Skip to main content

மருத்துவ ஆராய்ச்சிகளுக்கான வழிமுறைகள் கோரிய வழக்கில் மத்திய- மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

Published on 23/09/2020 | Edited on 23/09/2020

 

state and union governments chennai high court order

 

 

மருத்துவ ஆராய்ச்சிகளுக்கான அரசின் உதவிகளுக்கு தெளிவான வழிகாட்டு விதிமுறைகளை வகுக்கக்கோரி பிரபல இதய நோய் அறுவை சிகிச்சை நிபுணர் செரியன் தாக்கல் செய்த மனுவில், எதிர்மனுதாரராக சேர்க்கப்பட்டிருந்த பிரதமர் அலுவலக செயலரின் பெயரை நீக்கிய சென்னை உயர்நீதிமன்றம், மனுவுக்கு பதிலளிக்க மத்திய- மாநில அரசுகளுக்கு அக்டோபர் 28- ஆம் தேதி வரை அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

 

பிரபல இதய நோய் அறுவை சிகிச்சை நிபுணர் செரியன் தாக்கல் செய்த மனுவில், இந்திய மருத்துவத் துறையை உலகத்தரத்திற்கு முன்னேற்றும் வகையில் எடுக்கும் மருத்துவ ஆராய்ச்சிகளுக்கு அரசு ஒப்புதல் வழங்குவதில் ஏற்படும் தாமதம், வங்கிகளின் கடுமையான நடைமுறைகள், ஆராய்ச்சிகளை மேற்கொள்ள முடியாமல் போவதற்கு காரணமாகும். பிரதமரின் ஆலோசனைப்படி, இந்த விவகாரத்தை நிதி ஆயோக்கின் கவனத்துக்கு கொண்டு சென்றேன்.  இதுகுறித்து விவாதித்த நிதி ஆயோக், அரசு அமைப்புகளுக்கு பல்வேறு பரிந்துரைகள் அனுப்பியுள்ள போதும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த விவகாரத்தில் தலையிட்டு, எதிர்காலத்தில் இளம் விஞ்ஞானிகள் இதுபோன்ற சிக்கல்களை எதிர் கொள்ளாத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

இந்த மனு, நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசின் பல்வேறு துறைகள் சம்பந்தப்பட்டுள்ளதால், மனுவுக்கு பதிலளிக்க அவகாசம் வழங்க வேண்டும். அதுபோல, எதிர்மனுதாரராக சேர்க்கப்பட்டுள்ள பிரதமர் அலுவலக செயலரின் பெயரை நீக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

 

இந்த கோரிக்கையை ஏற்று, வழக்கில் பிரதமர் அலுவலக செயலாளரின் பெயரை நீக்கிய நீதிபதிகள், வழக்கில் பதிலளிக்க, மத்திய- மாநில அரசுகள், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் நிதி ஆயோக்-குக்கு அக்டோபர் 28- ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்