Skip to main content

அமெரிக்க ‘தமிழர் விழா ’வில் மு.க.ஸ்டாலின் மற்றும் மா.ஃபா. பாண்டியராஜன்....

Published on 20/06/2018 | Edited on 20/06/2018

அமெரிக்காவில் விமர்சியாகக் கொண்டாடப்படவிருக்கும் தமிழ்ச்சங்கப் பேரவை விழாவில் கலந்து கொள்ள அடுத்த வாரம் அமெரிக்கா செல்லவிருக்கிறார் திமுக செயல் தலைவரும் தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின். இந்த விழாவில், ஆளும் கட்சி சார்பில் தமிழக தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜனும் கலந்து கொள்வது தமிழ் உணர்வாளர்களால் ஆரோக்கியமாகப் பார்க்கப்படுகிறது.  

 

stalin


 

அமெரிக்காவில் கடந்த 30 ஆண்டுகளாக தமிழ் வளர்ச்சிக்கான பணிகளை முன்னெடுத்துச் செவ்வனே செயல் பட்டுக்கொண்டிருக்கிறது வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை.  அமெரிக்கத் தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பாக இயங்கி வருகிறது இப்பேரவை. உலகத் தமிழர்களையும் தமிழ்ச்சங்கங்களையும் ஒருங்கிணைக்கும் பாலமாகவும் இப்பேரவை செயலாற்றிக் கொண்டிருக்கிறது.


அந்த வகையில், ‘வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை, உலக நாடுகளின் பல்வேறு அரசியல் தலைவர்களின் நன்மதிப்பை பெற்றதாகும். அமெரிக்கத் தமிழர்களிடமும் உலகத்தமிழர்களிடமும் தமிழ் மொழியின் கலையையும், பண்பாட்டையும் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் முகமாக இன உணர்வுகளை வளர்த்து வருகிறது பேரவை’ என்கிறார்கள் தமிழ்த் தேசியத் தலைவர்கள்.

 

 


பேரவை ஆரம்பித்து 30 ஆண்டுகள் முடிவுற்ற நிலையில் 31-வது ஆண்டு துவக்க விழாவை வருகிற ஜூன்-29, ஜூன்-30, ஜூலை-1 ஆகிய மூன்று நாட்கள்  நடத்துகின்றனர். டெக்சாஸ் மாநிலத்திலுள்ள டல்லாஸ் நகரத்திலிருக்கும் ப்ரிஸ்கோ என்கிற இடத்தில், தமிழர் மரபு, மகளிர், மழலை எனும் தலைப்பில் பிரமாண்டமாக நடைபெற உள்ளது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தமிழர்கள் அமெரிக்காவில் குவியவிருக்கிறார்கள். கிட்டத்தட்ட 1 லட்சத்துக்கும் அதிகமானோர் விழாவில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


முதல் நாள் விழாவாக அமெரிக்கத் தமிழ் தொழில் முனைவோர் மாநாடும், இரண்டாம் நாள் அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்கள் பங்குப் பெறும் இயல், இசை, நாடக நிகழ்ச்சிகளும், மூன்றாம் நாள் இந்திய-தமிழக அரசியல், கலை, சமுதாய நலன் சார்ந்த விவாதங்களும் நடைபெறவிருக்கின்றன.

 

 


ஒவ்வொரு ஆண்டும் தமிழ் வளர்ச்சிக்கான ஒரு மையப்பொருளை எடுத்தாள்வது விழாவின் நோக்கம். அந்த வகையில், இந்த ஆண்டு, ‘ செம்மொழி இருக்கைச் செய்வோம் ; செம்மொழி சிறக்கச் செய்வோம் ’ எனும் மையக்கருத்துடன் விழாவை நடத்த திட்டமிட்டுள்ளனர். தாய்த்தமிழ் வளர்ச்சிக்கும் தமிழர் தம் நல்வாழ்விற்கும் உழைத்திட்டப் பெருமக்களை, நினைவு கூர்ந்து சிறப்புச் செய்வது பேரவையின் வழக்கம். இந்தாண்டு அந்நிய மண்ணில் இன வெறிக்கு எதிராகப் போராடிய இரும்பு மங்கை தில்லையாடி வள்ளியம்மையின் 120-ஆம் ஆண்டு பிறந்தநாள் மற்றும் ஈழத்தந்தை செல்வாவின் 120-ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவையும் சிறப்பிக்கவிருக்கிறார்கள்.


பேரவையின் ஒருங்கிணைப்பாளர் கால்டுவேல் வேள்நம்பி, ‘ஆயிரக்கணக்கான தமிழர்கள் கலந்துகொள்ளும் விழாவாக நடைபெறவிருக்கிறது தமிழர் விழா. தமிழகத்திலிருந்து அரசியல் தலைவர்கள், கலை மற்றும் மருத்துவம் சார்ந்த பிரபலங்கள், தொழில் முனைவோர், தொழிலதிபர்கள், கல்வியாளர்கள், திரைப்பட பிரபலங்கள் கலந்து கொள்ள இசைவு தெரிவித்துள்ளனர். இனம் மற்றும் மொழியின் வளர்ச்சிக்கான ஆலோசனைகள் இந்த விழாவில் விரிவாக விவாதிக்கப்படும்’ என்றார்.

 

 


இவ்விழாவில் கலந்துகொள்ளத்தான் அடுத்த வாரம் மு.க.ஸ்டாலின், மாஃபா பாண்டியராஜன் அமெரிக்கா செல்கின்றனர். மேலும் இவ்விழாவில் வேலூர் பல்கலைக்கழக வேந்தர் விஸ்வநாதன், பேராசிரியர் ஞானசம்மந்தன், கவிஞர் ஈரோடு தமிழன்பன், வழக்குரைஞர் அருள்மொழி, ஐசரிகணேஷ், நடிகர் கார்த்திக், பாடகர், பாடகிகள், இசைக் கலைஞர்கள்  உள்ளிட்ட பலரும் கலந்துகொள்கின்றனர். பேரவையின் செயல்பாட்டினை ஊக்குவிக்கும் முகமாக, தமிழர்கள் பெரிதும் போற்றும் தை மாதத்தை, ‘தமிழ் மரபு மாதம்’ என அறிவித்துள்ளது அமெரிக்க அரசாங்கம். தமிழுக்குக் கிடைத்த பெரிய அங்கீகாரம் என்றனர் விழாக்குழுவினர். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்