Skip to main content

இன்சூரன்ஸ் பணத்தில் பங்கில்லையா? - தாயை கார் ஏற்றிக் கொன்ற மகன்

Published on 04/03/2023 | Edited on 04/03/2023

 

Son incident passed away mother by car tenkasi

 

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே அச்சன்புதூரைச் சேர்ந்தவர் டாக்டர் சங்கர நாராயணன். இவரது மனைவி முருகம்மாள். இந்த தம்பதியருக்கு மோகன், ராம்குமார், உதயமூர்த்தி என மூன்று மகன்கள். இவர்களில் மோகன், ராம்குமாருக்கு திருமணமாகி வெளியூரில் வசிக்கின்றனர். உதயமூர்த்திக்கு திருமணமாகவில்லை. கடந்த 10 ஆண்டுகட்கு முன்பு சங்கர நாராயணன் விபத்தில் பலியானார். எனவே முருகம்மாள் உதயமூர்த்தியுடன் வசித்து வருகிறார்.

 

சங்கர நாராயணன் விபத்து வழக்கு நெல்லை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. அதில் ஆஜராகும் பொருட்டு நேற்று காலை 6.30 மணிவாக்கில் முருகம்மாள் மகன் உதயமூர்த்தியுடன் பைக்கில் நெல்லைக்குச் சென்று கொண்டிருந்தபோது சிவராமபேட்டை செல்லும் சாலையில் டாஸ்மாக் கடையருகே பின்னால் வேகமாக வந்த கார் ஒன்று பைக் மீது பயங்கரமாக மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். பலத்த காயமடைந்த முருகம்மாள் சம்பவ இடத்திலேயே துடிதுடித்துப் பலியானார். படுகாயமடைந்த உதயமூர்த்தியை அக்கம் பக்கத்தினர் மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

 

தகவலறிந்த இலத்தூர் காவல் நிலைய போலீசார் முருகம்மாளின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் இவர்களின் பைக் மீது மோதியது யார் என்று முதற்கட்ட விசாரணை நடத்தியபோது, சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் நடந்ததை போலீசாரிடம் தெரிவித்திருக்கிறாராம். முருகம்மாளும் உதயமூர்த்தியும் சென்ற பைக் விபத்தில் சிக்கவில்லை. திட்டமிட்ட விபத்து என்று தெரிய வரவே போலீசார் முருகம்மாளை கொலை செய்யும் நோக்கில் காரைக் கொண்டு மோதியது யார் என்ற விசாரணையை தீவிரப்படுத்தியிருக்கிறார்கள்.

 

முருகம்மாளுக்கும் அவரது மூத்த மகன் மோகனுக்குமிடையே சொத்துப் பிரச்சினை செங்கோட்டை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. சங்கர நாராயணனின் 2 வீடுகளில் ஒரு வீட்டின் மீது வங்கியில் கடன் பெறப்பட்டுள்ளதாம். நீண்ட காலமாக கடன் திரும்ப செலுத்தப்படாததால் வங்கித் தரப்பு வீட்டை ஜப்தி செய்ய முயன்றபோது, மோகன் அச்சன்புதூரைச் சேர்ந்த ஒருவரிடம் 5 லட்சம் கடன் வாங்கி வீட்டு லோனை அடைத்தவர் அந்தப் பணத்தை தாயிடம் கேட்டு வந்திருக்கிறார்.

 

இந்நிலையல் தந்தை சங்கர நாராயணனின் விபத்து நஷ்டஈடு தொகை வந்தால் அதனை தன்னிடம் தந்து விட வேண்டும் என்று மோகன் தாயிடம் பிரச்சனை செய்திருக்கிறார். முடியாது என தாய் மறுக்க ஆத்திரமான மோகன் நேற்றைய தினம் உதயமூர்த்தியும் முருகம்மாளும் சென்ற பைக்கை பின் தொடர்ந்து சென்று பைக் மீது காரை ஏற்றி விபத்து ஏற்படுத்தியது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து தலைமறைவான மூத்த மகன் மோகன் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர். சொத்திற்காக மகனே பெற்ற தாயை கார் ஏற்றிக் கொன்ற சம்பவம் மாவட்டத்தைப் பதைபதைக்க வைத்திருக்கிறது.

 

 

சார்ந்த செய்திகள்