Skip to main content

கூட்டுக்கொள்ளைக்கு துணைபோகும் அதிகாரிகள்!!!

Published on 04/03/2019 | Edited on 04/03/2019

போலியான மாட்டுவண்டி பதிவை வைத்துக்கொண்டு ஒரு நாளைக்கு பல ஆயிரம் ரூபாய் கமிஷன்களை குவிக்கும் புரோக்கர்களுக்கு வருவாய்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஒத்துழைப்பு அளிக்கபடுவதாக புகார் எழுந்துள்ளது.


 

cuddalore


 

கடலூர் மாவட்டத்தில் மாட்டுவண்டியைக் கொண்டு கடந்த சில ஆண்டுகளாக பொதுப்பணித்துறையின் அனுமதியோடு மாவட்டத்திலுள்ள ஆறுகளில் கட்டுமான பணிகளுக்கு குறைந்த விலையில் மணல் அள்ளப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தனர். இந்நிலையில் கடந்த ஒரு ஆண்டுக்குமுன் மாட்டு வண்டிகள் மூலம் மணல் அள்ளுவதற்கு தடைவித்து லாரிகளில் மட்டும் மணல் அள்ளுவதற்கு அனுமதியளித்தனர். ஒரு லாரியில் 2.5 யுனிட் மணல் ரூ.25 ஆயிரத்திற்கு விற்பனை செய்து வருகின்றனர். இதனால் அதிக விலை கொடுத்து மணல் வாங்க முடியாத ஏழை மக்கள் தொகுப்பு வீடுகள் மற்றும் சிறிய வீடுகள் கட்ட முடியாமல் பெரிதும் பாதிப்பு அடைந்து வந்தனர்.
 

அதேநேரத்தில் மாட்டுவண்டி தொழிலாளர்கள் சரியான விவசாய வேலைகள் இல்லாததாலும், மணல் அள்ளி விற்பனை செய்து குடும்பத்தை காப்பாற்றி வந்த தொழிலாளர்கள் மாடுகளை பராமறிக்க முடியாமல் மிகவும் சிரமம் அடைந்து வந்தனர். அதனைத்தொடர்ந்து மாட்டுவண்டி தொழிலாளர் அனைவரும் ஒருங்கிணைந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்து சிதம்பரம், புவனகிரி, பரங்கிப்பேட்டை என தொடர் போராட்டத்தை நடத்தி வந்தனர். மேலும் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனுகொடுத்து வலியுறுத்தினார்கள்.
 

அதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியரின் உத்திரவின் பேரில் புவனகிரி அருகே ஆயிபேட்டை கிராமத்தையொட்டி ஓடும் வெள்ளாற்றில் மாட்டுவண்டி மணல் குவாரி திறக்கப்பட்டு கடந்த மூன்று மாதங்களாக செயல்பட்டு வருகிறது. உண்மையாக மாட்டுவண்டி வைத்து மணல் அள்ளுபவர்களைவிட மாட்டுவண்டியே இல்லாமல் இருப்பதாக பதிவுசெய்து அனுமதி பெற்றுள்ளவர்கள் பல ஆயிரம் ரூபாய்களை தினந்தோறும் கமிஷனாக பெறுகிறார்கள் இவர்களுக்கு சம்பந்தபட்ட அதிகாரிகளும் உடந்தையாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
 

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் புவனகிரி ஒன்றிய செயலாளர் சதானந்தம் கூறுகையில், மாட்டுவண்டி மணல் குவாரி அமைக்கவேண்டும் என்று பலகட்ட தொடர் போராட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், சிஐடியு தொழிற்சங்கமும் நடத்தியது. அதன் விளைவாக மாவட்ட ஆட்சியர் மாட்டுவண்டி குவாரியை அமைத்துள்ளார். மாட்டு வண்டி வைத்துள்ளவர்கள் கிராம அலுவலர் ஒப்புதல்படி மாவட்ட ஆட்சியர் மூலம் மணல் அள்ள அனுமதி பெறுகிறார்கள். இதனைத்தொடர்ந்து ஒவ்வொரு வண்டிக்கும் பொதுப்பணித்துறை மூலம் எண் வழங்கப்படுகிறது.
 

மாட்டு வண்டி இல்லாதவர்கள் மாட்டு வண்டி வாங்க விண்ணப்பித்துள்ளதாக கிராம அலுவலரின் ஒப்புதலை தவறான முறையில் பெற்று மாட்டுவண்டி வைத்துள்ளதாக போலி அனுமதி பெற்றுவிடுகிறார்கள். மேலும் மாட்டுவண்டி வைத்திருந்தபோது மணல் அள்ள அனுமதிவாங்கியவர்கள் பிறகு எதாவது காரணத்தால் மாட்டுவண்டியை விற்பனை செய்துவிட்டால் அவரிடம் மணல் ஏற்றுவதற்கான பதிவு இருக்கும். மாட்டுவண்டி வைத்துள்ளவர்கள் ஆன்லைன் மூலம் பதிவு செய்தவுடன் அவர்களது தொலைபேசிக்கு குறுஞ்செய்தி வரும் அதனை குவாரியிலுள்ள பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் காண்பித்து வங்கி அட்டை மூலம் ரூ105 செலுத்தி மணல் அள்ளி செல்வார்கள். ஒரு வண்டி, ஒரு நாளைக்கு, ஒரு முறை மட்டுமே குவாரியில் இருந்து மணல் அள்ளமுடியும். ஒரு வண்டி மணலை ரூ1500-க்கு மேல் விற்பனை செய்யக்கூடாது என்று மாவட்ட ஆட்சியராக இருந்த பிரசாந்வடநேரே உத்திரவிட்டுள்ளார்.   
 

இந்நிலையில் மாட்டுவண்டி இல்லாமல்  மணல் ஏற்றுவதற்கான அனுமதி பெற்றவர்கள் ஆன்லைன் மூலம் பதிவு செய்த குறுஞ்செய்தியை மாட்டுவண்டி வைத்துள்ளவர்களிடம் கொடுத்து ரூ1000 முதல் 2000 ஆயிரம் வரை கமிஷன் பெற்றுவருகிறார்கள். இதனால் ஒரு மாட்டுவண்டி மணலை புவனகிரி பகுதியில் ரூ 3 ஆயிரம் என்றும் சிதம்பரம், பரங்கிப்பேட்டை பகுதியில் ரூ 5000 வரையிலும் விற்பனை செய்கிறார்கள்.
 

மணல் குறைந்த விலையில் கிடைக்கும் வகையில் ஏழை எளிய மக்கள் பயன்பெற மாட்டுவண்டியில் மணல் அள்ள அனுமதி வழங்கினாலும் அதிக விலைகொடுத்தே வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஒருநாளைக்கு ஒரு முறை மணல் அள்ளிய வண்டிகளை வேறு ஆன்லைன் பதிவு இருந்தாலும் மறுபடியும் குவாரிக்குள் அனுமதிக்ககூடாது. இப்படி அனுமதிப்பதால் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுகிறது. இதனை தடுக்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் ஏழைமக்களுக்கு மணல் எட்டாகனியாக தான் இருக்கும் என்றார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்கு இயந்திரத்திக் கோளாறு; இன்னும் தொடங்கப்படாத வாக்குப்பதிவு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Voting machines malfunction in 10 polling stations in Cuddalore
கோப்புப்படம்

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவு மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்துவருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடலூரில்  உள்ள 10  வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  அதனால் கடந்த ஒரு மணி நேரத்திக்கு மேலாக அப்பகுதியில் வாக்குப் பதிவு  தொடங்கப்படாமல் இருக்கிறது. தேர்தல் அதிகாரிகள் மாற்று வாக்குப் பதிவு எந்திரம் மூலம் வாக்குப் பதிவு தொடங்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தாமதமாகும் வாக்குச்சாவடியில் மக்கள் தங்களது ஜனநாயக கடமையை ஆற்ற நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். காலை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு தொடங்கப்படமால் இருப்பதால் மாலை ஒரு மணி நேரம் கூடதலாக ஒதுக்கப்படுமா என்பது குறித்து தேர்தல் தலைமை அதிகாரி தெரிவிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.