Skip to main content

சேலம் அருகே அரசுப்பள்ளியில் குடிபோதையில் குறட்டை விட்ட ஆசிரியர் பணியிடைநீக்கம்!

Published on 30/01/2020 | Edited on 30/01/2020

சேலம் அருகே, அரசுப்பள்ளியில் குடிபோதையில் வகுப்பறையில் படுத்துத் தூங்கிய ஆசிரியர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார்.


சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள கே.மேட்டுப்பாளையத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் பதினைந்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். 


இப்பள்ளியில் இருதயராஜ் என்பவர் தலைமை ஆசிரியராகவும், அறிவழகன் என்பவர் இடைநிலை ஆசிரியராகவும் பணியாற்றி வருகின்றனர். ஆசிரியர் அறிவழகன், ஒழுங்காக பள்ளிக்கு வராமல் இருந்துள்ளார். அடிக்கடி முன்னறிவிப்பின்றி விடுப்பு எடுத்து வந்துள்ளதோடு, குடிபோதையில் பள்ளிக்கு வருவதாகவும் புகார்கள் எழுந்தன. குழந்தைகளின் பெற்றோர்களிடமும் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

salem government schools teacher suspend district officers action

இந்தநிலையில், செவ்வாய்க்கிழமை (ஜன. 28) சங்ககிரியில் தொடக்கக்கல்வித்துறை சார்பில் நடந்த ஒரு பயிற்சி முகாமில், கலந்து கொள்வதற்காக தலைமை ஆசிரியர் இருதயராஜ் சென்று விட்டார். அதனால் பள்ளியில் ஆசிரியர் அறிவழகன் மட்டுமே இருந்தார். 


திடீரென்று பள்ளியில் குழந்தைகளை தனியாக விட்டுவிட்டு, வெளியே சென்ற அறிவழகன் சிறிது நேரம் கழித்து மீண்டும் வந்தார். அப்போது அவர் மது அருந்திவிட்டு குடிபோதையில் இருந்துள்ளார். மேலும், போதை தலைக்கேறிய நிலையில் வகுப்பறையிலேயே குறட்டை விட்டு தூங்கினார். இதுகுறித்து அறிந்த குழந்தைகளின் பெற்றோர்கள், உள்ளூர்க்காரர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர். பயிற்சி முகாமிற்கு சென்றிருந்த தலைமை ஆசிரியருக்கும் தகவல் அளித்தனர். 


வட்டாரக் கல்வி அலுவலர் நெடுமாறனிடமும் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து ஆசிரியர் அறிவழகன், இடைப்பாடி அரசு மருத்துவமனை அழைத்துச்சென்று பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது அவர், மது அருந்தி இருப்பது ஊர்ஜிதமானது. இதுபற்றி சங்ககிரி கல்வி மாவட்ட அலுவலர் ராமசாமியிடம், வட்டாரக் கல்வி அலுவலர் புகார் அளித்தார். அதன்பேரில், ஆசிரியர் அறிவழகன் உடனடியாக பணியிடைநீக்கம் (சஸ்பெண்ட்) செய்யப்பட்டார்.   


இதுகுறித்து தொடக்கக்கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், ''அரசு தொடக்கப்பள்ளிகளில் குழந்தைகளுக்கு தரமான பாடத்திட்டம், உள்கட்டமைப்பு வசதிகள், இலவச சீருடை, காலணி உள்ளிட்ட பதினான்கு வகையான இலவச பொருள்கள் வழங்கப்படுகின்றன. ஆனால், ஆசிரியர் அறிவழகன் போன்ற ஒழுக்கம் தவறிய ஆசிரியர்களால் ஒட்டுமொத்த தொடக்கக் கல்வித்துறைக்கும் கெட்டப்பெயர் ஏற்படுகிறது. தற்போது அவர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளார். குழந்தைகளின் சிறுசேமிப்பு பணத்தை எடுத்துச்சென்று அவர் மது அருந்தியதாக புகார் சொல்லப்பட்டு உள்ளது. தொடர்ந்து அவரிடம் துறை ரீதியான விசாரணை நடந்து வருகிறது,'' என்றார்.



 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Two people who went to vote fainted and passed way

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் காலை 9 மணி நிலவரப்படி 24.34 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில் வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர். சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே செந்தாரப்பட்டி ஊராட்சி தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்கச் சென்ற சின்னபொண்ணு (77) என்ற மூதாட்டி மயங்கி விழுந்து உயிரிழந்தார். அதேபோன்று, சேலம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் சூரமங்கலம் பகுதியை சேர்ந்த பழனிசாமி(65) தனது மனைவியுடன் வாக்களிக்கச் சென்றபோது மயங்கி விழுந்து பலியானார். சேலம் மாநகரில் நடந்த இந்த துயர் சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.