Skip to main content

எட்டு வழிச்சாலைக்கு எதிராக கையெழுத்து இயக்கம்; சேலத்தில் 10 பேர் கைது

Published on 27/09/2018 | Edited on 27/09/2018

 

8way

 

சேலத்தில், விவசாயம் மற்றும் வனவளத்தை அழிக்கும் எட்டுவழிச்சாலைத் திட்டத்தை கைவிடக்கோரி கையெழுத்து இயக்கம் நடத்திய எதிர்ப்பு கூட்டமைப்பைச் சேர்ந்த பத்துக்கும் மேற்பட்டோரை போலீசார் இன்று (செப். 26, 2018) கைது செய்தனர்.

 


சேலம் & சென்னை இடையே எட்டுவழிச்சாலை எனப்படும் பசுமைவழி விரைவுச்சாலைத் திட்டத்தை ரூ.10 ஆயிரம் கோடியில் அமைக்க மத்திய, மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகின்றன. மொத்தம் 277.3 கிலோமீட்டர் தூரத்திற்கு இந்த புதிய வழித்தடம் அமைகிறது. 


இந்த திட்டத்துக்காக சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் 2343 ஹெக்டேர் நிலத்தை கையகப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. இதில் 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட நிலப்பரப்பு சிறு, குறு, நடுத்தர விவசாயிகளுக்குச் சொந்தமான, ஆண்டுக்கு முப்போகம் விளையக்கூடிய விவசாய நிலம். இதனால், எட்டு வழிச்சாலைக்காக நிலம் கையகப்படுத்தும் பணிகளுக்கு ஆரம்பத்தில் இருந்து விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

 


இந்நிலையில், எட்டு வழிச்சாலை எதிர்ப்பு கூட்டமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள், விவசாயிகள் பலர் எட்டு வழிச்சாலைத் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக கைவிடக்கோரி, கையெழுத்து இயக்கம் நடத்த முடிவு செய்தனர். இதற்காக பொதுமக்களிடம் கையெழுத்து பெறுவதற்காக கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் இன்று சேலம் புதிய பேருந்து நிலையம் பகுதிக்கு வந்தனர்.

 


இவ்வாறு கையெழுத்து இயக்கம் நடத்தக்கூடாது என்றுகூறி பள்ளப்பட்டி போலீசார் தடுத்தனர். ஆனாலும், எட்டு வழிச்சாலை எதிர்ப்பு இயக்கத்தினர் மக்களிடம் திட்டத்திற்கு எதிராக கையெழுத்து பெறுவதில் ஆர்வம் காட்டினர். மக்களும் ஆர்வமாக வந்து, எட்டு வழிச்சாலை திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று வாசகம் எழுதப்பட்ட துண்டு பிரசுரங்களில் கையெழுத்திட்டனர். 

 


இதைப்பார்த்த போலீசார் மேலும் ஆத்திரம் அடைந்தனர். அவர்கள் கையெழுத்து வேட்டையை உடனடியாக நிறுத்திவிட்டு கலைந்து செல்லும்படி கூறினர். இதனால் இருதரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து கையெழுத்து இயக்கம் நடத்திய கூட்டமைப்பு நிர்வாகிகள் பத்துக்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. எட்டு வழிச்சாலை எதிர்ப்பு கூட்டமைப்பினர் காவல்துறையினரைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர். போலீசார், கைது செய்யப்பட்டவர்களை அருகில் உள்ள ஒரு தனியார் கல்யாண மண்டபத்தில் அடைத்தனர்.

 

 
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ''விளைநிலங்களை அழித்து, நிறைவேற்றப்படும் எட்டு வழிச்சாலைத் திட்டம் பொதுமக்களுக்கு ஏற்றது அல்ல. இது விவசாயத்தை அழிக்கும் திட்டம். எனவே இந்தத் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும். இதை வலியுறுத்தி பொதுமக்களிடம் கையெழுத்து பெற்று, அதை முதல்வரிடம் சமர்ப்பிக்க திட்டமிட்டிருந்தோம். ஜனநாயக முறையில் கையெழுத்து இயக்கம் நடத்திய எங்கள் மீது போலீசார் அராஜகமான முறையில் அடக்குமுறைகளை ஏவி கைது செய்துள்ளனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது,'' என்றனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.