Skip to main content

வீடியோ எடுத்து பெண்களிடம் பாலியல் சீண்டல்; தென்காசியில் மத போதகர் கைது

Published on 23/03/2023 | Edited on 23/03/2023

 

 Pastor arrested in thenkasi for taking video and sexually harassing women

 

தென்காசியில் மத போதகர் ஒருவர் பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

 

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகேயுள்ள வடக்கு சிவகாமிபுரத்தின் பிலிவர்ஸ் சர்ச்சில் நாகர்கோவில் தடிக்காரன்கோணம் பகுதியைச் சேர்ந்த ஸ்டான்லி குமார் என்பவர் மத போதகராகப் பணியாற்றி வருபவர். இவர் சர்ச்சுக்கு வரும் பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவதாக அரசல் புரசலாக தகவல் கசிந்த நிலையில், பாவூர்சத்திரம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் ஆலங்குளம் டி.எஸ்.பி.யிடம் புகார் மனு கொடுத்திருக்கிறார்.

 

அதில், '3 குழந்தைகளுக்கு தாயான தன் மகள் விருதுநகரில் வசிப்பவர். வயிற்று வலியால் நீண்ட நாள் பாதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளித்தும் குணமாகவில்லை. இதன்பின் மகளை சிவகாமிபுரம் பிலிவர்ஸ் சர்ச்சிற்கு கூட்டிச் சென்று மத போதகர் ஸ்டான்லி குமாரிடம் அவளுக்காக ஜெபிக்குமாறு கேட்டுக் கொண்டேன். ஆனால் அவர் தனது மகளை 3 நாட்கள் அங்கு தங்கச் சொன்னார். அவர் மீதான நம்பிக்கையால் மகளை தங்க வைத்தேன். ஆனால் மதபோதகர் எனது மகளிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டதோடு ஆபாசமாகவும் பேசியுள்ளார். தொடர்ந்து தனது 2வது மகளிடம் தொலைப்பேசியில் மன்னிப்பு கேட்பது போல் நடித்து போலீசில் புகார் செய்தால் தற்கொலை செய்வேன் என்று மிரட்டியுள்ளார்.

 

மேலும் அவர், அருணாப்பேரி கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் குளிப்பதைப் படம் எடுத்ததுடன் அவருக்கும் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். சர்ச்சுக்கு வரும் பெண்களிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டவர் சர்ச்சுக்குள் நவீன சுழல் வீடியோ, ஆடியோக்களுடன் கேமராக்களை பொருத்தி சர்ச்சுக்கு வரும் அனைவரையும் வீடியோ பதிவு செய்து சில பெண்களின் புகைப்படங்களை மார்பிங் செய்து மிரட்டி வருவதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று மனுவில் கூறியுள்ளார்.

 

இந்தப் புகார் மனு மீது விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி ஆலங்குளம் டி.எஸ்.பி. அனுப்பிய புகாரைப் பெற்ற பாவூர்சத்திரம் இன்ஸ்பெக்டர் சுதந்திரா தேவி, எஸ்.ஐ. கவிதா உள்ளிட்ட போலீசார் விசாரணை நடத்தியதில் சம்பவங்கள் நடந்ததும், மதபோதகர் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டதும் தெரிய வர அவரைக் கைது செய்த போலீசார் தென்காசி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதே போன்றதொரு புகாரில் கடந்த வாரம் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த மதபோதகர் ஒருவர் கைதான நிலையில் தற்போது பாவூர்சத்திரம் மதபோதகர் ஒருவர் கைதானது அதிர்வலைகளைக் கிளப்பியுள்ளது.


 

சார்ந்த செய்திகள்