Skip to main content

‘காசெல்லாம் இல்ல... நிலக்கடலை கொடு..’ - பட்டாணிக் கடையில் உதவி ஆய்வாளர் அட்ராசிட்டி

Published on 04/07/2024 | Edited on 04/07/2024
special sub inspector asked for free groundnuts at a pea shop

திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் ராஜகோபுரம் அருகே பட்டாணிக் கடை வைத்திருப்பவர் ராஜன் பிரேம்குமார். இவர் அனைத்து வணிகர்கள் நலச் சங்க மாவட்டத் தலைவராக உள்ளார். இந்நிலையில், கடந்த திங்கள்கிழமை இவரது கடைக்குச் சென்ற ஸ்ரீரங்கம் காவல் நிலைய எஸ்எஸ்ஐ ராதா, அங்கு வேலை பார்த்த பணியாளரிடம்  வறுத்த நிலக்கடலை கேட்டுள்ளார். அப்போது, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்படவே, கடைக்குள் இருந்தபடியே நபர் ஒருவர் ரகசியமாக வீடியோ எடுத்துள்ளார்.

அந்த வீடியோவில், நான் ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில்தான் பணிபுரிகிறேன். வேறு ஸ்டேஷனிலிருந்தா வந்து கேட்கிறேன். கொஞ்சம் கொடுப்பா என கெஞ்சலாக கேட்கிறார். அதற்கு, கடையில் இருந்த சிறுவன்.. நீங்க கேட்டீங்க ஆனா காசு தரலயே சார்.. எனச் சொல்கிறார். ஆமா, கொஞ்சமாதான கேட்டேன்.. அதுக்கென்ன காசு.. தம்பி இவ்ளோ மோசமா இருந்தா வாழ முடியாது.. நானும் கஷ்டப்பட்டுத்தான் இந்த நிலமைக்கு வந்திருக்கேன்.. யாரையும் ஏமாத்தி மேல வரல.. எனக் கூறிக்கொண்டே அவர் கடையை விட்டுச் செல்கிறார். அப்போது, அவர் கடலையை வாங்கிவிட்டுத்தான் செல்கிறார் எனச் சொல்லப்படுகிறது. அந்தப் பக்கம் போலீஸ்காரர் ராதா போனதும், இந்தப் பக்கம் இருக்கும் நபர் ஒருவர்,, வீடியோ எடுத்தாச்சு எனச் சொல்ல, கடை முதலாளி, வீடியோ எடுத்துட்டியா எனக் கேட்க, அந்த வீடியோ அத்துடன் முடிகிறது.

இதுகுறித்து, பட்டாணி கடை உரிமையாளரும் மாவட்ட வணிகர் சங்கத் தலைவருமான ராஜன் பிரேம்குமார் வீடியோ ஆதாரத்துடன், திருச்சி மாநகர காவல் ஆணையர் என்.காமினியிடம் புகார் செய்தார். இதையடுத்து, எஸ்எஸ்ஐ ராதாவை பணியிடை நீக்கம் செய்து ஆணையர் என்.காமினி அதிரடி உத்தரவிட்டார்.

இந்நிலையில், இதுகுறித்து சக போலீஸார் கூறும்போது, "SSI ராதா கொஞ்சம் வெகுளியானவர். யாரிடம் எப்படி பேச வேண்டும் என்று கணக்கு போட்டு பேசத் தெரியாது. அவர் செய்தது தவறாக இருப்பினும், அவர் மீது புகார் அளித்தபின்னர், அந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் வேண்டுமென்றே பரப்பியுள்ளனர்’’ என்று தெரிவித்தனர். ஏற்கெனவே கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் காவல்துறை அதிகம் விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில், இதுபோன்ற செயல்பாடுகள் காவல்துறை மீது கலங்கத்தை மட்டுமே ஏற்படுத்தும். அதனால், காமினி மேடம் எடுத்த முடிவு சரியானதே என்கின்றனர் மற்றொரு தரப்பைச் சேர்ந்த காவல்துறையினர்.

சார்ந்த செய்திகள்

 

Next Story

அதிகாரிகள் முன்னிலையில் தீக்குளித்த இளைஞருக்கு நேர்ந்த சோகம்!

Published on 07/07/2024 | Edited on 07/07/2024
Tragedy of the young man who set himself on fire in front of the authorities in gummidipoondi

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி கோட்டக்கரை பகுதியைச் சேர்ந்தவர் கல்யாணி.  இவர், சிமெண்ட் கூரை அமைத்து தங்கி இருக்கும் இடத்தை செல்வந்தர் ஒருவர் தானமாகக் கொடுத்தாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கல்யாணி வீட்டின் பின்புறம் புதிதாக உருவாக்கப்பட்ட வீட்டுமனையில் குடியேறிய சிலர் தங்கள் குடியிருப்புக்குச் செல்லும் பாதையில் ஆக்கிரமித்து கல்யாணி குடும்பத்தினர் வீடு கட்டி இருப்பதாகப் புகார் கொடுத்துள்ளனர். இதன் பேரில் அப்போதைய வட்டாட்சியர் கண்ணன் நேரடியாகச் சென்று விசாரணை மேற்கொண்ட போது அந்த இடம் தானமாகக் கொடுத்த தனி நபர் ஒருவரின் பெயரில் பட்டா இருப்பதாகக் கூறி சம்பந்தப்பட்ட இரு தரப்பினரும் பிரச்சனையை நீதிமன்றம் சென்று தீர்த்துக்கொள்ளுமாறு கடிதம் மூலம் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், வருவாய்த் துறையினர் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி கல்யாணிக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளனர். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த கல்யாணியின் இளைய மகன் ராஜ்குமார் அதிகாரிகளை நேரடியாகச் சந்தித்து வீட்டை காலி செய்ய ஒரு மாதக்காலம் கால அவகாசம் வேண்டும் என்று கேட்டுள்ளார். ஆனால், திடீரென கல்யாணியின் வீட்டிற்கு மின்வாரியம் மூலம் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த 4ஆம் தேதி காவல்துறையினரின் பாதுகாப்புடன் முன்னறிவிப்பு இன்றி வீட்டை இடிக்க ஜே.சி.பி. இயந்திரத்தை அதிகாரிகள் கொண்டுவந்ததால்,  மன உளைச்சலுக்கு ஆளான ராஜ்குமார், வீட்டை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வீட்டினுள் இருந்தபடியே அதிகாரிகள் முன்னிலையில் உடலில் பெட்ரோல் ஊற்றி தனக்குத்தானே தீ வைத்துக் கொண்டார். 

அப்போது, அங்கிருந்த தீயணைப்பு வீரர்கள் தங்களது கையில் வைத்திருந்த தீயணைப்பான் கருவி மூலம் தீயை அணைத்தனர். 60% தீக்காயங்களுடன் உயிருக்குப் போராடிய ராஜ்குமாரை மீட்டு மேல்சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராஜ்குமார் இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். உரியக் கால அவகாசம் வழங்காமல் ஆக்கிரமிப்பை அகற்ற சென்ற அதிகாரிகள் முன்னிலையில் தீக்குளித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story

பாமக பிரமுகருக்கு அரிவாள் வெட்டு; ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி

Published on 06/07/2024 | Edited on 06/07/2024
Scythe cut to a pmk figure in Cuddalore

திருப்பாதிரிப்புலியூர் சூரப்ப நாயக்கன் சாவடி பகுதியை சேர்ந்தவர் சங்கர் என்கின்ற சிவசங்கர். கேபிள் டிவி தொழில் நடத்திவரும் இவர் பாட்டாளி மக்கள் கட்சியில் இருக்கும் நிலையில் கடலூர் நகர முன்னாள் வன்னியர் சங்க தலைவராகவும் செயல்பட்டு வந்துள்ளார். இவர் சனிக்கிழமை(6.7.2024) மாலை தனது வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தபோது இரண்டு சக்கர வாகனத்தில் வந்த நான்கு மரர்ம நபர்கள்  இவரை சரமாரியாக வெட்டியுள்ளனர். அருகில் உள்ளவர்கள் கூச்சல் இடவே அவர்கள் அங்கிருந்து தப்பி சென்ற நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அங்கிருந்தவர்கள் சங்கரை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

தற்பொழுது சங்கருக்கு கடலூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கழுத்து, வாய், முதுகு என பல்வேறு பகுதிகளிலும் வெட்டுக்காயம் உள்ள நிலையில் அவருக்கு தற்போது கடலூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். கடந்த சில தினங்களுக்கு முன்பு வண்டிப்பாளையம் பகுதியில் ஒரு கொலை சம்பவம் நடந்த நிலையில் தற்போது பாட்டாளி மக்கள் கட்சி பிரமுகர் மர்ம நபர்களால் வெட்டப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. சங்கரின் ஆதரவாளர்கள் கடலூர் அரசு மருத்துவமனையில் குவிந்து வருவதால் கடலூரில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் அரசு மருத்துவமனையிலும் சூரப்பநாயக்கன் சாவடி பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். 

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சங்கர் தம்பி பாமக பிரமுகர் பிரபுவை அதே பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சதீஸ், தங்கபாண்டியன், வெங்கடேசன் வெட்டி படுகொலை செய்தனர். இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக இருப்பவர் பிரபுவின் அண்ணன் சங்கர். இதனால் இவர் இன்று வெட்டி படுகொலை செய்ய இருந்ததாக போலீசாரின் விசாரணையில் முதற்கட்ட தகவலாக உள்ளது.