Skip to main content

சிபிஎஸ்இ பாடநூலில் தவறை திருத்தாமல் நாடார்களை தொடர்ந்து இழிவுபடுத்துவதா? ராமதாஸ் கண்டனம்

Published on 15/10/2018 | Edited on 15/10/2018
Ramadoss


 

சிபிஎஸ்இ பாடநூலில் தவறை திருத்தாமல் நாடார்களை தொடர்ந்து இழிவுபடுத்துவதா? என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
 

மத்திய இடைநிலைக் கல்வி வாரியப் பாடத் திட்டத்தின் 9-ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடநூலில் நாடார் சமுதாயத்தை இழிவுபடுத்தும் வகையில் உள்ள பாடத்தை நீக்குவதாக இரு ஆண்டுகளுக்கு முன் அறிவித்த மத்திய அரசு இதுவரை நீக்கவில்லை. மாறாக பாடத்தில் சில வார்த்தைகளை மட்டும் மாற்றி விட்டு, நாடார் சமுதாயத்தை இழிவுபடுத்தும் பகுதிகளை நீடிக்கச் செய்திருப்பது கண்டிக்கத்தக்கது.
 

மத்திய இடைநிலைக் கல்வி வாரிய பாடத்திட்டத்தின் 9ம் வகுப்புக்கான சமூக அறிவியல் பாடநூலின் 8-ஆவது பாடமாக ‘ஆடைகள்: ஒரு சமூக வரலாறு’ இடம் பெற்றுள்ளது. அதில்,  168வது பக்கத்தில் ‘சாதி மற்றும் மோதலும், ஆடை மாற்றமும்’ என்ற குறுந்தலைப்பின் கீழ் இடம் பெற்றுள்ள பத்தியில், ஆங்கிலேயர் ஆட்சியில் தெற்கு திருவிதாங்கூர் என்றழைக்கப்பட்ட குமரி மாவட்டத்தின் பூர்வக்குடி மக்கள் நாயர்கள்; நாடார் சமுதாயம் அங்கு பிழைப்பு தேடி இடம் பெயர்ந்து வந்தது என்று தவறாக குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், நாடார்களை சாணார்கள் என்று அழைக்கும் வழக்கம் வெகுகாலத்திற்கு முன்பே ஒழிந்துவிட்ட நிலையில், இந்த பாடத்தின் அனைத்து இடங்களிலும் நாடார் சமுதாயத்தினரை சாணார்கள் என்று மீண்டும், மீண்டும் குறிப்பிட்டிருப்பது அவர்களை இழிவுபடுத்தும் செயல் ஆகும்.
 

நாடார் சமுதாயத்தை இழிவுபடுத்தும் அந்த பாடத்தை சி.பி.எஸ்.இ நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி  6 ஆண்டுகளுக்கு முன் 25.10.2012 அன்று அறிக்கை விடுத்தேன். அதுமட்டுமின்றி அப்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பல்லம் ராஜு தொடங்கி இப்போதைய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் வரை அனைத்து அமைச்சர்களிடமும் பா.ம.க. சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனாலும், அவற்றால் பயன் ஏற்படாத நிலையில், இதே கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தி 24.08.2016 அன்று மீண்டும் ஓர் அறிக்கை வெளியிட்டேன். அதுமட்டுமின்றி, பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அவ்வழக்கில்  16.11.2016 அன்று தீர்ப்பளித்த உயர்நீதிமன்றம், சர்ச்சைக்குரிய பாடத்தை நீக்கும்படி ஆணையிட்டது. அதன்படி ஆந்த பாடம் நீக்கப்படும் என்று 19.12.2016 அன்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது.
 

ஆனால், அந்தப் பாடமோ அல்லது அந்தப் பாடத்தில் நாடார் சமுதாயத்தை இழிவுபடுத்தும் பகுதிகளோ நீக்கப்படவில்லை. மாறாக சில வார்த்தைகள் மட்டும் திருத்தப்பட்டுள்ளன. அந்தப் பாடத்தில் ஏற்கனவே  இருந்த நாடார்கள் பிழைப்புத் தேடி இடம்பெயர்ந்தவர்கள், அவர்கள் கள் இறக்கும் சமுதாயத்தினர் என்ற இரு பகுதிகள் மட்டும் நீக்கப்பட்டுள்ளன. அதேநேரத்தில் மலையாள நாயர்கள் கன்னியாகுமரி பகுதியின்  பூர்வகுடிகள் அல்ல.... அவர்கள் பிழைப்பு தேடித்தான் குமரி மாவட்டத்தில் குடியேறினர் என்ற உண்மை பதிவு செய்யப்படவில்லை. இப்போதும் அந்தப் பாடத்தைப் படித்தால் மலையாள நாயர்களுக்கு நாடார்கள்  அடிமைகளாக இருந்தது போன்ற தோற்றம் ஏற்படும் வகையில் வார்த்தைகள் கட்டமைக்கப்பட்டுள்ளன. 
 

மலையாள நாயர்கள் உயர்சாதியினர் என பழைய பாடத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது இப்போது நீக்கம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், அந்த பாடத்தில்  நாடார்கள் கீழ் சாதியினர் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, நாடார்களை சாணார்கள் என்று அழைக்கும் வழக்கம் நீண்ட காலத்துக்கு முன்பே கைவிடப்பட்டு விட்ட நிலையில், பல இடங்களில் சாணார்கள் என்றே குறிப்பிட்டிருக்கின்றனர். ஒரே ஒரு இடத்தில் மட்டும் சாணார்கள் பின்னாளில் நாடார்கள் என்றழைக்கப்பட்டனர் என அடைப்புக்குறிக்குள் குறிப்பிடப்பட்டுள்ளது. இவை அனைத்தும் நாடார் சமுதாயத்தை இழிவுபடுத்தும் விஷமச் செயல்களாகும்.
 

அதேபோல், நாடார் சமுதாயப் பெண்கள் மேலாடை அணியத் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில்,  மேலாடை அணியும் உரிமை பெறுவதற்காக  அவர்கள் கிறித்தவ மதத்திற்கு மாறியதாகவும், அதனால்  அவர்களுக்கு ஆடை அணியும் உரிமை கிடைத்ததாகவும் பாடத்தில் தவறாக குறிப்பிடப்பட்டிருந்தது.  இந்த அடக்குமுறைக்கு எதிராக அய்யா வைகுந்தர் 1936-ஆம் ஆண்டிலிருந்து தாம் மறையும் வரை போராட்டம் நடத்தியதன் பயனாகவே நாடார் சமுதாயப் பெண்களுக்கு மேலாடை அணியும் உரிமை வழங்கப்பட்டது என்பதால், உண்மையான வரலாற்றை பதிவு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தேன். ஆனால், ஆடை சீர்திருத்தத்தில் அய்யா வைகுந்தர் போன்ற இந்து சீர்திருத்தவாதிகளும் பங்கேற்றனர் என்ற அரை வரியை மட்டும் புதிதாக சேர்த்துள்ள பாடநூல் ஆசிரியர்கள், வேறு எந்த மாற்றத்தையும் செய்யவில்லை. இது சகோதர்களாக வாழும் இந்து, கிறித்தவ நாடார் மக்களிடையே மோதலை ஏற்படுத்தும் வகையிலேயே உள்ளது. இதுவும் உள்நோக்கம் கொண்ட விஷமத்தனம் ஆகும்.
 

நாடார் சமுதாயத்தை இழிவுபடுத்தும் வகையிலான பாடத்திற்கு எதிராக மத்திய அரசுக்கு பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து கொடுத்த அழுத்தங்கள், உயர்நீதிமன்ற வழக்கு ஆகியவற்றைத் தொடர்ந்து 2016ஆம் ஆண்டு திசம்பர் 19ஆம் தேதி மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் இணைச் செயலர் மனோஜ்குமார் ஸ்ரீவத்சவா பிறப்பித்த ஆணையில்,‘‘நடப்பு 2016-17 கல்வியாண்டு முதல் 9-ம் வகுப்பு என்சிஇஆர்டி பாடநூலின் பக்கம் 168-ல் இடம் பெற்றுள்ள ‘சாதி மற்றும் மோதலும், ஆடை மாற்றமும்’ என்ற குறுந்தலைப்பு பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்படுகிறது. இதன் மீதான கேள்விகள், கட்டுரைகள் எதுவும் இனி தேர்வில் கேட்கப்படக் கூடாது’’ என்று கூறப்பட்டிருந்தது. ஆனால், இப்போது அப்பிரிவு  தொடருவதுடன் ஒரு சில மாற்றங்களுடன் நாடார் சமுதாயத்தை இழிவுபடுத்தும் அம்சங்கள் அப்படியே  நீடிக்கின்றன. இதை ஏற்க முடியாது. ஏற்கனவே உறுதியளித்தவாறு நாடார் சமுதாயத்தை இழிவுபடுத்தும் வகையிலான ‘சாதி மற்றும் மோதலும், ஆடை மாற்றமும்’ என்ற பிரிவு முழுமையாக நீக்கப்பட வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குடியைக் கெடுக்கும் குடிக்கு முடிவு கட்டப்படுவது எப்போது? - ராமதாஸ்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Ramdoss has questioned when liquor will be abolished in Tamil Nadu

குடிப்பழக்கம் உள்ள பெற்றோரின் பிள்ளைகளுக்கு சுயமரியாதை குறைவு என ஆய்வில் வெளியாகியுள்ளது; குடியைக் கெடுக்கும் குடிக்கு முடிவு கட்டப்படுவது எப்போது? என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான  பெற்றோர்களின் பிள்ளைகள் சுயமரியாதைக் குறைவு, தாழ்வு மனப்பான்மை உள்ளிட்ட மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்படுகின்றனர் என்று சென்னை மருத்துவக் கல்லூரியின் சமூக மருத்துவ நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. குடிக்கும் பெற்றோரின் பிள்ளைகள் இளம் வயதிலேயே மதுப்பழக்கம் மற்றும் புகையிலைப் பழக்கத்திற்கு அடிமையாகுதல், தீய செயல்களில் அடிக்கடி ஈடுபடுதல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கும் ஆளாவதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.  இந்த ஆய்வு முடிவுகள் சிறிதும் அதிர்ச்சியோ, ஆச்சரியமோ அளிக்கவில்லை. மாறாக, மதுப்பழக்கத்தின் தீமைகள் குறித்து பல பத்தாண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி கூறி வரும் குற்றச்சாட்டுகளை உறுதி செய்திருக்கிறது.

அனைத்து சமூகக் கேடுகளுக்கும் ஆணிவேர் மதுப்பழக்கம் தான்.  தினமும் குடித்து விட்டு வந்து வீட்டில் உள்ளவர்களை கொடுமைப் படுத்தும் தந்தை உள்ள வீட்டில், அவர்களின் பிள்ளைகளால் நிம்மதியாக படிக்க முடியாது; சமூகத்தில் தலை நிமிர்ந்து நடக்க முடியாது என்பது நடைமுறையில் நாம் கண்டு வரும் உண்மை ஆகும். தந்தை குடிப்பதைப் பார்க்கும் பிள்ளைகளும் மது எளிதாக கிடைக்கும் போது அந்தப் பழக்கத்திற்கு அடிமையாவது வழக்கம் தான். 

இந்த உண்மைகளைத் தான்  சென்னை மருத்துவக் கல்லூரியின் ஆய்வு உறுதி செய்திருக்கிறது. அதனால் தான் குடி குடியைக் கெடுக்கும், குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும் என்ற எச்சரிக்கை வாசகங்கள் மதுப்புட்டிகள் மீது எழுதப்பட்டன. மதுவே முற்றிலுமாக ஒழிக்கப்பட  வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், தமிழ்நாட்டை மாறி மாறி ஆட்சி செய்து வரும் திமுகவும், அதிமுகவும் மதுவின் தீமைகளை கருத்தில் கொள்ளாமல் சட்டப்படியாக அரசுக்கு கிடைக்கும் வருமானத்தையும், சட்டவிரோதமாக தங்களுக்கு கிடைக்கும் லாபத்தையும் மட்டுமே கருத்தில் கொண்டு  தமிழகத்தின் அனைத்து வீதிகளிலும் மதுவை வெள்ளம் போல ஓட விடுகின்றன.

அதுமட்டுமின்றி, மதுப்புட்டிகளில் மதுவின் தீமைகளை குறிக்கும் வகையிலான, 'குடி, குடியை கெடுக்கும்; குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும்; மது நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்குக் கேடு' என்ற, விழிப்புணர்வு வாசகங்களை நீக்கி விட்டு, 'மது அருந்துதல் உடல் நலத்திற்கு கேடு; பாதுகாப்பாக இருப்பீர். மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டாதீர்' என்ற மென்மையான வாசகங்களை அச்சிட்டது தான் திமுக, அதிமுக அரசின் சாதனைகள் ஆகும்.

எந்த வகையில் பார்த்தாலும் மது மிகப்பெரிய சமூகக் கேடு என்பதில் மாற்றமில்லை.  மது இல்லாத தமிழகத்தில் குடும்பங்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள்; குழந்தைகள் சுயமரியாதையுடன் நல்லவர்களாக வளர்வார்கள். எனவே, குடியைக் கெடுக்கும் குடிப்பழக்கத்திற்கு முடிவு கட்டும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள மதுக்கடைகளை மூடிவிட்டு முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

'அப்பாவி மக்களை இன்னல்களுக்கு ஆளாக்குவதையும் அனுமதிக்க முடியாது'- ராமதாஸ் கருத்து

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
 'Innocent people can't be allowed to suffer' - Ramadoss opined

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று முன்தினம் (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் ஜூன் 6ஆம் தேதி வரை தொடரும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழ்நாடு மற்றும் புதுவையில் மக்களவைத் தேர்தல்கள் அமைதியாக நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிகள் ஜூன் 6 ஆம் நாள் வரை தொடரும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிகளுக்கு எந்தத் தேவையும் இல்லாத நிலையில், அதை தொடர்வது மக்களுக்கு பாதிப்புகளையே ஏற்படுத்தும்.

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல்கள் நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்தப்பட வேண்டும் என்பதற்காகத் தான் நடத்தை விதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. தமிழ்நாட்டில் தேர்தல்கள் நடத்தி முடிக்கப்பட்டு விட்ட நிலையில், இனி நடத்தை விதிகளுக்கு எந்தத் தேவையும் இல்லை. இந்தியாவின் பிற மாநிலங்களில் இன்னும் தேர்தல்கள் நடத்தப்படவில்லை என்பதற்காக தமிழ்நாட்டில் நடத்தை விதிகளை இன்னும் நடைமுறைப்படுத்திக் கொண்டிருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. ஒருவேளை ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடத்தப்பட்டிருந்தாலோ அல்லது தமிழ்நாட்டில் கடைசி கட்ட வாக்குப்பதிவு நடத்தப்பட்டிருந்தாலோ வாக்குப்பதிவு முடிந்த சில நாட்களில் வாக்கு எண்ணிக்கை நடத்தி முடிவுகள் அறிவிக்கப்பட்டிருக்கும். அத்துடன் தேர்தல் நடத்தை விதிகளும் முடிவுக்கு வந்திருக்கும். தமிழ்நாட்டில் முதல் கட்ட வாக்குப்பதிவு  நடத்தப்பட்டது என்ற ஒரே காரணத்திற்காக மற்ற மாநிலங்களிலும் வாக்குப்பதிவு முடிவடையும் வரை தமிழக அரசும், மக்களும் தேவையற்ற கட்டுப்பாடுகளை சுமந்து கொண்டு வாட வேண்டிய தேவையில்லை.

 'Innocent people can't be allowed to suffer' - Ramadoss opined

மக்களவைத் தேர்தலுக்கான அறிவிக்கை கடந்த மார்ச் 16 ஆம் நாள் வெளியிடப்பட்டது. மக்களவைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு ஜூன் 6ஆம் நாள் தான் தேர்தல் நடைமுறைகள் முடிவுக்கு வரும் என்பதால், அதுவரை நடத்தை விதிகள் நடைமுறையில் இருக்கும். அதாவது தேர்தல் நடைமுறை என்ற பெயரில் தமிழ்நாடு அரசு நிர்வாகத்தை 83 நாட்களுக்கு முடக்கி வைப்பதையும், அதே காலத்திற்கு அப்பாவி மக்களை பல்வேறு வகைகளில் இன்னல்களுக்கு ஆளாக்குவதையும் அனுமதிக்க முடியாது.

நடத்தை விதிகள் நடைமுறையில் இருக்கும் போது ஆட்சியாளர்கள் புதிய திட்டங்கள் எதையும் அறிவிக்க முடியாது. மக்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை தீர்ப்பது குறித்து அதிகாரிகளுக்கு எந்த வித ஆணைகளையும் பிறப்பிக்க முடியாது; அதிகாரிகளுடன் முதலமைச்சரோ, அமைச்சர்களோ ஆய்வுக்கூட்டங்களைக் கூட நடத்த இயலாது. கடைநிலை பணியாளர்கள் முதல் தலைமைச் செயலர் வரை அனைத்து நிலை அதிகாரிகளும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் தான் இருப்பார்கள். மொத்தத்தில் அரசு நிர்வாகம் என்பது செயல்பட முடியாத அளவுக்கு மொத்தமாக முடக்கப்பட்டிருக்கும். அதனால், மக்களுக்கான நலத்திட்ட உதவிகளைக் கூட அரசால் செய்ய முடியாத நிலை உருவாகும்.

தேர்தல் நடத்தை விதிகளால் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பது வணிகர்கள் தான். சில்லறை வணிகம் செய்யும் வணிகர்கள் அதில் கிடைத்தப் பணத்தை சந்தைக்கு கொண்டு சென்று தான் தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கி வர வேண்டும். அவ்வாறு வணிகர்கள் பணத்தைக் கொண்டு செல்லும் போது, அவர்களை மடக்கி சோதனை நடத்தும் பறக்கும் படையினர் வணிகர்களிடம்  ரூ.50 ஆயிரத்திற்கு மேல் ஒரு ரூபாய் கூடுதலாக இருந்தாலும் கூட மொத்தப் பணத்தையும் பறிமுதல் செய்கின்றனர். அதனால், கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வணிகர்கள் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளானார்கள். அவர்களை மேலும் 45 நாட்களுக்கு பாதிப்புகளுக்கு உள்ளாக்குவது நியாயமற்றதாகும்.

எனவே, தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் நடைபெற்று முடிந்து விட்ட நிலையில், மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகளை உடனடியாக தளர்த்த வேண்டும். மக்களுக்குத் தேவையான நலத் திட்டங்களை செயல்படுத்த  தமிழக அரசையும், வணிகத்திற்கு தேவையான பணத்தை தடையின்றி எடுத்துச் செல்ல வணிகர்களையும் தேர்தல் ஆணையம் அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்' என தெரிவித்துள்ளார்.