Skip to main content

"அதிக கல்வெட்டுகளைக் கொண்ட தமிழுக்குத் தனியாக ஏன் அலுவலகம் அமைக்கவில்லை?"- உயர்நீதிமன்றக் கிளை நீதிபதிகள் கேள்வி!

Published on 10/08/2021 | Edited on 10/08/2021

 

"Is Sanskrit an Indo-Aryan language?" - High Court branch judges question!

 

தமிழகத்தில் கீழடி, கொந்தகை, சிவகளை, கொடுமணல், ஆதிச்சநல்லூர், தாமிரபரணி ஆற்றுப்படுகை கிராமங்களில் அகழாய்வு நடத்தக் கோரி எழுத்தாளர் காமராசு, புஷ்பவனம், ஆனந்த் ராஜ் உள்ளிட்டோர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தனர். 

 

இந்த வழக்கு இன்று (10/08/2021) நீதிபதிகள் கிருபாகரன், துரைசாமி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தொல்லியல் துறை தரப்பில் டெல்லியிலிருந்து நம்பி ராஜன் மற்றும் அஜய் யாதவ் ஆகியோர் காணொளி மூலம் ஆஜராகியபோது, "அகழாய்வுத்துறையில் 41 பணியிடங்கள் புதுப்பிக்கப்பட்டிருப்பதாகவும், அவற்றில் ஏழு இடங்கள் கல்வெட்டு ஆய்வாளர் பணியிடங்கள்" எனவும் குறிப்பிட்டனர். 

 

அதற்கு நீதிபதிகள், இதுவரை படியெடுக்கப்பட்ட கல்வெட்டுகளின் விவரங்கள் குறித்து கேள்வி எழுப்பினர். இதற்கு தொல்லியல்துறை தரப்பு, "மொத்தமாக சுமார் 86,000 கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டதில் 27,000 தமிழ், 25,756 சமஸ்கிருதம், 9,400 கல்வெட்டுகள் கன்னடம், 7,300 கல்வெட்டுகள் தெலுங்கு மொழிக்கானவை எனப் பதிலளித்தது. 

 

இதையடுத்து நீதிபதிகள், "தொல்லியல் தரவுகளுடன் ஒப்பிடுகையில் தமிழ் மொழி கல்வெட்டு தொடர்பான விவரம் குறைவாகக் குறிப்பிடப்படுவது போல் உள்ளது. மொழிகளுக்கு இடையே வேறுபாடு காட்டப்படுவதை ஏற்க இயலாது. அனைத்து மொழிகளையும் மதிக்கிறோம்; ஆனால் ஒவ்வொரு மொழியின் சிறப்பும் பாதுகாக்கப்பட வேண்டியவை. தமிழ் கல்வெட்டுகளைக் கண்டறிந்து தமிழைப் பெருமைப்படுத்தியவர்கள் பிரிட்டிஷ்காரர்களே. அதிக கல்வெட்டுகளைக் கொண்ட தமிழுக்குத் தனியாக ஏன் அலுவலகம் அமைக்கவில்லை? அதிக கல்வெட்டுகளைக் கொண்ட தமிழ் மொழி திராவிட மொழியாகக் கருதப்படுகிறது.

 

அதிக கல்வெட்டைக் கொண்ட தமிழ், திராவிட மொழியாகக் கருதப்படுகையில் சமஸ்கிருதத்தை இந்தோ- ஆரிய மொழியாகத் தானே இருக்க வேண்டும்? தொல்லியல் துறையில் திறமையானவர்களை நியமித்து பணியிடங்களை நிரப்பினால் சிறப்பாகப் பணி நடைபெறும். மொழி வாரியாக கல்வெட்டு எண்ணிக்கை, நிபுணர்கள் எண்ணிக்கை, காலிப் பணியிட விவரங்கள் என்ன?" எனச் சரமாரியாகக் கேள்வி எழுப்பி, தொல்லியல் துறை எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர். 
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு விடுமுறை அறிவிப்பு!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Holiday notification for Chennai High Court

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

அதே வேளையில் நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகளைத் தேர்தல் ஆணையம் அமலுக்கு கொண்டு வந்துள்ளது. அந்த வகையில், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பிறகு தேர்தல் ஆணையம், போலீசார் மற்றும் அரசு அதிகாரிகள் பல்வேறு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதோடு மக்களவைத் தேர்தல் நடைபெறும் நாளில் ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை அளிக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியது. இது தொடர்பாக அனைத்து மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்கள், தலைமைத் தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதி இருந்தது.

இந்நிலையில், மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவை ஒட்டி ஏப்ரல் 19 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்துக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக உயர்நீதிமன்றப் பதிவாளர் எம்.ஜோதிராமன் உத்தரவுப்படி வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தல், தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு உட்பட்ட விளவங்கோடு தொகுதியின் இடைத்தேர்தல் ஆகியவற்றின் காரணமாக ஏப்ரல் 19 ஆம் தேதி வெள்ளிக்கிழமை சென்னை உயர் நீதிமன்றத்திற்கு விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி உயர் நீதிமன்றத்தின் சென்னை மற்றும் மதுரை ஆகிய இரு அமர்வுகளுக்கும் விடுமுறை நாள் ஆகும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

ஜெ.பி. நட்டா வாகன பேரணி விவகாரம்; நீதிபதி அதிரடி உத்தரவு!

Published on 07/04/2024 | Edited on 07/04/2024
JP Natta vehicle rally issue Judge orders action

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரபரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

அந்த வகையில் திருச்சியில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இன்று (07.07.2024) மாலை ரோடு ஷோ செல்வதற்கு காவல்துறை மற்றும் தேர்தல் ஆணையம் சார்பில் அனுமதி மறுக்கப்பட்டது. இதனையடுத்து ஜெ.பி.நட்டாவின் வாகன பேரணிக்கு அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பாஜக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கை அவசர வழக்காக நீதிபதி முரளிசங்கர் விசாரித்தார். அப்போது நீதிபதி, “திருச்சி கண்ணப்பா ஹோட்டல் முதல் இ.எஸ்.ஐ. மருத்துவமனை வரை ஜெ.பி.நட்டா ரோடு ஷோவை நடத்திக்கொள்ளலாம். மாலை 4 மணி முதல் மாலை 6 மணி வரை 1.5 கி.மீ. வரை ரோடு ஷோ நடத்திக்கொள்ளலாம்” என உத்தரவிட்டார்.

மேலும் திருச்சியில் ஜெ.பி.நட்டாவின் வாகன பேரணியை மாற்றுப்பாதையில் நடத்த அனுமதி வழங்க காவல்துறைக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது. முன்னதாக அரியலூர் மாவட்டம் கொல்லாபுரத்தில் சிதம்பரம் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் கார்த்தியாயினிக்கு ஆதரவாகவும், கரூரிலும் பாஜக சார்பில் நடைபெற்ற  தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டங்களில் ஜெ.பி.நட்டா கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.