மாணவிக்கு பாலியல் தொல்லை: வேன் ஓட்டுநருக்கு
ஏழு ஆண்டுகள் சிறை
பொள்ளாச்சி அருகே 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் வேன் ஓட்டுநருக்கு கோவை நீதிமன்றம் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி வட்டம், ஜமீன் ஊத்துக்குளி பகுதியைச் சேர்ந்தவர் ஜெ.மதன் (வயது-41). இவர் போலாசியில் உள்ள காய்கறி மார்க்கெட்டில் வேன் ஓட்டி வந்தார். மதனுக்குத் திருமணமாகி ஆறு மதத்தில் பெண் குழந்தையும் உள்ளது.
இந்நிலையில், அவரது வீட்டின் அருகே வசித்த ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 14-வயது சிறுமி ஒருவர் மதனின் குழந்தையைப் பார்க்க அடிக்கடி அவரது வீட்டுக்கு வந்து சென்றுள்ளார்.
இதனிடையே, 2014 ஜூன் 13-ஆம் தேதி அந்தச் சிறுமி குழந்தையை பார்க்க மதனின் வீட்டுக்கு வந்தபோது, தனியாக இருந்த மதன் அந்த சிறுமியை மிரட்டி, அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதுகுறித்து விபரமறிந்த சிறுமியின் பெற்றோர் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் மதனை கைது செய்து அவர் மீது பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு கோவை மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் மீதான இறுதிக் கட்ட விசாரணை நிறைவடைந்த நிலையில், நீதிபதி (பொறுப்பு) அல்லி நேற்று தீர்ப்பு வழங்கினார்.
அதில், குற்றம் சாட்டப்பட்டுள்ள மதனுக்கு ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 10-ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தார். மேலும், அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால் கூடுதலாக மூன்று மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பெ.சிவசுப்பிரமணியம்