சரக்கு லாரிகள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ள நிலையில், அத்தியாவசிய பொருள்களின் விலைகள் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 3000 கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளது.


மூன்றாம் நபர் இன்சூரன்ஸ் பிரிமியம் உயர்வு, டீசல் விலை உயர்வு ஆகியவற்றைக் குறைக்க வலியுறுத்தியும், நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளை அகற்றக்கோரியும் இந்தியா முழுவதும் காலவரையற்ற சரக்கு லாரிகள் ஸ்டிரைக் நேற்று முன் தினம் (ஜூலை 20, 2018) தொடங்கியது. 3வது  நாளாக இன்றும் ஸ்டிரைக் தொடர்கிறது.


சேலம் மாவட்டத்தில் 35 ஆயிரம் சரக்கு லாரிகள் உள்பட தமிழகம் முழுவதும் 4.50 லட்சம் லாரிகள் இந்த ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளன. நாடு முழுவதும் 68 லட்சம் சரக்கு லாரிகள் ஈடுபட்டுள்ளன. இரு நாள்களில் 90 சதவீத லாரிகள் ஓடவில்லை. வெளிமாநிலங்களுக்கு சரக்கு ஏற்றிச்சென்ற லாரிகளும் நேற்று இரவுக்குள் சொந்த ஊர்களுக்குத் திரும்பி ய நிலையில், இன்று முதல் 100 சதவீத லாரி போக்குவரத்தும் அடியோடு முடங்கியது.


லாரி ஸ்டிரைக் குறித்து முன்கூட்டியே அறிவிக்கப்பட்டதால் பொதுமக்கள் ஒரு வாரத்திற்குத் தேவையான காய்கறிகள், பருப்பு, சமையல் எண்ணெய், பழங்கள் ஆகியவற்றை வாங்கி வைத்துக் கொண்டனர். இன்னும் இரு நாள்களுக்கு மேல் லாரி ஸ்டிரைக் தொடரும்பட்சத்தில் அனைத்து அத்தியாவசிய உணவுப்பொருள்களின் விலைகளும் 100 சதவீதம் வரை உயரும் அபாயம் உள்ளது. 


ஏற்கனவே தமிழகத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு சரக்கு கொண்டு செல்லப்படுவதும், அதேபோல் பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு சரக்குக் கொண்டு வருவதற்குமான புக்கிங் சேவைகள் கடந்த 15ம் தேதி முதல் நிறுத்தப்பட்டு விட்டது. அதனால் நாடு முழுவதுமே அத்தியாவசிய பொருள்களின் விலைகளும் உயரும் எனத்தெரிகிறது.


இதுகுறித்து தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்க மாநில செயலாளர் தனராஜ் கூறுகையில், ''பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரி வரம்புக்குள் கொண்டு வர வேண்டும். அதேநேரம் மாநில அரசிடமும் வாட் வரியை குறைக்க வேண்டும் என்று கோரியிருக்கிறோம். பெட்ரோல், டீசல் விலையை மூன்று மாதத்திற்கு ஒருமுறை நிர்ணயிக்க வேண்டும்.


வெளிமாநிலங்களுக்கு சரக்கு ஏற்றிச்செல்லும் லாரிகள் ஒவ்வொரு சுங்கச்சாவடியிலும் நின்று நின்று செல்லும்போது தினமும் 1.75 கோடி ரூபாய் டீசலும், மனித உழைப்பும் வீணாகிறது. இதற்காகத்தான் நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளே இருக்கக்கூடாது என்கிறோம். ஆனாலும், அரசுக்கு ஆண்டுக்கு ஒருமுறை கட்டணமாக சுங்கக்கட்டணம் செலுத்தத் தயாராக இருக்கிறோம். 


மூன்றாம் நபர் இன்சூரன்ஸ் பிரீமியம் தொகை திடீரென்று 40 சதவீதம் வரை உயர்த்தி உள்ளனர். இதையும் குறைக்க வேண்டும். இந்த மூன்று கோரிக்கைகளை வலியுறுத்திதான் இப்போது காலவரையற்ற ஸ்டிரைக்கில் ஈடுபட்டு உள்ளோம். 


வேலைநிறுத்தப் போராட்டம் தொடங்குவதற்கு முதல் நாள்கூட மத்திய சாலைப்போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்காரியை, அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் நிர்வாகிகள் சந்தித்துப் பேசினர். எங்கள் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்க 3 மாதங்கள் அவகாசம் கேட்டார். காலவரையற்ற ஸ்டிரைக் நடத்துவது குறித்து மே 17ம் தேதியே பகிரங்கமாக அறிவித்து நோட்டீஸ் கொடுத்துவிட்டோம். இப்போதும் மத்திய அமைச்சர் கால அவகாசம் கேட்டால் எப்படி?


எங்கள் கோரிக்கைகளை ஏற்காத பட்சத்தில், அடுத்தக்கட்டமாக டேங்கர் லாரிகளையும் ஸ்டிரைக்கில் ஈடுபடுத்துவோம். ஏற்கனவே அவர்களும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்,'' என்றார் தனராஜ்.


லாரிகளில் ஏற்றப்படும் சரக்கை உரிய இடத்தில் பத்திரமாக கொண்டு சென்று இறக்கி வைப்பது வரை கண்காணிக்கும் பணிகளை சரக்கு புக்கிங் ஏஜன்டுகள் மேற்கொள்கின்றனர். லாரியில் ஏற்றப்படும் சரக்கின் எடை மற்றும் பயண தூரத்திற்கு ஏற்ப, புக்கிங் ஏஜன்டுகள் கமிஷன் பெறுகின்றனர். லாரி ஸ்டிரைக்கால் புக்கிங் ஏஜன்டுகளுக்கும் வேலைவாய்ப்பு முற்றிலும் பறிபோயுள்ளது. இந்த தொழிலில், சேலம் மாவட்டத்தில் 273 புக்கிங் ஏஜன்டுகளும், மாநிலம் முழுவதும் 5643 புக்கிங் ஏஜன்டுகளும் உள்ளனர்.

 

log


இதுகுறித்து தமிழ்நாடு லாரி புக்கிங் ஏஜன்டுகள் சம்மேளன மாநிலத் தலைவர் ராஜவடிவேல் கூறுகையில், ''லாரி ஸ்டிரைக் தொடங்கியதில் இருந்து சரக்கு லோடிங் செய்வது முழுமையாக நின்று விட்டது. தமிழ்நாட்டில் இருந்து ஒன்றரை லட்சம் லாரிகள் வட இந்தியாவுக்கு சரக்கு ஏற்றிச்செல்கின்றன. தமிழ்நாட்டில் இருந்து ஜவ்வரிசி, ஸ்டார்ச், மஞ்சள், பட்டாசு, தேங்காய், முட்டை, தானியங்கள், இரும்பு கட்டுமானப் பொருள்கள், ஜவுளி உள்ளிட்ட பொருள்கள் லோடு ஏற்றிச்செல்லப்படும். லாரி ஸ்டிரைக்கால் இந்த சரக்கு போக்குவரத்து தடை பட்டுள்ளது. 


வடமாநிலங்களுக்கு லோடு ஏற்றுவதற்கு புக்கிங் செய்வதை கடந்த 15ம் தேதி முதல் நிறுத்தி விட்டோம். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களுக்கு லோடு புக்கிங் செய்வது 18ம் தேதி முதல் நிறுத்தப்பட்டது.


டீசல் விலையை தினமும் நிர்ணயம் செய்து வருவதால் சரக்குக்கு சரியான வாடகையை நிர்ணயிப்பதில் சிக்கல் உள்ளது. லாரி உரிமையாளர்கள் எங்களை நம்பித்தான் ஒப்படைக்கின்றனர். சரக்கு புக்கிங் தொழிலும் லாரி உரிமையாளர்களை சார்ந்தே இருக்கிறது. சரக்கு ஏற்றி, உரிய இடத்தில் சரக்கை கொண்டு சேர்ப்பது வரை எங்கள் பணி. லாரி ஸ்டிரைக்கால் எங்களுடைய தொழிலும் முடங்கி உள்ளது,'' என்றார்.


சரக்கு போக்குவரத்துத் தொழிலில் தமிழ்நாட்டில் மட்டும் லாரி டிரைவர், கிளீனர் மட்டுமின்றி சரக்கு ஏற்றி இறக்கும் சுமைப்பணி தொழிலாளர்கள், டயர் ரீட்ரேட் தொழிலாளர்கள், லாரி மெக்கானிக்குகள் என ஒரு கோடி குடும்பத்தினர் நேரடியாக ஈடுபட்டுள்ளனர். லாரி ஸ்டிரைக் நீடிக்கும்பட்சத்தில் ஒரு கோடி குடும்பத்தினருக்கும் வருவாய் இழப்பும், வேலையிழப்பும் ஏற்படும் சூழலும் உள்ளது.


சரக்கு போக்குவரத்தைப் பொறுத்தவரை மற்ற மாநிங்களைக் காட்டிலும் தமிழகம் முன்னிலையில் உள்ளது. அதனால் இதுபோன்ற ஸ்டிரைக்கின்போது தமி-ழகத்திற்கு மற்ற மாநிலங்களைவிட இழப்பு மிகவும் அதிகம். லாரி உரிமையாளர்களுக்கு தினமும் வாடகையாக மட்டும் ரூ.3 கோடி முதல் ரூ.6 கோடி வரை வருவாய் கிடைத்து வருகிறது. அரசுக்கு நாளொன்றுக்கு 100 கோடி ரூபாய் வரி வருவாய் கிடைக்கிறது. 


இப்போது நடந்து வரும் சரக்கு லாரிகள் ஸ்டிரைக் காரணமாக இந்த வருவாய் முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளதோடு, இந்த இரு நாள்களில் மட்டும் 3000 கோடி ரூபாய்க்கு சரக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் லாரி உரிமையாளர்கள் கூறுகின்றனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

கோயம்பேடு பேருந்து நிலைய பேருந்துகளில் சிரமமின்றி பயணிக்கும் பொதுமக்கள் (படங்கள்)

Published on 09/01/2024 | Edited on 09/01/2024

 

 

 

போக்குவரத்து ஊழியர்கள் ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, பஸ் ஸ்ட்ரைக் அறிவித்திருந்த நிலையில், கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில், பொதுமக்கள் சிரமமின்றி பேருந்துகளில் ஏறி பயணித்தனர்.

Next Story

வலுக்கும் லாரி ஓட்டுநர்களின் போராட்டம்; வட மாநிலங்களில் சிக்கித் தவிக்கும் தமிழக ஓட்டுநர்கள்!

Published on 02/01/2024 | Edited on 03/01/2024
Tamil Nadu drivers stuck in northern states are in agony

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய சாட்சியங்கள் சட்டம் என 3 குற்றவியல் சட்டங்கள் கடந்த டிசம்பர் 25 ஆம் தேதி வரை அமலில் இருந்தன. இவற்றுக்கு மாற்றாக 3 புதிய குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு உருவாக்கியது. அதன்படி, நாடாளுமன்றத்தில் 3 குற்றவியல் மசோதாக்கள் இந்தியில் தாக்கல் செய்யப்பட்டன.

அதில், இந்திய தண்டனைச் சட்டம் என்பதை பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் எனவும், குற்றவியல் நடைமுறை சட்டம் என்பதை பாரதிய நாகரிக் சுரக்‌ஷ சன்ஹிதா எனவும், இந்திய சாட்சியங்கள் சட்டம் என்பதை பாரதிய சாக்சியா எனவும் பெயர் மாற்றம் செய்யப்பட்ட 3 மசோதாக்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். இந்த மசோதாக்கள் மக்களவையிலும், மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டு ஒப்புதல் அளித்திருந்தார். இதனையடுத்து 3 புதிய குற்றவியல் மசோதாக்களும் கடந்த 25 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன.

அதே சமயம் பாரத நியாய சன்ஹிதா என்ற பெயரில் புதிதாக கொண்டு வரப்பட்ட புதிய குற்றவியல் சட்டத்தில் விபத்தால் மரணம் ஏற்பட்டால் ஓட்டுநர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதாவது ஹிட் அண்ட் ரன் (Hit and Run) வழக்கில் சிக்கும் ஒட்டுநர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், கவனக்குறைவாக வாகனத்தை ஓட்டி உயிரிழப்பு ஏற்படுத்தினால் ஒட்டுநர்களுக்கு 5 ஆண்டுகள் சிறை என இச்சட்டம் கூறுகிறது. எனவே விபத்து தொடர்பான இந்த விதிமுறைக்கு ஓட்டுநர்கள் எதிர்ப்பு தெரிவித்து உத்திரப்பிரதேசம், மஹாராஷ்ட்ரா, பஞ்சாப், பீகார், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட வட மாநிலங்களில் கார், பேருந்து, லாரி ஒட்டுநர்கள் முக்கிய சாலைகளை முடக்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் குஜராத், உத்திரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் ஓட்டுநர்கள் மற்றும் காவல்துறையினர் இடையே மோதல் சம்பவங்களும் நிகழ்ந்து வருகின்றன.

இந்நிலையில் லாரி ஓட்டுநர்களின் இந்த போராட்டத்தால் மத்தியப் பிரதேசத்தில் தமிழகத்தைச் சேர்ந்த ஓட்டுநர்கள் தவித்து வருகின்றனர். மத்தியப் பிரதேச மாநிலம் சாஹர் அருகே காடுகள் சூழ்ந்த இடத்தில் அமைந்துள்ள நெடுஞ்சாலையில் சுமார் 50 கி.மீ. தூரத்திற்கு லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. இதனால் தமிழகத்தைச் சேர்ந்த ஓட்டுநர்கள் சொந்த ஊர் திரும்ப முடியாமல் சிக்கி தவிப்பதாக லாரி ஒட்டுநர் ஒருவர் வீடியோ மூலம் தெரிவித்துள்ளார். இதே போன்று பல்வேறு மாநிலங்களிலும் ஓட்டுநர்கள் சிக்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. நாளொன்றுக்கு தமிழகத்தில் இருந்து சுமார் 50 ஆயிரம் லாரிகள் வடமாநிலங்களுக்கு சரக்குகளை ஏற்றிச் செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.