![sudden fire in a cell phone repair shop](http://image.nakkheeran.in/cdn/farfuture/kjOGiY_XEHNWIh1WVrDVrhYGkNB9KATmZZUfWcTCo9s/1719653629/sites/default/files/inline-images/16_115.jpg)
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு மேஸ்திரி வீதியில் எருக்கம்பட்டு பகுதியைச் சேர்ந்த அங்காளன் என்பவர் செல்போன் பழுது பார்க்கும் கடை நடத்தி வருகிறார். இவர் வழக்கம்போல் நேற்று இரவு கடையில் பணியை முடித்துவிட்டு கடையைப் பூட்டிவிட்டு வீட்டிற்குச் சென்றுள்ளார்.
இந்த நிலையில் இன்று காலை கடையிலிருந்து திடீரென புகை வர ஆரம்பித்துள்ளது. இதனைக்கண்ட அக்கம் பக்கத்தினர் பேரணாம்பட்டு தீயணைப்பு துறையினருக்கும் கடை உரிமையாளருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பேரணாம்பட்டு தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். அதற்குள் தீ மளமளவெனப் பரவி கடையில் இருந்த செல்போன், லேப்டாப், மற்றும் செல்போன் உதிரி பாகங்கள் எனச் சுமார் 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மின்சாதன பொருட்கள் தீயில் கருகி சாம்பல் ஆனது.
மேலும் இந்தச் சம்பவம் குறித்து பேரணாம்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.