
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் திருடு போவதாக நகர காவல் நிலையத்திற்கு புகார்கள் வந்தது. நகர போலீசார் வாணியம்பாடி - பெருமாள்பேட்டை ரயில்வே மேம்பாலம் அருகில் மற்றும் தாலுக்கா அலுவலகம் பின்புறம், முனீஸ்வரன் கோயில் அருகில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகத்தின் அடிப்படையில் அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த தும்பேரி பகுதியைச் சேர்ந்த அய்யப்பன்(28), சிக்னாங் குப்பம் கிராமத்தைச் சேர்ந்த அரவிந்த் (23) ஆகிய இரண்டு பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது முன்னுக்குப் பின் பதில் அளித்ததால் அவர்களைக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டதன் பேரில், பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனங்கள் திருட்டில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து அவர்களிடம் இருந்த ரூபாய் 5 லட்சம் மதிப்பிலான 11 இருசக்கர வாகனங்களைப் போலீசார் பறிமுதல் செய்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்திய போது, வாகனங்களைத் திருடி அதை விற்பனை செய்து அதில் வரும் பணத்தை வைத்து தோழிகளோடு ஜாலியாக ஊர் சுற்றுவோம். சரக்கு அடிப்போம். விலை உயர்ந்த செல்போன்களை வாங்குவோம். நண்பர்களுக்கு செலவு பண்ணுவோம் எனக் கூறியுள்ளனர் பின்னர் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து வாணியம்பாடி நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.