Skip to main content

ஊர் மக்கள் பலவாறு சொன்னதால் மனைவியை கல்லால் தாக்கி கொன்ற கணவன்! விபத்தில் இறந்ததாக நாடகமாடியது அம்பலம்!! 

Published on 20/12/2018 | Edited on 20/12/2018
r

ஆத்தூர் அருகே, நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கல்லால் தாக்கி படுகொலை செய்த கணவன், விபத்தில் மனைவி இறந்ததாக நாடகமாடியது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. 


சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த கெங்கவல்லி அருகே உள்ள கூடமலையை சேர்ந்தவர் ரவி (45). இவருடைய மனைவி ராணி (40). இவர்களுக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இவர்களில் ஒரு மகளுக்கு மட்டும் திருமணம் ஆகியுள்ளது. 


ரவி, சவுதி அரேபியாவில் கல் உடைக்கும் தொழிலாளியாக உள்ளார். இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை சொந்த ஊருக்கு வந்து மனைவி, பிள்ளைகளை பார்த்துச் செல்வார். இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அவர் சொந்த ஊரான கூடமலைக்கு வந்தார்.   மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்த அவர் தினமும் மது போதையில் மனைவியை அடித்து உதைத்துள்ளார். புதன்கிழமை (டிசம்பர் 19) இரவு 9 மணியளவில், ராணிக்கு திடீரென்று உடல்நலம் பாதிக்கப்பட்டது. ரத்த அழுத்தம் அதிகமாக உள்ளதாக கணவரிடம் கூறியுள்ளார்.


இதையடுத்து மனைவியை கெங்கவல்லியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குப் போகலாம் என்று மனைவியை அழைத்துள்ளார். அதற்கு அவர் வர மறுத்தபோதும், கட்டாயப்படுத்தி தனது மோட்டார் சைக்கிளில் உட்கார வைத்து அழைத்துச் சென்றார். 


வீட்டில் இருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் சென்றவுடன், வீட்டில் இருந்த மகனுக்கு போன் செய்த ரவி, 'அம்மா வண்டியில் இருந்து கீழே விழுந்து விட்டார். உடனே வா' என அழைத்துள்ளார்.   அங்கு சென்று பார்த்தபோது தலையில் காயத்துடன் ராணி இறந்து கிடந்தார். வண்டியில் இருந்து தவறி விழுந்துவிட்டதாக கருதி, இருசக்கர வாகனத்திலேயே உடலை வீட்டிற்குக் கொண்டு வந்தனர். 


இந்நிலையில், இன்று (டிசம்பர் 20, 2018) காலையில், ராணியை அவருடைய கணவர் கொன்றுவிட்டதாக கெங்கவல்லி போலீசில் ராணியின் அண்ணன் தகவல் தெரிவித்தார். போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், மனைவியை கல்லால் தாக்கி கொலை செய்ததை ரவி ஒப்புக்கொண்டார்.  அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில், ''சவுதிக்கு வேலைக்குச் செல்லும் நான், சம்பாதிக்கும் பணத்தை மனைவிக்கு அனுப்பி வைப்பேன். இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊருக்கு வருவேன். இந்தமுறை சொந்த ஊருக்கு வந்திருந்தபோது மனைவியின் நடத்தை குறித்து ஊர் மக்கள் பலவாறு பேசினர். அவருக்கு சில ஆண்களுடன் தொடர்பு இருப்பதாக கூறினார்கள்.


இதுபற்றி என் மனைவியிடம் விசாரித்தேன். அதற்கு அவள் சரியான பதிலைச் சொல்லவில்லை. இதனால் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில்தான் ராணியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்போது தலையில் கல்லால் தாக்கி கொலை செய்தேன். போலீசில் சிக்கிவிடக்கூடாது என்பதற்காக அவள் விபத்தில் அடிபட்டு இறந்துவிட்டாள் என நாடகமாடினேன்,'' என தெரிவித்துள்ளார்.


இதையடுத்து ரவியை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் கெங்கவல்லி சுற்றுவட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 

சார்ந்த செய்திகள்