பிரதமர் நரேந்திர மோடி அனைத்து மாநில முதல்வர்களுடன் காணொளிகாட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். இதில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், மே- 3 ஆம் தேதிக்கு பிறகும் ஊரடங்கை நீட்டிக்கலாமா? வேண்டாமா? என்பது குறித்தும் ஆலோசனை நடத்தியுள்ளார். மேலும் மாநிலங்களில் எடுக்கப்பட்டு வரும் கரோனா தடுப்புப் பணிகள் குறித்தும் பிரதமர் கேட்டறிந்தார். பிரதமருடனான ஆலோசனையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் பங்கேற்று முதல்வர்களுடன் பேசினார்.
பிரதமருடனான ஆலோசனையில் தமிழக முதலமைச்சர் பழனிசாமி, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமை செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் ஆகியோர் பங்கேற்றனர்.
ஆலோசனை கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வர் பழனிசாமி, "தமிழகத்திற்கு மேலும் பி.சி.ஆர். டெஸ்ட் கருவிகளை மத்திய அரசு வழங்க வேண்டும். மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்கான நிதியை உடனே விடுவிக்க வேண்டும். சிறந்த சிகிச்சையால் தமிழகத்தில் கரோனாவால் உயிரிழப்போரின் விகிதம் 1.2% ஆக உள்ளது. கரோனாவால் குணமடைந்து வருவோரின் விகிதம் 54% ஆக உள்ளது.
குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச ரேஷன் பொருட்கள் வழங்க ரூபாய் 1,321 கோடியை விடுவிக்க வேண்டும். சிறு,குறு தொழில்துறை பெற்றுள்ள கடன்களுக்கான வட்டியை ஆறு மாதங்களுக்கு தள்ளுபடி செய்ய பிரதமருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் சிறு, குறு தொழிற்துறையினர் ஜிஎஸ்டி, வருமான வரி செலுத்த ஆறு மாதங்கள் அவகாசம் தர வேண்டும். டிசம்பர்- ஜனவரி மாதத்திற்கான ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை விடுவிக்க வேண்டும்.
விவசாயிகள் நேரடியாக விளைபொருட்களை கொண்டு செல்ல போக்குவரத்து மானியம் வழங்க வேண்டும். 100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு ரொக்கமாக ஊதியம் வழங்க அனுமதிக்க வேண்டும். ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான 2020- 21 ஆம் ஆண்டுக்கான 50% நிதியை விடுவிக்க வேண்டும் என்று பிரதமரை தமிழக முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.