Skip to main content

புறநகர் மின்சார ரயில்கள் ரத்து; சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

Published on 22/09/2024 | Edited on 22/09/2024
Special buses due to Cancellation of suburban electric trains

பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையில் இயக்கப்படும் பயணிகள் மின்சார ரயில் சேவை பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் வசதிக்காகக் கூடுதலாக பேருந்துகள் இயக்கப்படும் என சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாகச் சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “தாம்பரம் ரயில் நிலையத்தில் இன்று (22.09.2024) காலை 07.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இன்று காலை 07.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து தாம்பரம் செல்லும் இரயில்கள் பல்லாவரம் இரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும் எனத் தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. எனவே, அவ்வழித்தடத்தில் பயணம் செய்யும் பயணிகள் நலன் கருதி மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் தற்போது இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாகத் தாம்பரத்திலிருந்து பல்லாவரம் பேருந்து நிலையத்திற்கு 10 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதே போன்று தாம்பரத்திலிருந்து தி.நகர் பேருந்து நிலையத்திற்கு 20 பேருந்துகள் மற்றும் பிராட்வே பேருந்து நிலையத்திற்கு 20 பேருந்துகள் என மொத்தம் 50 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. மேலும் பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும். முக்கிய பேருந்து நிலையங்களில் அலுவலர்களை நியமித்து இப்பேருந்துகள் இயக்கத்தினை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்