Skip to main content

’அடுத்தது ஜனாதிபதியிடம் சொல்லப்போகின்றோம். அதற்கடுத்து நிச்சயமாக சட்டப்படி நடவடிக்கை'- மு.க.ஸ்டாலின் 

Published on 15/01/2019 | Edited on 15/01/2019
k

 

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் , இன்று (14-01-2019) கொடநாடு கொலை - கொள்ளை விவகாரம் தொடர்பாக உரிய விசாரணை நடத்திட வேண்டி  தமிழக ஆளுநரைச் சந்தித்து நேரில் வலியுறுத்தினார். பின்னர், ஸ்டாலின்  செய்தியாளர்களிடத்தில் பேசியபோது, 


’’தெகல்கா பத்திரிகையினுடைய முன்னாள் ஆசிரியர் மேத்யூ அவர்கள் இரண்டு நாட்களுக்கு முன்பு டெல்லியில், வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கின்றார். அந்த வீடியோவில் வெளிவந்த செய்திகளைப் பற்றியெல்லாம் உங்களுக்கு மிகத் தெளிவாக தெரிந்திருக்கும். எனவே, அது சம்பந்தமாக தமிழக ஆளுநர் அவர்களை திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நாங்கள் சந்தித்து ஒரு மனு ஒன்றை அவரிடத்தில் வழங்கியிருக்கின்றோம். அந்த மனுவில் கூறப்பட்டிருக்கக்கூடிய சில முக்கியமான வேண்டுகோளை உங்களிடத்தில் நான் எடுத்துவைக்க விரும்புகின்றேன்.

 

ஒரு நேர்மையான ஐ.ஜி தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்க வேண்டும். பாரபட்சமற்ற சுதந்திரமான விசாரணை  நடைபெற வேண்டும் என்று சொன்னால், முதலமைச்சர் பதவியில் இருக்கக்கூடிய எடப்பாடி பழனிசாமியை உடனடியாக அந்தப் பதவியில் இருந்து நீக்கி வைக்க வேண்டும்.

 

அதுமட்டுமல்ல, முதலமைச்சர் மீதே கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருக்கின்றது. ஆகவே, இந்தத் தகவலை உடனடியாக ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் எடுத்துச் சொல்லியிருக்கின்றோம். இந்த கொடநாடு பங்களா என்பது ஏதோ தனியார் இடமாக இருந்திடவில்லை. முதலமைச்சராக இருந்து மறைந்த அம்மையார் ஜெயலலிதா அவர்களுடைய முகாம் அலுவலகமாக இருந்து செயல்பட்டிருக்கிறது என்பது இந்த நாட்டிற்கு நன்றாகத் தெரியும். அங்கே, அரசு சம்பந்தப்பட்ட கோப்புகள் கூட இருந்திருக்கின்றது. ஆகவே, நடைபெற்றிருக்கக்கூடிய கொலை – கொள்ளையில் முதலமைச்சராக இருக்கக்கூடிய எடப்பாடி பழனிசாமியினுடைய பெயரை குற்றவாளிகளே சம்பந்தப்படுத்தி அவர் தான் காரணம் என்று தெளிவாகச் சொல்லியிருக்கின்றார்கள்.

 

எனவே, சம்பந்தப்பட்டிருக்கக் கூடியவரை அழைத்து விசாரணை நடத்தாமல் யார் குற்றம் சொல்லியிருக்கின்றார்களோ, அவர்களை சென்னையில் இருந்து நேற்று இரவு காவலர்கள் தனிப்படைச் சென்று இரண்டு பேரை கைது செய்து கொண்டுவந்து விசாரித்துக் கொண்டிருப்பதாக செய்திகள் வந்திருக்கின்றன. கனகராஜ் மரணம் ஒரு விபத்துதான் என்று இந்த வழக்கை ஏற்கனவே, விசாரித்த எஸ்.பி முரளி ரம்யாவை, முதல்வர் தான் அழுத்தம் கொடுத்து இன்றைக்கு இது சம்பந்தமாக பேட்டியளிக்க வைத்திருக்கின்றார்கள். ஆகவே, இந்தக் கொலை வழக்கில் எஞ்சியிருக்கக்கூடிய தடயங்களை அழிப்பதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஈடுபட்டிருக்கின்றார்.

 

அதற்கு, காவல்துறையை அவர் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றார். கொடநாடு கொலை – கொள்ளைகளுக்குப் பிறகு அடுத்தடுத்து கனகராஜ், தினேஷ்குமார் போன்றவர்களுடைய மரணங்கள், முக்கியமான குற்றவாளியான சயன் போன்றவருடைய விபத்துகள் எல்லாம் இயற்கையான விபத்துகளா? என்கின்ற அந்தக் கேள்வியும் எழுந்திருக்கின்றது.

 

ஆகவே, கொலை குற்றச்சாட்டிற்கு உள்ளாகி இருக்கக்கூடிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் இன்னும் பதவியில் நீடிப்பது என்பது தமிழகத்திற்கு ஒரு மிகப்பெரிய அவமானம். எனவே, அவர் உடனடியாக பதவி விலகி பாரபட்சமற்ற விசாரணை நடத்துவதற்கு ஒத்துழைப்பு தரவேண்டும் என்று நாங்கள் கேட்டிருக்கின்றோம். இவைகளையெல்லாம், ஆளுநர் அவர்கள் கூர்ந்து கேட்டார். அதை முழுமையாக படித்திருக்கின்றார். நான் என்ன நடவடிக்கை எடுக்க முடியுமோ அந்த நடவடிக்கையை நிச்சயமாக எடுப்பேன் என்ற உறுதியை எங்களிடத்தில் அவர் தந்திருக்கின்றார். 

 

செய்தியாளர்: இந்த வீடியோ வெளியான அடுத்த நாளே முதலமைச்சர் ஒரு விளக்கம் கொடுத்திருக்கின்றார். அரசியல் காரணமாக இந்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது. இதன் பின்புலம் என்ன யார் இருக்கின்றார்கள் என்று கூடியவிரைவில் கண்டறியப்படும் என்று சொல்லியிருக்கின்றார். இது குறித்து உங்களின் பதில்?


ஸ்டாலின்: பின்புலத்தில் யாரும் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. இதன் பின்புலத்தில் எடப்பாடி பழனிசாமி தான் இருக்கின்றார். அதுதான் எங்களுக்குத் தெரிந்த உண்மை. எனவே, நாங்கள் பின்னால் இருந்து எதுவும் சொல்ல விரும்பவில்லை, வெளிப்படையாக அறிக்கை வெளியிட்டிருக்கின்றேன். வெளிப்படையாக உங்களைப் போன்ற ஊடகத் தோழர்களையெல்லாம் நேற்றைய தினம் அண்ணா அறிவாலயத்திற்கு அழைத்து பேட்டி கொடுத்திருக்கின்றேன். பின்னால், இருந்து இதை யாரும் இயக்கிக் கொண்டிருப்பதாக நான் கருதவில்லை. இந்தப் பின்னணியே எடப்பாடி பழனிசாமி தான்.

 

செய்தியாளர்: வழக்கைப் பொறுத்தவரைக்கும் 22 முறை நீதிமன்ற விசாரணைக்கு வந்திருக்கின்றது, சயன் மற்றும் மனோஜ் நீதிமன்ற விசாரணைக்கு வந்திருக்கும் போதே என்னுடைய பெயரை சொல்லியிருக்கலாம். ஆனால் இப்போது சொல்வது யாருடைய தூண்டுதல் என்று கேட்டிருக்கிறாரே?


ஸ்டாலின்: குற்றவாளிகளாக இருந்து  கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் இருக்கும் அந்த இருவருமே நேற்றைக்கு முன்தினம் தெளிவாக பேட்டி கொடுத்திருக்கின்றார்களே.

 

செய்தியாளர்: ஆளுநர் குடியரசுத் தலைவரிடத்தில் இதுகுறித்து தெரிவித்து முறையான நடவடிக்கை எடுக்காவிட்டால் தி.மு.க.,வின் அடுத்தகட்ட நவடிக்கை என்னவாக இருக்கும்?

ஸ்டாலின்: பொறுத்திருந்து பார்ப்போம். ஆளுநர் அவர்கள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி தந்திருக்கின்றார். நடவடிக்கை எடுக்கவில்லை என்று சொன்னால் தேவைப்பட்டால் குடியரசுத் தலைவர் அவர்களை எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேரில் சந்தித்து விளக்கிச் சொல்வார்கள். சட்டப்படி நடவடிக்கை எடுப்பதற்கும் தி.மு.க தயாராக இருக்கின்றது.

 

செய்தியாளர்: நாடாளுமன்றத் தேர்தல் வரவிருக்கும் சூழ்நிலையில், அ.தி.மு.க அரசை பி.ஜே.பி அரசு கூட்டணி வைப்பதற்காக மிரட்டும் தொணியில் செயல்படுவதாக எடுத்துக் கொள்ளலாமா?

ஸ்டாலின்:  உங்களுடைய யூகமான கேள்விகளுக்கெல்லாம் என்னால் பதில் சொல்ல முடியாது. இது ஒரு மிகப்பெரிய கொலை வழக்கு. இந்த கொலைக்குக் காரணமான குற்றவாளியைத் தான் கண்டுபிடிக்க வேண்டும்.

 

செய்தியாளர்: இந்த வழக்கில் நீதிமன்றத்தை நாடுவீர்களா? ஏனென்றால் பல வழக்குகளில், நீதிமன்றம் மூலமாக விசாரணையை மாற்றியுள்ளீர்களே?

ஸ்டாலின்:                                  : ஏற்கனவே, பலபேர் இதுகுறித்து நீதிமன்றத்திற்குச் சென்றிருப்பதாக செய்திகள் வந்திருக்கின்றன. நாங்கள் முறையாக கவர்னரிடத்தில் சொல்லியிருக்கின்றோம். அடுத்தது ஜனாதிபதியிடம் சொல்லப்போகின்றோம். அதற்கடுத்து நிச்சயமாக சட்டப்படி நடவடிக்கை எடுப்பது பற்றி தி.மு.கழகம் முடிவு செய்யும்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

“ஜனநாயகமா? சர்வாதிகாரமா?” - கனிமொழி ஆவேசம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Kanimozhi obsession on modi and she questioned Democracy? Dictatorship? for lok sabha election

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் கனிமொழி, நேற்று (16/04/2024) ஶ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆழ்வார்திருநகரி பேரூராட்சியில் பொதுமக்களிடம் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது, தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க செயலாளரும், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சருமான அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, இந்தியா கூட்டணி சார்ந்த நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்த தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய கனிமொழி, “அம்மையார் ஜெயலலிதா ஒருமுறை சொன்னது போல் பரம்பரை பகைக்கான தேர்தல் தான் இது. சமூக நீதிக்கும் சமூகத்தின் அநீதிக்கும் இடையே நடக்கும் தேர்தல். ஜனநாயகத்தைக் காப்பாற்ற வேண்டிய தேர்தல். ஜனநாயகமா? சர்வாதிகாரமா? என்பதை முடிவு செய்ய வேண்டிய தேர்தல் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். ஜனநாயகத்தின் மீது பா.ஜ.க.விற்கோ நரேந்திர மோடிக்கோ துளியும் நம்பிக்கை கிடையாது. 

பாராளுமன்றத்திற்கே வராத பிரதமர் என்ற பெருமை இருக்கிறது என்றால் பிரதமர் நரேந்திர மோடியையே சேரும். என்றாவது ஒருநாள் அவர் பாராளுமன்றத்தில் பேசுகிறார் என்றால் அவரது சாதனைகளையும் எதிர்க்கட்சிகளின் குறைகளையோ பேசுவதில்லை. யார் என்ன கேள்வி கேட்டாலும், முதலில் பிரதமர் மோடி, ஜவஹர்லால் நேரு கிட்ட சண்டை போடுவார். பெட்ரோல் விலை ஏன் ஏறியது எனக் கேட்டாலும், என்ன கேள்வி கேட்டாலும் ஜவஹர்லால் நேருவிடமிருந்து ஆரம்பிப்பார். எதிர்க்கட்சியினர் அவரை எதிர்த்து கேள்வி கேட்டதால், அனைவரும் வெளியேற்றப்பட்டோம்.

Kanimozhi obsession on modi and she questioned Democracy? Dictatorship? for lok sabha election

எந்த விவாதத்திலும் அவருக்கு நம்பிக்கை கிடையாது. பத்திரிகையாளர்களை அவர் சந்திப்பதில்லை. சமூக செயல்பாட்டாளர்கள் கேட்டால் அவர்கள் மீது வழக்கு. மலைவாழ் மக்களுக்காக தனது வாழ்நாள் முழுவதும் உழைத்த 92 வயது முதியவரைத் தீவிரவாதி என வழக்குப் போட்டு சிறையில் அடைத்தனர். தமிழகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பெயில் கிடையாது. பா.ஜ.க.வில் உள்ள வாஷிங்மெஷினில் அக்கட்சியில் சேருபவர்கள் சுத்தம் செய்யப்படுகிறார்கள். எதிர்க்கட்சியினரை சிறையில் போடுவார்கள்.

விவசாயிகள் டெல்லிக்குள் வந்து விடக்கூடாது என்று ட்ரோன் மூலம் கண்ணீர் புகைக்குண்டு, ரோட்டில் ஆணியை பதித்துக் கொண்டு விவசாயிகளைத் தடுக்கும் ஆட்சிதான் நரேந்திர மோடி ஆட்சி. மதத்தை வைத்து, ஜாதியை வைத்து மக்களை பிரிக்கக் கூடிய ஆட்சி. ஜிஎஸ்டி போட்டு சின்ன சின்ன கடைகள், சின்ன சின்ன வியாபாரிகள், சிறு, குறு தொழில்கள் என எல்லாத்தையும் நாசமாக்கி பலரைக் கடையை மூட வைத்த ஆட்சி பா.ஜ.க ஆட்சி.

தமிழகத்தில் ஜிஎஸ்டி வரியை எல்லாம் கொண்டு போய் ஒரு ரூபாய் வாங்கிக்கொண்டு 29 பைசா மட்டுமே தரப்படுகிறது. ஆனால், பா.ஜ.க ஆட்சி செய்யும் மாநிலங்களுக்கு 3 ரூபாய் முதல் 7 ரூபாய் என வழங்கப்படுகிறது. ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெள்ள பாதிப்புகளைப் பார்வையிட வந்து எந்த நிவாரணமும் வழங்கப்படவில்லை. வெள்ளத்தில் வீடுகள் இடிந்த போது கவலைப்படவில்லை. ஆனால், கோவிலில் உண்டியலில் காசு போடாதீர்கள் தட்டில் போடுங்கள் என அறிவுரை வழங்குகிறார்.

தமிழகத்திற்கு வஞ்சனை செய்யக்கூடிய ஆட்சி பா.ஜ.க ஆட்சி. வெள்ள பாதிப்பு ஏற்பட்ட போது இங்கு வராத மோடி, தேர்தல் வந்ததும் தமிழகத்தை சுற்றிச் சுற்றி வருகிறார். பா.ஜ.கவிற்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் ஓட்டுப் போட்டுவிடக்கூடாது. பா.ஜ.க கொண்டு வந்த சட்டங்களுக்கு ஆதரவாக வாக்களித்த அ.தி.மு.க.விற்கும் சரியான பாடம் புகட்ட வேண்டும்.

பெண்களுக்கு எதிராக குற்றங்களைப் புரியும் 44 பேர் எம்.பி.யாக பா.ஜ.க.வில் உள்ளனர்.  பா.ஜ.க எம்.பிக்கு எதிராகப் போராடிய மல்யுத்த வீராங்கனைகள் மீது வழக்குகள் போடப்பட்டது. தவறு புரிந்த அவர் மீது எந்த வழக்கும் போடவில்லை. ஹிந்தி படிக்க வேண்டும் என்று சொன்ன மோடி, தேர்தல் வந்ததும் தமிழ் படிக்க வேண்டும் என்கிறார்.  மக்களுக்கு எதிராக ஆட்சி செய்யக்கூடிய பாஜக புறக்கணிக்கப்பட்டு, வீட்டுக்கு அனுப்பப்பட வேண்டும். இந்த நாட்டுக்கு அவர்கள் தேவையில்லை என்பதை மக்கள் புரிய வைக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

Next Story

'திமுக ஆட்சிபோல் மத்தியிலும் வரவேண்டும்' - தீவிர பரப்புரையில் கனிமொழி

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
'DMK must come to the center as a government' - Kanimozhi in intense lobbying

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

தூத்துக்குடியில் போட்டியிடும் கனிமொழி, அங்குள்ள பசுவந்தனை பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், ''பெரும்பான்மையான இந்து மக்களை ஏமாற்றி நாங்கள் தான் உங்களுக்கு எல்லா உதவியும் செய்வோம் என்று சொல்கிறார்களே தவிர, அந்த மக்களுக்கு வேலை கூட கிடைப்பதில்லை. 2 கோடி இளைஞர்களுக்கு வேலை வாங்கித் தருகிறேன் என்று சொல்லி மோடி ஆட்சிக்கு வந்தார். போய் கேட்டால் பக்கோடா போடுங்க அதுவும் வேலை தான் என்கிறார். இப்படிப்பட்ட ஆட்சி முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும். எல்லா மக்களையும் அரவணைத்து நடக்கக்கூடிய ஆட்சி நம்முடைய திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி. அதே போன்ற ஒரு ஆட்சியை ஒன்றியத்தில் உருவாக வேண்டும்.

இந்தியா கூட்டணி ஆட்சி என்ற ஒன்றுதான் இந்த நாட்டின் மக்களை பாதுகாக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அப்படி பாதுகாக்கக் கூடிய ஆட்சியை நாம் அங்கே உருவாக்க வேண்டும். நம்முடைய ஆட்சி ஒன்றியத்தில் வந்தவுடன் கேஸ் சிலிண்டர் விலை 500 ரூபாய். அதேபோல பெட்ரோல் 75 ரூபாய்க்கு வழங்கப்படும். அதேபோல் டீசல் 65 ரூபாய்க்கு வழங்கப்படும். விவசாயக் கடன்,கல்விக் கடன் ரத்து செய்யப்படும். டோல்கேட் எல்லாம் அகற்றப்படும். இதெல்லாம் நம்முடைய முதலமைச்சர் தந்திருக்கும் வாக்குறுதி. இவற்றையெல்லாம் நிறைவேற்ற வேண்டுமென்றால் நீங்கள் என்ன செய்ய வேண்டும் ஓட்டு போட வேண்டும். வெயிலாக இருக்கிறது என வீட்டில் உட்கார்ந்து இருக்கக் கூடாது. நம்முடைய ஜனநாயக கடமையாக ஓட்டு போட வேண்டும். அதேபோல் தூத்துக்குடியில் உங்களுக்காக மீண்டும் பணியாற்றக்கூடிய வாய்ப்பை எனக்கு நீங்கள் அளிக்க வேண்டும்''என்றார்.