Skip to main content

திமுக முன்னாள் அமைச்சர் என்.செல்வராஜ் மறைந்தார்

Published on 26/03/2019 | Edited on 26/03/2019

 

தி.மு.க. முன்னாள் அமைச்சர் என்.செல்வராஜ் உடல்நலக்குறைவால் திருச்சியில் மறைந்தார்.

 

s

 

திருச்சி திமுக என்றாலே கலைஞர் காலத்தில் அன்பில் தர்மலிங்கம் தான் நினைவுக்கு வரும். அவர் ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளராக இருந்தார். அவருக்கு பின்பு திருச்சி மாவட்ட தி.மு.க முன்னாள் மாவட்ட செயலாளர் மற்றும் முன்னாள் அமைச்சராக இருந்தவர் என்.செல்வராஜ்.   இவர் பெரம்பலூர் அருகே உள்ள துறைமங்கலத்தில் 5 மே 1944 அன்று பிறந்தவர். இளம் வயது பொறியாளர். மிகுந்த நினைவாற்றல் உள்ளவர். 

 

செல்நம்பரை ஒருமுறை சொன்னால் போதும் அப்படியே மனதில் பதிந்து வைத்துக்கொள்ளுவார். இப்படி அவர் மனப்படமாக 2500க்கு மேற்பட்ட தனக்கு நெருக்கமானவர்களின் செல்போன் எண்களை நினைவில் வைத்திருப்பார் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.   மேடைகளில் பேசும்போது குறிப்புகள் எதுவும் இல்லாமல் சரளமாக பேசக்கூடிய ஆற்றல் மிக்கவர்.   மேடையில் இருப்போரின் பெயர்களையும், கூட்டத்திற்கு வந்திருக்கும் முக்கியமானவர்களின் பெயர்களையும்  நினைவில் வைத்து பேசக்கூடியவர். 

 

s

 

திருச்சி மாவட்டத்தை சுற்றி உள்ள மாவட்டங்களில் முத்திரையர் இன மக்கள் பெரும்பான்மையாக இருப்பதாலும், அந்த சமூகத்தில் செல்வாக்கான நபர் என்பதாலும் திருச்சி மாவட்ட ஒருங்கிணைந்த தி.மு.க.விற்கு மா.செ.வாக இருந்தவர். மாநாடு நடத்தியவர் என்கிற பெருமை பெற்றவர். 

 

இவர் மாவட்ட செயலாளாராக 1987 முதல் 1993வரை இப்பதவியில் இருந்தார். இவர் நாடாளுமன்ற உறுப்பினராக 1980–84 ஆண்டுகளில் இருந்தார். வைகோ கட்சி ஆரம்பித்த போது தி.மு.க.வை விட்டு மதிமுகவிற்கு சென்றார். இதனால் தி.மு.க. மா.செ.வாக கே.என்.நேரு நியமிக்கப்பட்டார். 

 

s

 

பின்பு மீண்டும் தி.மு.க.விற்கு வந்த செல்வராஜ் தி.மு.க சார்பில் 2006 ஆண்டு முசிறி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு அ. தி. மு.க. வேட்பாளரான பூனாட்சியை 10,927 வாக்குகளில் தோற்கடித்தார். தி.மு.க. அமைச்சரவையில் வனத்துறை அமைச்சராக 2006 முதல் 2011வரை இருந்தார். அதன் பிறகு நடந்த சட்டமன்ற தேர்தலில் தோல்வி அடைந்தவர் சில காலம் அமைதியாக இருந்தார். 

 

s

 

கடந்த சில வருடங்களுக்கு முன்பு அ.தி.முக.வில் இணைந்தவர் கட்சி செயல்பாடுகள் எதுவும் இல்லாமல் அமைதியாக இருந்தார். ஜெ. மரணத்திற்கு பிறகு  உடல் நலக்குறைவால் அவருடைய மருமகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.   அதன் பிறகு அவருடைய மகன் இரண்டு பேரும் திமுக. மா.செ. நேருவுடன் இணைந்து கட்சியில் பணியாற்றி வந்தனர். இந்த எம்.பி. தேர்தலுக்கு கே.என்.நேரு ஆசியுடன் பெரம்பலூர் எம்.பி. தொகுதிக்கு விருப்பமனு கொடுத்தனர் என்பது குறிப்பிட தக்கது. 

 

s

 

சமீபத்தில் தேர்தல் பிரச்சாரத்திற்கு திருச்சி வந்திருந்த தி.மு.க. தலைவர் ஸ்டாலின் திருச்சி தில்லைநகரில் உள்ள மருத்துவமனைக்கு சென்று உடல்நலக்குறைவால் இருந்த செல்வராஜ்-ஐ பார்த்து அவர் குடும்பத்தினரிடம் நலம் விசாரித்தார். 

 

என்.செல்வராஜ் இன்று மாலை 6.15க்கு உடல்நலக்குறைவால் இயற்கை எய்தினார். அவருக்கு இரண்டு மகன்கள் கருணைராஜா, கலைராஜ், 2 பெண்கள் மருத்துவம் படித்து இருக்கிறார்கள். அவர் மருமகன் ராஜரத்திரன் மருத்துவமனையில் தான் சிகிச்சை பெற்றார். 


 

சார்ந்த செய்திகள்