Skip to main content

"அந்த நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்"- கனிமொழி எம்.பி. வலியுறுத்தல்!

Published on 19/02/2022 | Edited on 19/02/2022

 

"Strict action should be taken against that person" - Kanimozhi MP Insistence!

 

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (19/02/2022) காலை 07.00 மணிக்கு தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், மாலை 06.00 மணியுடன் நிறைவு பெற்றது. இந்த நிலையில், மதுரை மாவட்டம், மேலூர் நகராட்சியின் 8 ஆவது வார்டில் உள்ள அல்அமீன் பள்ளிக்கூடத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் வாக்காளர்களிடம் ஹிஜாப்பை அகற்றுமாறு பா.ஜ.க. முகவர் கிரிராஜன் வலியுறுத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

 

பா.ஜ.க. முகவர் கிரிராஜன் கூறியதற்கு தேர்தல் நடத்தும் அலுவலர், பிற கட்சிகளைச் சேர்ந்த முகவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து, தேர்தல் அலுவலர்கள், தி.மு.க., அ.தி.மு.க., உள்ளிட்ட பிற கட்சிகளின் முகவர்களிடம் பா.ஜ.க. முகவர் கிரிராஜன் வாக்குவாதம் செய்தார். இதைத் தொடர்ந்து, தேர்தல் அலுவலர்கள், பிற கட்சிகளின் முகவர்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். அதன் தொடர்ச்சியாக, வாக்குச் சாவடி மையத்தில் இருந்து பா.ஜ.க. முகவரை வெளியேற்றிய காவல்துறையினர், அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதனிடையே, பா.ஜ.க. முகவர் கிரிராஜன் மீண்டும் வாக்குச்சாவடி மையத்துக்கு நுழைய முயன்றதாகக் கூறப்படுகிறது. 

 

இதனால் சிறிதுநேரம் நிறுத்தப்பட்ட வாக்குப்பதிவு பா.ஜ.க.வின் மாற்று முகவர் வந்ததும் மீண்டும் தொடங்கியது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இந்த வாக்குச்சாவடி மையத்தைச் சுற்றிலும் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். 

 

பா.ஜ.க. முகவர் வாக்காளரின் ஹிஜாப்பை அகற்ற வலியறுத்தியதற்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கடும் கண்டனத்தைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தி.மு.க.வின் மகளிரணிச் செயலாளரும், தூத்துக்குடி தொகுதியின் மக்களவை உறுப்பினருமான கனிமொழி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாய்த் திகழும் தமிழகத்தில், மதுரை மேலூர் நகராட்சி வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க வந்த ஒரு இஸ்லாமியப் பெண்ணிடம், பா.ஜ.க. பூத் நிர்வாகி ஹிஜாப்பை அகற்றச் சொல்லிக் கட்டாயப்படுத்தியிருப்பது கண்டனத்திற்குரியது. நல்லிணக்கத்திற்குத் தீங்கு விளைவிக்க முயன்ற அந்த நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார். 

 

அதேபோல, சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் தேனாம்பேட்டையில் உள்ள எஸ்ஐிஇடி கல்லூரி வாக்குச்சாவடியில் வாக்களித்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த போது, இந்த விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், பாஜகவின் இம்மாதிரியான செயல்பாடுகளுக்கு எதிராக குரல் கொடுத்து வருவதாகவும், தமிழ்நாட்டு மக்களும் இதனை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்றும் கூறினார்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

படையெடுக்கும் புலிகள்; பாதுகாப்பு வளையத்தில் மூணாறு !

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Invading Tigers; Munnar in the observation ring

கோடை வெயிலின் தாக்கத்தால் வனப்பகுதியை விட்டு வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக கிராமங்களுக்கு நுழைவது தொடர்கதையாகி வருகிறது. வனத்துறை சார்பில் வனவிலங்குகளுக்கு தண்ணீர் தொட்டிகள் திறக்கப்பட்டு வரும் நிலையில் அதையும் மீறி பல்வேறு இடங்களில் யானை, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி உணவிற்காக கிராமங்களுக்குள் நுழைவது வாடிக்கையாகி வருகிறது.

அண்மையில் மயிலாடுதுறையில் புகுந்த சிறுத்தை தற்பொழுது வரை மர்மமாகவே நீடித்து வருகிறது. இந்நிலையில் தமிழக-கேரள எல்லையான மூணாறு பகுதியில் சர்வ சாதாரணமாக புலி நடமாட்டம் இருப்பது அந்த பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கன்னிமலா பகுதியில் உள்ள தேயிலை எஸ்டேட் பகுதியில் புலிகள் நடமாட்டம் இருப்பதாக தோட்டத் தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தற்போது இது தொடர்பாக வெளியாகி உள்ள வீடியோ ஒன்றில் மூன்று புலிகள் தேயிலை எஸ்டேட் பகுதியில் இருந்து வனப்பகுதிக்குள் நுழைவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த புலிகளை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் இறங்கியுள்ளனர். புலிகள் நடமாட்டம் இருப்பதால் அந்தப் பகுதி மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறை சார்பில் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.

Next Story

“பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல; தீராத வன்மம்” - சு.வெங்கடேசன்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
BJP unending anger towards Tamil Nadu says Su. Venkatesan

திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களும் அதிக கனமழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதே சமயம் மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் கோரி தமிழக முதலமைச்சரும், தலைமைச் செயலாளரும் மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் அனுப்பியும் மத்திய அரசு  நிதி வழங்காமல் இருந்தது. இந்த நிலையில்,  தமிழ்நாட்டில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூ.285 கோடியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், தமிழகத்தில் 2023 டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்காக ரூ.397 கோடி வழங்கவும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

அதில் முதற்கட்டமாக ரூ.285 கோடி மிக்ஜாம் புயல் பாதிப்புக்கான நிதியில் இருந்து ரூ.115 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே போல், வெள்ள பாதிப்புக்காக மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ள ரூ.397 கோடி நிதியில் இருந்து ரூ.160 கோடியை தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே சமயம் கர்நாடகாவிற்கு வறட்சி நிவாரணமாக ரூ.3,454 கோடியை மத்திய அரசு அறிவித்துள்ளது.

மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்காக தமிழ்நாடு அரசு ரூ.38,000 கோடி நிவாரணம் வழங்க கோரியிருந்த நிலையில், மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு குறைந்தபட்ச அளவில் நிவாரண நிதி வழங்கியுள்ளதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மதுரை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சு.வெங்கடேசன் பாஜக தமிழகத்திற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை செய்வதாக குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கர்நாடகாவில் முதல் கட்டம் சாதகமாக இல்லை போல, வறட்சி நிவாரணம் என ரூ.3454 கோடி அறிவிப்பு. தமிழ்நாட்டிற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை. மிக் ஜாம் புயல் மற்றும் வெள்ளத்திற்கு ரூ.275 கோடி மட்டுமே. தமிழ்நாடு  கேட்டதோ 38,000 கோடி. பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல… வன்மம். தீராத வன்மம்” எனக் கடுமையாக சாடியுள்ளார்.