Skip to main content

ராஜ்பவன்கள் கவர்னர் மாளிகையா? அல்லது மாநில அரசுகளை கண்காணிக்கக்கூடிய கேமராக்களா? மோடிக்கு ஸ்டாலின் கேள்வி

Published on 16/09/2018 | Edited on 16/09/2018

 

vck


விழுப்புரத்தில் நேற்று (15-09-2018) நடைபெற்ற தி.மு.கழக முப்பெரும் விழாவில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை:
 

என் உரையினை தொடங்குவதற்கு முன்பு ஒரு முக்கிய அறிவிப்பு. மிக கவனமாக கேட்க வேண்டும்.  “வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்” என முழங்கிய தலைவர் கலைஞர் அவர்கள் தனது 14வது வயதில் புலி, வில், கயல் சின்னங்கள் பொறித்த தமிழ்க் கொடி ஏந்தி இந்தி ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடத் தொடங்கி தன் வாழ்வின் இறுதி வரை தமிழ் மொழியின் நலன்காக்க அரும்பாடுபட்டவர்.

 

மொழிப்போரில் தனிமைச்சிறை கண்டவர். தனது ஆட்சிக் காலம் முழுவதும் தமிழ் மொழியை மேன்மை கண்டிடச் செய்தவர். தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை தேர்வு செய்து அரசு நிகழ்ச்சிகளில் தொடக்கமாக அதனை இசைக்கச் செய்து தமிழன்னைக்கு புகழ்மாலை சூட்டியவர். தமிழ் ஆண்டுக்கணக்காக திருவள்ளுவர் ஆண்டு கணக்கை நடைமுறைப்படுத்தியவர். தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டு என அறிவித்து பண்பாட்டைக் காத்தவர்.

 

vilu

 

தாய் மொழியாம் தமிழ் மொழியின் சிறப்பை இந்திய திருநாடு போற்றும் வகையில் பரிதிமாற் கலைஞரில் தொடங்கி பல கலைஞர்களும் தமிழ் ஆர்வலர்களும் வலியுறுத்திய செம்மொழி தகுதியினை தனது இடைவிடாத முயற்சியினால் 2004 ஆம் ஆண்டு மத்தியில் நடைபெற்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசினால் தமிழுக்கு செம்மொழி தகுதியினை பெற்றுத் தந்த பெருமை தலைவர் கலைஞர் அவர்களையே சாரும்.

 

தமிழ் மொழியின் பெருமையை இமயத்தில் நிலைநாட்டும் வகையில் இந்திய அரசின் செம்மொழித் தகுதியினை பெற்றுத் தந்ததுடன் உலகமெல்லாம் தமிழின் பெருமையை ஒலிக்கும் வகையில் 2010 ஆம் ஆண்டு கோவை மாநகரில் உலக செம்மொழி மாநாட்டினை மிகக் குறுகிய இடைவெளியில் மிகச்சிறப்பாக நடத்திக் காட்டியவர்.

 

அந்த மாநாட்டின் வாயிலாக இணையத்தில் தொடங்கி இன்றைய நவீன கைப்பேசி வரை அனைத்திலும் தமிழை எளிமையாக்க பயன்படுத்த வித்திட்டவர். தமிழ் வழியில் படித்தோருக்கு அரசு வேலைவாய்ப்பில் 20 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கியவர்.

 

இளமை முதல் முதுமை வரை உறுதியாக போராடி தமிழ் மொழிக்கு தன் படைப்புக்களாலும் தனது ஆட்சிக் காலத் திட்டங்களாலும் சிறப்பு சேர்த்த தலைவர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளான ஜூன் 3ம் நாளை இனி ஆண்டுதோறும் “தமிழ்ச் செம்மொழி நாள்” என்று கடைபிடிப்போம் என இந்த முப்பெரும் விழாவில் உங்கள் பேராதரவோடு நான் அறிவிக்கிறேன்.

 

அதையொட்டி நம்முடைய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் பெயரில் ஒரு அறக்கட்டளை உருவாக்கப்படுகிறது. தலைவர் கலைஞர் அவர்களின் பெயரால் அவர் காலத்தில் அவரது சொந்த நிதியில் உருவாக்கப்பட்ட கலைஞர் கருணாநிதி அறக்கட்டளையின் சார்பில் மாதந்தோறும் மருத்துவ உதவி திட்டங்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தலைவர் கலைஞர் அவர்களுக்கு புகழ் சேர்க்கும் வகையில் பல்வேறு புதிய திட்டங்களைச் செயல்படுத்த “முத்தமிழறிஞர் கலைஞர் அறக்கட்டளை” எனும் புதிய அறக்கட்டளை தொடங்கப்படவிருக்கிறது.

 

முத்தமிழறிஞர் கலைஞர் அறக்கட்டளையின் சார்பில் ஏழை நோயாளிகள் மருத்துவ சிகிச்சைப் பெற ஆண்டுதோறும் உதவி செய்யப்படும். பள்ளி மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கப்படும். இளைய தமிழ்ச் சமுதாயம் ஏற்றம் பெறும் வகையில் முத்தமிழறிஞர் கலைஞர் அறக்கட்டளை சார்பில் குடிமைப்பணி தேர்வுகளுக்கான பயிற்சி மையம் ஐ.ஏ,எஸ். அகாடமி ஒன்று தொடங்கப்படும் இதன்வாயிலாக மத்திய - மாநில அரசுகள் நடத்தும் தேர்வுகள் உள்நாட்டு, பன்னாட்டு பொது நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் இவற்றில் இளைய சமுதாயம் வெற்றிகரமாக பணியிடம் பெற முழுமையான பயிற்சி அளிக்கப்படும்.

 

v3

 

பொது விருதுகள்: பல்வேறு துறைகளில் ஆண், பெண் இரு பாலின இளைஞர்களின் திறன்மிக சாதனைகளை பாராட்டும் வகையில் ஆண்டுதோறும் இளம் சாதனையாளர் விருது வழங்கப்படும்.

 

பத்திரிக்கை, நாடகம் - திரைப்படம், புதினம், சிறுகதை, கவிதை, தொலைக்காட்சித் தொடர் என அனைத்து துறைகளிலுமே, தன் எழுத்தாற்றலை வெளிப்படுத்திய தலைவர் கலைஞர் அவர்கள், அத்தனையிலும் திராவிட இயக்கக் கொள்கைகளையே முழங்கியிருக்கிறார். இந்த முழக்கம் தொடர்ந்திடும் வகையில், ஆண்டுதோறும் திராவிட இயக்க மூத்த படைப்பாளிகளுக்கும், இளைய படைப்பாளிகளுக்கும் முத்தமிழ் அறிஞர் தலைவர் அறக்கட்டளையின் சார்பில் “திராவிட படைப்பாளி விருது” வழங்கப்படும்.

 

கழக விருதுகள்:  இயக்கமே தன் இதயம், இதயம் இயங்குவதே இயக்கத்திற்காக தான் என 94 வயது நிறைவடையும் வரை கழகம் வளர்த்த தலைவர் கலைஞர் அவர்களின் வழியில் திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பேரியக்கத்தைக் கட்டிக் காக்கின்ற பணியில் மிகச் சிறப்பாக செயல்படுகின்ற ஒன்றிய, நகர, பகுதி, வட்ட, பேரூர், ஊராட்சி செயலாளர்களுக்கு முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அறக்கட்டளையின் சார்பில் விருது ஆண்டுதோறும் வழங்கப்படும்.

 

கழகத்தில் எந்தப் பதவியும் எதிர்பாராமல் சமூகப் பணிகளை மேற்கொண்டு அதன் வாயிலாக கழகத்திற்கு மக்களிடம் பெருமை சேர்க்கக்கூடிய உடன்பிறப்புகளுக்கு அறக்கட்டளையின் சார்பில் சிறப்பு விருது வழங்கப்படும் என்பதை தலைமைக் கழகத்தின் சார்பில் மிகுந்த மகிழ்ச்சியோடு நான் உங்கள் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

 

பேரன்புக்குரிய, இந்த முப்பெரும் விழா விருது வழங்கக்கூடிய இந்த மாபெரும் விழா என்று சொல்வதா! மாவட்ட அளவில் நடைபெறக்கூடிய மாநாடு என்று அழைப்பதா! அல்லது மாநில மாநாடா என்று எண்ணக்கூடிய அளவிற்கு மிகுந்த எழுச்சியோடு, ஏற்றத்தோடு நடைபெற்றுக் கொண்டிருக்கக் கூடிய இந்த விழாவினுடைய தலைவர் நம்முடைய பொதுச்செயலாளர் இனமான பேராசிரியர் பெருந்தகை  அவர்களே, தொடக்கத்தில் அனைவரையும் வரவேற்று மகிழ்ந்திருக்கக்கூடிய விழுப்புரம் மத்திய மாவட்ட திராவிட முன்னேற்ற கழகத்தின் செயலாளர் முன்னாள் அமைச்சர் என்னுடைய ஆருயிர் சகோதரர் முனைவர் டாக்டர் பொன்முடி அவர்களே,  வாழ்த்துரை வழங்கி அமர்ந்திருக்கக்கூடிய கழக பொருளாளர் என்னுடைய ஆருயிர் அண்ணன் துரைமுருகன் அவர்களே, தலைமைக் கழகத்தினுடைய முதன்மை செயலாளர் என்னுடைய கழுதகை நண்பர் டி.ஆர்.பாலு அவர்களே, கழக துணைப் பொதுச் செயலாளர்கள் ஐ.பெரியசாமி அவர்களே, திருமதி சுப்புலட்சுமி ஜெகதீசன் அவர்களே, வி.பி.துரைசாமி அவர்களே விருது பெற்றிருக்கக்கூடிய தந்தை பெரியார் விருது பெற்றுள்ள மும்பை தேவராஜன் அவர்களே, அறிஞர் அண்ணா விருது பெற்றுள்ள பொன் ராமகிருஷ்ணன் அவர்களே, கலைஞர் விருது பெற்றிருக்கக்கூடிய குத்தாலம் கல்யாணம் அவர்களே, பாவேந்தர் விருது பெற்றிருக்கக்கூடிய புலவர் இந்திரகுமாரி அவர்களே, பேராசிரியர் விருது பெற்றிருக்கக்கூடிய கவிக்கொண்டல் மா.செங்குட்டுவன் அவர்களே, கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அவர்களே, செய்தித் தொடர்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் அவர்களே, மாநிலங்களவை குழுத் தலைவர்  தங்கை கனிமொழி அவர்களே, வருகை தந்து இருக்கக்கூடிய தலைமைக் கழக நிர்வாகிகளே, மாவட்டக் கழகத்தினுடைய செயலாளர்களே, கழகத்தின் துணை அமைப்புக்களாம் தொழிலாளர் அணி, தொண்டரணி, மாணவரணி, மகளிரணி, இளைஞர் அணி, இலக்கிய அணி, விவசாய அணி, வழக்கறிஞர் அணி போன்ற பல்வேறு அமைப்புகளைக்  கட்டிக்காத்து வருகிற கழக காவலர்களே, பெருந்திரளாக திரண்டிருக்கக்கூடிய பெரியோர்களே, தாய்மார்களே, என் உயிரோடு கலந்து இருக்கக்கூடிய தலைவர் கலைஞர் அவர்களுடைய உயிரினும் உயிரான அன்பு உடன்பிறப்புகளே உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கம்.

 

“என் உயிரினும் மேலான தலைவர் கலைஞர் அவர்களுடைய அன்பு உடன்பிறப்புகளே”, இந்தச் சொல் நம்மை இணைக்கின்ற மந்திரச்சொல், ஒரே குடும்பமாக கட்டிப்போடுகின்ற சொல், இந்தச் சொல் கொள்கை உணர்வை குருதியோட்டமெங்கும் கலக்கின்ற சொல், அந்தச் சொல்லை சொல்லுகிற போது நீங்கள் எல்லாம் மகிழ்ச்சி அடைகிறீர்கள் உங்களுடைய ஆர்வத்தை வெளிப்படுத்துகிறீர்கள். உடன்பிறப்புகளே என்று நான் உங்களை அழைக்கும் போது எனக்கு ஏற்படக்கூடிய புத்துணர்வை என்னால் விவரிக்க முடியவே முடியாது, காரணம் நம் உயிரோடு கலந்திருக்கக்கூடிய தலைவர் கலைஞர் அவர்கள் நமக்காக உருவாக்கி தந்திருக்கக்கூடிய இலட்சிய உணர்வை ஊட்டுகின்ற சொல் அந்தச் சொல். கடந்த அரை நூற்றாண்டு காலத்திற்கு மேலாக தமிழகம் இந்தச் சொல்லை கேட்டு அந்த சொல்லுக்கும் குரலுக்கும் உருகி நின்றது.

 

இந்த தமிழகம் இனி ஒரே ஒரு முறை அந்த காந்தக் குரலை கேட்கவே கேட்க முடியாதா என்கிற அந்த ஏக்கப் பெருமூச்சோடு நாமெல்லாம் இந்த திடலிலேயே திரண்டிருக்கிறோம்.

இந்தச் சூழ்நிலையில் தான் ஈரோட்டுச் சிங்கம் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் பிறந்த நாள், வங்கக் கடலோரத்தில் ஆறடி சந்தனப் பேழையில் உறங்கியும் உறங்காமல் உறங்கி கொண்டிருக்கக்கூடிய நம்முடைய அறிவுலக மேதை அறிஞர் அண்ணா பிறந்தநாள், அறிஞர் அண்ணா அவர்களால் உருவாக்கித் தரப்பட்டிருக்கக்கூடிய திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய பிறந்தநாள் இந்த மூன்றையும் இணைத்து முப்பெரும் விழாவை நாம் இங்கே கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். ஆட்சியில் இருந்தாலும் இல்லை என்று சொன்னாலும் எதிர்க்கட்சிகளுடைய கருத்துக்களுக்கு ஏழைகளுடைய குரலுக்கு மதிப்பளிக்கக்கூடிய ஒரு நாகரீகத்தை தமது இறுதி மூச்சு வரை கடைபிடித்தவர் தான் நம்முடைய தலைவர் கலைஞர் என்பதை யாரும் மறுத்திட மறைத்திட முடியாது.

 

கலைஞர் அவர்களை யார் வேண்டுமானாலும் அணுகலாம், எப்பொழுது வேண்டுமானாலும் சந்திக்கலாம், எதைப்பற்றி வேண்டுமானாலும் அவரிடத்தில் விவாதிக்கலாம், பத்திரிக்கையாளர்களாக இருந்தாலும் சரி, கழக முன்னோடிகளாக இருந்தாலும் சரி, கழக நிர்வாகிகளாக இருந்தாலும் சரி, மாவட்ட அளவிலே, ஒன்றிய அளவிலே இருக்கக்கூடிய நிர்வாகிகள் மட்டுமல்ல கழகத்தினுடைய கடைசி தொண்டனாக இருக்கக்கூடிய எந்த தொண்டனாக இருந்தாலும் தலைவர் அவர்களை உரிமையோடு சந்திக்கலாம் கேள்விகள் கேட்கலாம் விவாதிக்கலாம். அதற்கு பொறுமையாக பதில் சொல்லக்கூடிய வழக்கத்தை, பழக்கத்தை தொடர்ந்து கடைபிடித்தவர் தான் நம்முடைய தலைவர் கலைஞர் .

 

அத்தகைய பாரம்பரிய அரசியல் பண்பாட்டு பின்னணியில் வார்த்தெடுக்கப்பட்டிருக்கக் கூடியவன் தான் உங்கள் முன்னால் நான் நின்று கொண்டு இருக்கிறேன்.

அவருடைய வழியில் அவர் வகுத்து தந்திருக்கக்கூடிய அந்த கொள்கையின் வழியில் இன்று திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தலைவராக பொறுப்பேற்றிருக்கககூடிய நானும் சொல்கிறேன். என்னிடத்தில் கழகத் தோழர்கள் மட்டுமல்ல, கடைக்கோடி தொண்டரும் என்னிடம் குறை நிறைகளை சொல்லக்கூடிய உரிமை உங்கள் அனைவருக்கும் உண்டு! உண்டு! உண்டு! என்பதை நான் மீண்டும் ஒருமுறை தெரிவிக்க கடமைப்பட்டிருக்கிறேன். 

 

தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, திராவிட முன்னேற்ற கழகம் என்கிற அந்த முக்கனியே நமக்காக உருவாக்கி அந்த சுவையை நாமெல்லாம் பகிரக்கூடிய அந்த வாய்ப்பு ஏற்படுத்தி, நமக்கு வழங்கியவர் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள், அதை நினைவுபடுத்தக்கூடிய வகையில் தான் இந்த முப்பெரும் விழா, இன்று விழுப்புரத்திலே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அண்ணன் துரைமுருகன் அவர்கள் இங்கு பேசுகிறபோது குறிப்பிட்டுச் சொன்னார். பொன்முடி அவர்களிடத்திலே எந்த பொறுப்பை ஒப்படைத்தாலும் அதை வெற்றிகரமாக நிறைவேற்றித் தரக்கூடிய ஆற்றல் அவருக்கு உண்டு என்பதை அவர் எடுத்துச் சொன்னார் அவரே பாராட்டியிருக்கிறார் என்று சொன்னால் நான் அதிகமாக அவரை பாராட்ட வேண்டிய அவசியம் இல்லை, இன்னும் வெளிப்படையாக சொல்ல வேண்டுமென்று சொன்னால் பொன்முடியை பாராட்டினால் அது என்னை பாராட்டுவதாக அமைந்து விட வேண்டும் என்ற எண்ணம் வந்து விடும்.

 

தலைவர் கலைஞரிடத்திலே எந்த அளவிற்கு அன்பை மட்டுமல்ல, உரிமையை மட்டுமல்ல, அவர் நம்பிக்கையும் பெற்றிருந்தார் என்பதை யாரும் மறுக்க முடியாது. அந்த நம்பிக்கையோடுதான் இந்த ஆண்டு முப்பெரும் விழாவை நீங்கள் நடத்த வேண்டுமென்று தலைமைக் கழகத்தின் சார்பில் நாங்கள் அவர்களை கேட்ட நேரத்தில் மறுப்பேதும் சொல்லாமல் நாங்கள் எடுத்துச் சொன்ன அடுத்த வினாடியே சம்மதம் தந்து, இதை இன்றைக்கு வெற்றிகரமாக, இதோ முப்பெரும் விழா என்பது வெறும் விழாவோடு அமைந்துவிடக் கூடாது, ஏதோ நம்மைப் பற்றி நம்முடைய பெருமைகளை, சிறப்புக்களை மாத்திரம் மட்டும் இந்த நிகழ்ச்சியாக அமைந்து விடக்கூடாது இந்த விழா, இந்த விழாவினுடைய நாயகர்களாக விளங்கிக் கொண்டிருக்கக்கூடிய தந்தை பெரியார்,  பேரறிஞர் பெருந்தகை அறிஞர் அண்ணா அவர்களுடைய லட்சியங்களை மக்களுக்கு எடுத்துச் சொல்லக் கூடிய வகையிலே இன்றைக்கு இந்த விழாவை, மிகுந்த எழுச்சியோடு நடத்திக் கொண்டிருக்க கூடிய பொன்முடி அவர்களுக்கு பொருளாளர்  பாராட்டியிருந்தாலும் தலைவர் என்கிற முறையிலே தலைமைக் கழகத்தின் சார்பில் ஏன் உங்கள் அனைவரின் சார்பில் என்னுடைய வாழ்த்துக்களை, பாராட்டுகளை அவருக்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

 

இந்த நிகழ்ச்சிக்கு நாங்கள் சென்னையில் இருந்து புறப்பட்டு இந்த விழுப்புரத்திற்கு வருகின்ற நேரத்தில் எனக்கு எத்தனையோ நினைவுகள் வந்தன. 15 ஆண்டுகளுக்கு முன்னால் அதாவது 20.9.2003- ஆம் ஆண்டு நடைபெற்ற விழுப்புரம் மண்டல மாநாடு என்னுடைய நினைவுக்கு வந்தது. 1970-ஆம் ஆண்டு முதல் எத்தனையோ மாநாடுகளில் நான் பங்கேற்றிருக்கிறேன். 1980ம் ஆண்டுகளில் நான் எத்தனையோ மாநாடுகளில் உரையாற்றி இருக்கிறேன். ஆனால் 2003-ம் ஆண்டு நடைபெற்ற விழுப்புரம் மாநாட்டில், அன்றைக்கு பொன்முடி முன்னின்று நடத்திய மண்டல மாநாட்டில் தலைமையேற்கக்கூடிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. 2003-ஆம் ஆண்டு மாநாட்டில் தலைமையேற்று உரையாற்ற வந்த நான், இன்றைக்கு இயக்கத்தினுடைய தலைவராக அதே பொன்முடி முன்னின்று நடத்தக்கூடிய இந்த நிகழ்ச்சிக்கு நான் வந்திருப்பதை எண்ணிப்பார்க்கிறேன். மகிழ்ச்சியடைகிறேன் – பெருமைப்படுகிறேன் - பூரிப்படைகிறேன் – புலங்காகித உணர்வோடு நான் உங்கள் முன்னால் இன்று நின்றுகொண்டிருக்கிறேன்.

   

காரணம் தலைவர் ஆனதற்கு பிறகு முதன்முதலாக கலந்து கொள்ளக்கூடிய விழா இந்த விழா.  அதுமட்டுமல்ல, விழுப்புரத்திலே இந்த முப்பெரும் விழா என்னுடைய வாழ்நாளில் மறக்க முடியாத விழாவாக அமைந்திருந்தாலும் என்னுடைய வாழ்நாளில் விழுப்புரத்தை என்னால் மறக்கவும் முடியாது, மறப்பதற்கான வாய்ப்பும் இருக்காது. விழுப்புண்ணை மறப்பவன் மனிதன் அல்ல எனவே, நான் விழுப்புரத்தை மறக்க மாட்டேன். அன்று நடந்த அந்த இரண்டு நாள் மாநாட்டில் தலைவராக அன்றைக்கு மாநாட்டிற்கு பொறுப்பேற்றிருந்த என்னை பலரும் பாராட்டி பேசியிருந்தார்கள். ஆனால், நிறைவாக நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள் பேசியதை இன்றைக்கும் என்னால் மறக்க முடியவில்லை. நிறைவுரை ஆற்றுகிற போது குறிப்பிட்டு சொன்னார்.

 

"தந்தைக்கு நேராக மகனைப் பாராட்டினார்கள் என்று நான் கருதமாட்டேன். தலைவனுக்கு நேராக ஒரு தொண்டனைப் பாராட்டினார்கள் என்று நான் கருதிக்கொண்டிருக்கிறேன் என சொல்லிவிட்டு சொல்லுகிறார். நான் தொண்டன் தம்பி ஸ்டாலினுக்கு சொல்லிக்கொள்வேன்.

 

“நான் எனது 26 ஆவது வயதிலே தான் ஒரு மாநாட்டிற்குத் தலைமை ஏற்கக்கூடிய வாய்ப்பைப் பெற்றேன். 26வது வயதில் முதன் முதலில் மாநாட்டிற்கு தலைமை ஏற்றதை கலைஞர் சொல்லுகிறார்.  உனக்கு அந்த வாய்ப்பு 50வது வயதிலே தான் கிடைத்திருக்கிறது. இவ்வளவு தாமதமாகி கிடைப்பதற்குக் காரணம், எதுவும் அவசரமாக விரைவாக கிடைப்பதைவிட தாமதமாக கிடைத்தால் தான் அதற்கு வலு அதிகம். அந்த வலு உனக்கு வந்து சேர்ந்திருக்கிறது" என்று கலைஞர் குறிப்பிட்டார்.

 

தலைவர் கலைஞர் அவர்களே! உங்களின் தொண்டனான இந்த ஸ்டாலின் இன்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவனாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட வலிமையோடு இந்த விழுப்புரத்துக்கு வந்திருக்கிறேன்.

அதே விழுப்புரம் மாநாட்டில் தான் தலைவர் கலைஞர் எனக்கு ஒரு அறிவுரையும் சொன்னார். என்ன அறிவுரை தெரியுமா?

"எல்லோரும் உன்னை அங்கீகரித்ததாக கருதிக் கொண்டு நீ நடைபோட்டு விடக் கூடாது. எங்கேயிருந்து உனக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பது வெளியே தெரியாமலே கூட இருக்கலாம். அந்த அங்கீகாரத்தையும் பெறுகின்ற அளவுக்கு அந்த அணுகுமுறையை நீ கற்றுக் கொள்ள வேண்டும். அப்பொழுது தான் இந்த மாநாட்டில் கிடைத்த தலைமைப் பதவி நிலைக்கும் என்பதை மாத்திரம் உனக்கு நான் தெரிவித்துக் கொள்கிறேன்." ஒரு கட்டளை போட்டார் அந்த கட்டளையை இன்றைக்கும் என்னுடைய இதயத்தில் ஒரு கல்வெட்டாக பொறிக்கப்பட்டுள்ளது என்பதை நான் இங்கே பெருமையோடு தெரிவுத்துக்கொள்கிறேன்.

 

தலைவர் கலைஞர் அவர்களே திராவிட இயக்கத்தினுடைய முதுபெரும் தூண் நம்முடைய பேராசிரியர்.  95 வயது அடைந்திருக்கும் நம்முடைய பேராசிரிய பெருந்தகை தொடங்கி நம் இயக்கத்தில் இன்றைக்கு இணைந்திருக்கிற இளைஞன் வரைக்கும் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட தலைவனாக, உங்களின் ஸ்டாலின் உருவாகி இருக்கிறான் என்பதைச் சொல்வதற்காகத் தான் நான் விழுப்புரம் வந்திருக்கிறேன் தலைவர் அவர்களே!

 

அந்த மாநாட்டில் தான், கலைஞர் அவர்கள் ஒரு செய்தியைச் சொல்லி வருத்தப்பட்டார். ஆனால், அந்த வருத்தத்திற்கு விளக்கமும் தந்தார், அது என்ன தெரியுமா? தலைவர் கலைஞர் தலைவரான போது பேராசிரியர் அவர்கள் கூட முதலில் நம்பிக்கை பெறவில்லை, பின்னர் எனது செயலைப் பார்த்து தலைவராக அவர் ஏற்றுக் கொண்டார்.  கலைஞர் இந்த செய்தியைக் குறிப்பிட்டார். கலைஞர் அவர்களை விட நான் கொடுத்து வைத்தவன்.

 

என்னைப் பேராசிரியர் அவரகள் தான் முதன்முதலில் முன்மொழிந்திருக்கிறார். ஸ்டாலின் தான் தலைவர் என்பதை பொதுக்குழுவில் பேராசிரியர் அவர்கள் தான் அறிவித்தார். எனவே நான் கொடுத்து வைத்தவன் தானே.

 

நான் கலைஞர் அல்ல! இதனை பொதுக்குழுவிலேயே சொன்னேன். பொதுக்குழுவிலே குறிப்பிட்டுச் சொன்னேன். நான் கலைஞர் அல்ல, ஆனால் கலைஞரைப் போல் உழைக்கத் தெரியும். கலைஞர் தந்த துணிச்சல் இருக்கிறது. இந்த துணிச்சலும், உழைப்பும் அவர் தந்த பயிற்சியால் எனக்கு வந்திருக்கிறது.

 

கலைஞருக்கு பின் நீதான் தலைமைக்கு தகுதியானவன் என்று ஒரு மனதாய் நீங்கள் தேர்ந்தெடுத்தீர்கள். உங்கள் உதிரத்தின் உறவாய் உங்கள் கரம் பற்றி நான் எழுந்து நிற்கிறேன். நான் முன்பு சொன்னது போல புதிதாய் பிறந்து நிற்கிறேன். முப்பெரும் விழாவை கொண்டாடுகிற இந்த நேரத்தில் தமிழ்நாட்டிற்காக தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர் அவர்கள் உருவாக்கித் தந்திருக்க்கூடிய சுயமரியாதை – சமூகநீதி – சமதர்மம் – பகுத்தறிவு இவை நிலைநாட்டப்பட வேண்டும். தமிழ்நாட்டிற்கு இன்றைக்கு பிடித்திருக்க்கூடிய இந்த சோதனையில் இருந்து இந்த தமிழ்நாட்டை காப்பாற்ற எடுபிடியாய், அடிமைகளாய் செயல்பட்டுக் கொண்டிருக்கூடிய இந்த அ.தி.மு.க ஆட்சிக்கு முடிவு கட்டுவதற்கு நாம் உறுதியெடுக்க வேண்டும். நாம் ஓய்வெடுக்க முடியாது, நாம் ஓய்வெடுத்துவிட்டால் இருண்டு கிடக்கின்ற தமிழகம் விடியவே விடியாது. அந்த இலக்கை அடைவதற்காக, ஊக்கத்தையும், உற்சாகத்தையும் புதுப்பித்துக்கொண்டே இருந்தால் தான், மதசார்பற்ற ஆட்சியினை உருவாக்கிட முடியும். மதவாத நச்சுக்காற்றை முறியடித்து பாசிச ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும். பாசிச நாடுகளில் எதிர்க்கட்சிகள் இருக்கக்கூடாது. பேச்சுரிமை கிடையாது, எழுத்துரிமை கிடையாது என்ற நிலை உண்டு.

முழு அளவில் பாசிசத்தைப் பின்பற்றியிருக்கக்கூடிய நாடுகளுடைய பட்டியல் எடுத்துப் பார்த்தால் ஜெர்மனியினுடைய நாஜி அரசு, இத்தாலியினுடைய முசோலினி அரசு ஆகியவற்றை நாம் இன்றைக்கு அடையாளம் காட்டுகிறோம், அதற்கு ஈடாக இணையாக நம்முடைய நாட்டில் மத்தியில் மோடி அரசுக்கும், மாநில பேடி அரசுக்கும் உண்டு என்பதை நான் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன். வேதனைப்படுகிறேன். இந்திய ஜனநாயகத்திற்கு விரோதமான பாசிச ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது. அதனால்தானே, ‘பாசிச ஆட்சி ஒழிக’ என்று குரல் கொடுத்த ஒரு மாணவியினுடைய பாஸ்போர்ட்டை இன்றைக்கு முடக்கியிருக்கிறார்கள்.

 

இந்துக்கள் மீது தூசியோ துரும்போ விழுந்தாலும் காவி புரட்சி வெடிக்கும் என்று கபட வார்த்தைகளைப் பேசி இந்த தமிழகத்தையும், தமிழினத்தையும் துண்டாட நினைத்துக் கொண்டிருக்கிறார்களே, துடித்துக் கொண்டிருக்கிறார்களே நான் அவர்களைப் பார்த்து கேட்கிறேன்.

 

பல கோடி ரூபாயை உங்களுக்குத் தேர்தல் நிதியாக தாரை வார்த்த வேதாந்தா நிறுவனத்திற்காக - அவர்களின் கைக்கூலிகளாக மாறி, தூத்துக்குடியில் அநியாயமாக துப்பாக்கிச் சூடு நடத்தினார்களே உங்களால் கொல்லப்பட்ட 13 பேரில் 9 பேர் இந்துக்கள் தானே?

 

இந்த வருடம் ‘நீட்’டால் இறந்த பிரதீபா ஓர் இந்துச் சகோதரி தானே? கேரளாவிற்குத் தேர்வெழுத அலைக்கழிக்கப்பட்டு இறந்த ஒரு மாணவனுடைய தந்தை கிருஷ்ணசாமி ஸ்ரீனிவாசனும் ஓர் இந்துச் சகோதரர் தானே?

 

நெடுவாசல், கதிராமங்கலத்தில் போராடி, வாழ வழியின்றி தினம்தினம் செத்துக் கொண்டிருக்கிறார்களே அவர்கள் இந்துக்கள் தானே? கடன் தள்ளுபடிக்காக டெல்லியிலே போராடி நிர்வாணமாக ஓடிய விவசாயிக்ள் இந்துக்கள்தானே?

 

‘இம்’மென்றால் சிறைவாசம்; ‘ஏன்’ என்றால் துப்பாக்கிச்சூடு என்பதே உங்கள் அரசியல் நாகரிகம். அனைத்துக் கொடுமைகளையும் அரங்கேற்றி விட்டு, யாரிடம் கபட நாடகம் ஆட இன்றைக்கு முற்படுகிறீர்கள்? நான் உறுதியோடு சொல்லுகிறேன், தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் உங்களிடம் ஏமாற மாட்டார்கள். பாடம் புகட்டுவதற்கான நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அதற்கான, சூழ்நிலை இன்றைக்கு உருவாகிக் கொண்டிருக்கிறது.

 

மாநிலங்களை அடக்கி ஆளக்கூடிய பா.ஜ.க அரசால் அதிகமாக பாதிக்கப்பட்டிருக்கூடிய மாநிலங்களில் முதல் இடம் எதற்கு என்று சொன்னால், நம்முடைய தமிழ்நாட்டிற்குத் தான். காரணம் இந்த மாநிலத்தில் ஆட்சியாளர்கள் அடிமைகளாகத்தான் கோட்டையில் இருக்கிறார்கள். கொள்ளையடிப்பதுதான் அவர்களுடைய இலட்சியம், மானம், மரியாதை, உரிமைகள் அனைத்தையும் அடமானம் வைத்துவிட்டு ஆட்சியை காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்பதற்காக மட்டுமே ஆட்சியிலே இருப்பதுதான் அவர்களது இலட்சியம், ஊழல் செய்வதுதான் அன்றாட பணி. நாளொரு ஊழல் பொழுதொரு ஊழல் என்று சொல்லுவார்களே அதுதான் இன்றைக்கு அவர்களுடைய முழக்கமாக இருந்து கொண்டிருக்கிறது.

 

குட்கா ஊழல், குவாரி ஊழல், முட்டை ஊழல், நெடுஞ்சாலை ஊழல், உள்ளாட்சி ஊழல், பேருந்து ஊழல், ஸ்மார்ட் சிட்டி ஊழல், வாக்கி டாக்கி ஊழல், டெண்டரிலே ஊழல், பினாமி ஊழல், நின்றால் ஊழல், நடந்தால் ஊழல், படுத்தால் ஊழல், உட்கார்ந்தால் ஊழல், ஊழலோ ஊழலாக ஒரு ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோருக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் ரெய்டுகள் நடக்கிறது. அமைச்சரினுடைய வீட்டிலேயே ரெய்டு நடக்கிறது. பொறுப்பிலே இருக்கக்கூடிய தலைமைச் செயலாளர், வீடுகளிலே அலுவலகத்திலே ரெய்டு நடக்கிறது. இதைவிட வெட்கக்கேடு - மானக்கேடு காவல்துறையினுடைய தலைவராக இருக்கக்கூடிய டி.ஜி.பி. இல்லத்திலே ரெய்டு நடக்கக்கூடிய நிலை இதுவரை தமிழ்நாட்டிலே வந்திருக்கிறதா? நான் கேட்கிறேன்.

யார் யாருக்கு ஊழல்? யார் யாருக்கு இலஞ்சம்? யார் யாருக்கு கமிஷன்? எவ்வளவு பர்சன்டேஜ்? டைரி சிக்கியுள்ளது. காருக்குள் பதுக்கி வைக்கப்பட்ட பணம் கட்டுக்கட்டாக சிக்கியுள்ளது. ஆனால், ஆட்சியாளர்கள் மட்டும் இன்னும் சிக்கவில்லை சிக்கப் போகிறார்கள். எப்பொழுது?

விரைவிலே, தமிழகத்திலே திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஆட்சி உருவாகிற நேரத்திலே கரன்சி நோட்டுகளை எண்ணிக் கொண்டிருக்கக் கூடியவர்கள் கம்பி எண்ணக்கூடிய சூழ்நிலை வரப்போகிறதா இல்லையா என்று பாருங்கள்.

 

தொடர்ந்து பி.ஜே.பி அரசுக்கு காவடி தூக்கிக்கொண்டு வருகிற அ.தி.மு.க அரசுதான் இன்றைக்கு தமிழ்நாட்டிற்கு ஒரு மிகப்பெரிய அவமானச் சின்னமாக விளங்கிக் கொண்டிருக்கிறது. கொள்கையில்லாத ஒரு ஆட்சி கொள்கையென்றால் என்ன என்றே தெரியாத, புரியாத ஒரு ஆட்சி நாட்டிற்கே ஒரு மிகப்பெரிய ஆபத்து.

மறந்துகூட ஒரு இடத்திலே கொள்கை என்றால் என்ன என்று கேட்டீர்கள் என்றால்.?

யாரும் கேட்டு விடாதீர்கள். கேட்டால் சொல்லுவார்கள் தெர்மாகோலா? என்று கேட்கக்கூடிய அறிவியல் மேதாவிகள் இருக்கிறார்கள் அங்கே.

அவர்கள் பொய் பித்தலாட்டத்தை தொடர்ந்து பறைசாற்றிக் கொண்டிருக்கின்ற சத்திய சீலர்கள். ஒரு நிமிடம் கூட இந்த தமிழகத்தை ஆட்சி செய்ய தகுதி இல்லாத ஜோக்கர்கள் அவர்கள். அரசு நிர்வாகத்தை நாசமாக்கி தமிழ்நாட்டை இன்று சீரழித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இவர்களால் தான் நாம் ஜல்லிக்கட்டுக்கு நாம் மல்லுக்கட்டினோம்! இவர்களால் தான் ஸ்டெர்லைட் போராட்டத்திற்கு நம் உறவுகளை பறிகொடுத்தோம், பறிதவித்தோம்!

 

தங்கள் பதவிகளைக் காப்பாற்றிக்கொள்ள பி.ஜே.பி அரசுக்கு அடிமைகளாய் இந்த ஆட்சியில் இருந்து கொண்டிருக்கின்றது. இந்த ஊழல் ஆட்சியை, அடிமை ஆட்சியை வேரோடு பிடிங்கி விரட்டி அடிக்க வேண்டும்.  அது நம்மால் முடியும்! கலைஞரின் உடன்பிறப்புகளால் உங்களால் முடியும்!

நான் கேட்கிறேன்! அண்மையிலே பாரதத்தினுடைய பிரதமராக இருக்கக்கூடிய மாண்புமிகு மோடி அவர்கள், ஒரு கூட்டத்தில் பேசுகிற பொழுது அவர் ஆற்றிய உரை, “எங்களுடைய 48 மாத நிர்வாகம் குறித்து விவாதிக்க தயார்” என்று கூறியிருக்கிறார்.

 பிரதமர் மோடி அவர்களே, விழுப்புரத்தில் நடைபெறக்கூடிய இந்த முப்பெரும் விழா மேடையில் இருந்து நான் கேட்கிறேன். உங்களால் பதில் தர முடியுமா? 

·  வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கக்கூடிய கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொருவருக்கும் 15 லட்சம் ரூபாய் வங்கியிலே போடுவோம் என்று உறுதி தந்தீர்களே. நிறைவேற்றி விட்டீர்களா? நான் கேட்கிறேன்.

·      பத்துக்கோடிப் பேருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கப் போகிறோம் என்று சொன்னீர்களே! எங்காவது வேலை வாய்ப்பு உருவாக்கி தரப்பட்டிருக்கிறதா?

·         கருப்புப் பணத்தை ஒழிக்கத் தான் இந்த பண மதிப்பிழப்பு என்று சொன்னீர்களே! கருப்பு பணம் ஒழிந்து விட்டதா? 

·         வறுமையை ஒழிப்பதற்காக கொண்டுவரப்பட்டது பண மதிப்பிழப்பு என்று சொன்னீர்களே!  வறுமை ஒழிந்து விட்டதா?

·         உச்சநீதிமன்ற நீதிபதிகளே வீதிக்கு வந்து பேட்டி தருகிறார்களே யாருடைய ஆட்சியிலாவது இது நடந்து இருக்கிறதா?

·         நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் போட்டு அனுப்பி வைத்தோமே என்னாயிற்று? இதற்கு பதில் சொல்ல முடியுமா?

·         ராஜ்பவன்கள் கவர்னர் மாளிகையா? அல்லது மாநில அரசுகளை கண்காணிக்கக்கூடிய கேமராக்களா?

·         இந்த நான்காண்டு காலத்தில் தமிழ்நாட்டிற்கு நீங்கள் செய்த உருப்படியான திட்டம் என்ன என்று சொல்லுங்கள்? ஒன்றாவது சொல்லுங்கள் பார்ப்போம்?

 

இதைத்தான் இந்த விழுப்புரத்தில் இருந்து விந்திய மலையை நோக்கி ஸ்டாலின் கேட்கக்கூடிய கேள்விகள் பதில் சொல்லுங்கள். மாநிலத்தை ஆளுகின்ற இந்தக் கொள்ளைக் கூட்டத்தையும் அவரைக் காப்பாற்ற கூடிய வகையில் செயல்பட்டுக் கொண்டிருக்கக்கூடிய மத்தியில் ஆளக்கூடிய மதவாத, சர்வாதிகார இரட்டை வேட பா.ஜ.க. அரசையும் ஜனநாயக களத்தில் வீழ்த்துவது ஒன்றுதான் நம்முடைய தற்போதைய இலக்கு.

இது முப்பெரும் விழா மேடை மட்டுமல்ல, தேர்தல் களத்திற்கு நாம் தயாராகி விட்டோம் என்று பறைசாற்றுகின்ற பாசறை இது! மறந்து விடக்கூடாது. எந்தத் தேர்தல் என்று உடன்பிறப்புகளாக இருக்கக்கூடிய நீங்கள் கேட்கக் கூடும். திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலா? உள்ளாட்சித் தேர்தலா? சட்டமன்றத் தேர்தலா? நாடாளுமன்றத் தேர்தலா? எந்த தேர்தலாக இருந்தாலும் நாட்டின் நிலைமையைக் கருதி களம் எதுவாக இருந்தாலும் வெற்றி திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு தான் அதில் எந்தளவும் சந்தேகமும் இல்லை.

இங்கு இருக்கக்கூடிய எடப்பாடி அரசு வீடு புகுந்து திருடவில்லையே தவிர எல்லா அமைச்சர்களும் இன்றைக்கு கொள்ளை அடித்துக் கொண்டிருக்கிறார்கள். வீடு புகுந்து திருடவில்லை அவர்கள், அது மட்டும் தான். 

ஈரோடு மண்டல மாநாட்டிலே நான் குறிப்பிட்டேன். வெற்றிக் கனியைப் பறிப்போம் தலைவர் கலைஞர் இடத்திலே கொண்டு போய் சமர்ப்பிப்போம் ஆனால், அதற்குள் அவர் மறைந்து விட்டார். பொதுக்குழுவிலே குறிப்பிட்டுச் சொன்னேன்! அவர் மறையவில்லை! அவர் உங்களுடைய உருவத்திலும் இருக்கிறார்! ஒவ்வொருடைய உள்ளத்திலும் இருக்கிறார். கலைஞர் இருந்து சாதிக்க வேண்டியடை கலைஞர் மகன் சாதித்தான்! தலைமை தொண்டன் சாதித்தான் என்ற பெயர் வாங்கக் கூடிய மகனாக, பிள்ளையாக நான் மாற வேண்டும் அதற்கு நீங்கள் துணை நிற்க வேண்டும்.

 

எனவே, தலைவனாக மட்டுமல்ல உங்களில் ஒருவனாக பாருங்கள், உங்களின் உடன்பிறப்புகளின் ஒருவனாக என்னை பாருங்கள்! 70 ஆண்டு காலம் பட்டொளி வீசிப் பறக்கக்கூடிய நம்முடைய இருவண்ணக் கொடி இன்னும் 100 ஆண்டுகளுக்கு செலுத்தி தமிழகத்தை வளம் பெற்ற நாடாக நாம் உருவாக்கிட வேண்டும்.

இந்த முப்பெரும் விழாவில் சூளுரைப்போம்!

பாசிச ஆட்சி முடியட்டும்!

மக்களாட்சி விடியட்டும்!

ஊழல் ஆட்சி முடியட்டும்!

திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஆட்சி மலரட்டும்!

விடைபெறுகிறேன் நன்றி வணக்கம்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

“முதல்வர் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழகத்தை உருவாக்கவுள்ளார்” - அமைச்சர் சக்கரபாணி 

Published on 30/11/2023 | Edited on 30/11/2023

 

 CM stalin will make Tamil Nadu the premier state in India says Minister Sakkarapani

 

திண்டுக்கல்லில் உள்ள தனியார் மண்டபத்தில்  மாவட்ட ஆட்சித் தலைவர் பூங்கொடி தலைமையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான சிறப்பு நோக்கு கூட்டத்தில் உலக முதலீட்டாளர்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை உணவு மற்றும் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி வழங்கினார். இதில் வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்திராஜன் மற்றும் திண்டுக்கல் எம்.பிக்கள் வேலுச்சாமி, ஜோதிமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 

இதில், உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி பேசும்போது, “தமிழ்நாடு முதலமைச்சர் தொழில்துறையில் தமிழகம் முதன்மை மாநிலமாக வரவேண்டும் என்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். ஆட்சி பொறுப்பேற்று கடந்த 2 ஆண்டுகளில் மேற்கொண்ட நடவடிக்கையின் பயனாக இந்தியாவில் தொழில் துறையில் 14வது இடத்தில் இருந்த தமிழகம் தற்போது 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. விரைவில் முதலிடத்திற்கு வரவேண்டும் என்பதற்காக தொழில் வளர்ச்சிக்கு தேவையான பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. 

 

தமிழகத்தில் தொழில் வளர்ச்சிக்குத் தேவையான இடவசதி, தண்ணீர் வசதி, தொழிலாளர் தேவை, சாலை வசதி, சட்ட ஒழுங்கு, மின்சார வசதி எனப் பல்வேறு உதவிகளை வழங்கி தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தி வருகிறார். அதுபோல் தமிழ்நாடு முதலமைச்சர்  துபாய், அபுதாபி, ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளுக்குச் சென்று, அங்குள்ள தொழில் முதலீட்டாளர்களை சந்தித்து, தமிழகத்தில் தொழில் தொடங்கிட முதலீடு செய்ய அழைப்பு விடுத்துள்ளார்கள். அதனடிப்படையில், உலக முதலீட்டாளர் மாநாடு சென்னையில் வரும் 2024 ஆம் ஆண்டு ஜனவரி 7 மற்றும் 8  ஆகிய நாட்களில் நடைபெறவுள்ளது.

 

 CM stalin will make Tamil Nadu the premier state in India says Minister Sakkarapani

 

அதுபோல் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும். படித்த இளைஞர்களை தொழில் முனைவோர்களாக உருவாக்க வேண்டும் என்பதற்காக நான் முதல்வன் திட்டத்தில் பல்வேறு தொழில் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் 13 இலட்சம் இளைஞர்கள் பயனடைந்துள்ளனர். சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கி வழங்கப்பட்டுள்ளது. தொழில்துறை வளர்ந்தால்தான் நாட்டின் பொருளாதாரம் உயரும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும், படித்த இளைஞர்கள் தொழில் தொடங்க முன்வருவார்கள் என்பதற்காக அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி, தொழில் முனைவோர்களை ஊக்குவித்து வருகிறது. 

 

தமிழகத்தில் எதிர்வரும் 2030 ஆம் ஆண்டிற்குள் நிலையான நீடித்த வளர்ச்சியை நோக்கமாக கொண்டு ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பு கொண்ட பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக உலக முதலீட்டாளர் மாநாடு நடைபெறவுள்ளது. மாநாட்டின் வாயிலாக குறு, சிறு தொழில் முதலீடு ரூ.60,000 கோடி இலக்காக கொண்டு செயல்பட்டு வருகிறது. அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளும் நிறுவனங்களுக்கு, அனுமதிகள், மானியங்கள், கடனுதவிகள் வழங்கப்படும். இந்த வாய்ப்பை தொழில் முனைவோர்கள், முதலீட்டாளர்கள் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தமிழகத்தில் தொழில் முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில், வளர்ந்து வரும் தொழில்நுட்பத்திற்கேற்ப படித்த இளைஞர்களுக்கு புதிய தொழில் பயிற்சிகளை அளித்து, அவர்களின் எதிர்காலத்தை பிரகாசமாக உருவாக்கிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

 

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் பல்வேறு கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. தாட்கோ மூலமாக தொழில் கடனுதவிகள் வழங்கப்படுகின்றன. புதிய தொழில்கள் தொடங்கப்படும் மாவட்டங்களில், அதே மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும். திண்டுக்கல் மாவட்டத்தில், 143 சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ஊக்குவிப்பு மானியமாக ரூ.14.23 கோடியும், மானியத்துடன் கூடிய சுயதொழில் கடனுதவி திட்டத்தில் 318 உற்பத்தி, சேவை மற்றும் வணிக நிறுவனங்களுக்கு தொழில் ஊக்குவிப்பு மானியமாக ரூ.7.49 கோடியும் வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட அளவிலான தொழில் முதலீடுகள் புரிந்துணர்வு ஒப்பந்தம் 23 நிறுவனங்கள் சார்பில் ரூ.331.33 கோடி அளவிற்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

 

5 பயனாளிகளுக்கு ரூ.59.81 இலட்சம் மதிப்பிலான கடனுதவி வழங்கப்பட்டுள்ளது, இதில் ரூ.19.45 இலட்சம் மானியமாக வழங்கப்படுகிறது. தொழில் வளர்ச்சியில் தமிழகத்தை இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக உருவாக்க தமிழ்நாடு முதலமைச்சர் உறுதியாக உள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தில் தொழில் தொடங்கிட தேவையான அனைத்து வசதிகளையும் மாவட்ட நிர்வாகம் செய்து கொடுக்கும். இந்த வாய்ப்புகளை தொழில் முனைவோர்கள், தொழில் முதலீட்டாளர்கள் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்” என்று கூறினார்.

 

 

Next Story

“கச்சத்தீவு பிரச்சனையில் துரோகத்தின் மறுஉருவம் திமுகதான்” - ஓ.பி.எஸ் தாக்கு

Published on 19/08/2023 | Edited on 19/08/2023

 

DMK has committed betrayal in the Kachchatheevu issue says o panneerselvam

 

கச்சத்தீவு பிரச்சனையில் துரோகத்தின் மறுஉருவம் என்றால் அது தி.மு.க. தான். கச்சத்தீவு ஒப்பந்தத்தை முன்கூட்டியே தெரிந்திருந்தும் அதனை எதிர்த்து குரல் கொடுக்காமல் மவுனம் காத்ததுதான் துரோகம் என்று முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் முதல்வர் ஸ்டாலினின் பேச்சுக்கு எதிர்வினையாற்றியிருக்கிறார். 

 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இராமேஸ்வரத்தில் நடைபெற்ற மீனவர் நல மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய தி.மு.க. தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், கச்சத்தீவு தாரை வார்ப்பு தொடர்பாக ஒப்பந்தம்தான் போடப்பட்டது என்றும், சட்டம் இயற்றப்படவில்லை என்றும், கச்சத்தீவு இந்தியாவின் ஒரு பகுதி என்பதற்கான ஆதாரங்களை தந்தவர் முன்னாள் முதலமைச்சர்  கலைஞர் தான் என்றும், கச்சத்தீவு ஒப்பந்தத்தை கண்டித்து அப்போது நாடாளுமன்றத்தில் தி.மு.க. வெளிநடப்பு செய்தது என்றும், கச்சத்தீவு ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அனுப்பிய தீர்மானத்தை எதிர்த்து வெளிநடப்பு செய்த ஒரே கட்சி அ.தி.மு.க. என்றும், அன்றிலிருந்து இன்று வரை அ.தி.மு.க. தான் துரோகம் செய்து கொண்டிருக்கிறது என்றும் கூறியிருக்கிறார். இந்தப் பேச்சினைப் பார்க்கும்போது, அவர் அடிக்கடி சொல்லும் “வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ" என்ற பழமொழிதான் நினைவிற்கு வருகிறது.

 

இராமேஸ்வரத்திற்கு வட கிழக்கே 10 மைல் தொலைவில் உள்ள கச்சத்தீவு இந்தியாவின் ஒரு பகுதி என்பதையும், 285.20 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்தத் தீவின் சர்வே எண் 1250 என்பதையும், இதனை பரம்பரை பரம்பரையாக தமிழ்நாட்டு மீனவர்கள் பயன்படுத்தி வந்தனர் என்பதையும், இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த சீனிகுப்பன் படையாச்சி என்பவர் இந்த தேவாலயத்தை கட்டினார் என்பதையும், ஆண்டுதோறும் இங்கு நடக்கும் விழாவிற்கு தமிழக மீனவர்கள் செல்வது வழக்கம் என்பதையும், இந்தத் தீவு ராமேஸ்வரம் கர்ணத்தின் அதிகார எல்லைக்கு உட்பட்டது என்பதையும் வரலாற்றுப் பதிவேடுகள் நமக்குத் தெரிவிக்கின்றன இவையெல்லாம், கச்சத் தீவு மீது இந்தியாவிற்கு உள்ள பறிக்க முடியாத உரிமைகளுக்கு சான்றாக விளங்குகின்றன.

 

இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம் ஆகிய கடலோர மாவட்டங்களில் வாழும் தமிழக மீனவர்கள், தொன்றுதொட்டு கச்சத்தீவின் அருகில் மீன்பிடித்து அன்றாட வாழ்க்கையை நடத்தி வந்தனர். 1974 ஆம் ஆண்டு, அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசுக்கும், இலங்கை அரசுக்கும் இடையே ஓர் உடன்பாடு ஏற்பட்டது. இந்த உடன்பாட்டின்படி, இரு நாடுகளும் பரம்பரை பரம்பரையாக தங்கள் நாட்டிற்குச் சொந்தமான கடல் எல்லைகளில் எந்தெந்த உரிமைகளை அனுபவித்து வந்தனவோ, அந்தந்த உரிமைகளை தொடர்ந்து அனுபவிக்கலாம் என்று பொதுவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அப்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தவர் கலைஞர். கச்சத்தீவு தாரைவார்ப்பினை தடுத்து நிறுத்த முதலமைச்சர் என்ற முறையில் கலைஞர் எந்தவிதமான நடவடிக்கையையும் எடுக்கவில்லை. 1960 ஆம் ஆண்டுக்கு முன்பு, 1950-களில், மேற்கு வங்காளத்தில் உள்ள பெருபாரி என்ற பகுதியை அப்போதைய கிழக்கு பாகிஸ்தானுக்கு கொடுக்க மத்திய அரசு முயன்ற போது, அதை மேற்கு வங்க மாநில அரசு எதிர்த்ததோடு மட்டுமல்லாமல், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. அப்போதைய மேற்கு வங்க மாநில முதலமைச்சர் பி.சி. ராய், இந்த நடவடிக்கையை மேற்கொண்டார். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், “இந்திய நாட்டுக்குச் சொந்தமான ஒரு பகுதியை அந்நிய நாட்டிற்குக் கொடுப்பது தொடர்பான உடன்பாட்டை நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் ஒப்புதலோடு இந்திய அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தின் மூலம் மட்டுமே நடைமுறைப்படுத்த முடியும்” என 1960 ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. மேற்கு வங்க அரசின் இந்த சமயோசித நடவடிக்கை காரணமாக, பெருபாரி பகுதி இன்றும் இந்திய நாட்டின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது. உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பினை மேற்கோள் காட்டி 1974 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மனு செய்திருந்தால், கச்சத் தீவு இன்றும் கூட, இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்திருக்கும். ஆனால் அன்றைய தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த கலைஞர் இதைச் செய்யத் தவறி விட்டார். இந்த வரலாற்றை படித்துத் தெரிந்து கொள்ளாமல், தி.மு.க. அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்ததாகவும், அதையும்மீறி கச்சத்தீவு தொடர்பான ஒப்பந்தம் போடப்பட்டது என்று கூறுவதும் முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் உள்ளது. இதற்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

1974-ல் கச்சத்தீவு ஒப்பந்தம் தொடர்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பல கேள்விக்கணைகளை தொடுத்தபோது, ஒப்பந்தம் போடுவதற்கு முன்பு தனக்கு ஏதும் தெரியாது என்று கூறியவர் கலைஞர். ஆனால், ஒப்பந்தம் போடுவதற்கு முன்பு கலைஞருக்கு எல்லாம் தெரியும் என்பதை ஆதாரத்துடன் சுட்டிக்காட்டியவர் ஜெயலலிதா. குறைந்தபட்சம் இரண்டு முறை மிக விரிவான அளவில் மத்திய அரசு அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞருடன் விவாதித்ததாக அப்போதைய வெளியுறவுத் துறை அமைச்சர்  ஸ்வரண் சிங் மாநிலங்கள் அவையில் பேசியிருப்பதை ஜெயலலிதா சுட்டிக்காட்டினார்கள். எனவே, அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞருக்கு தெரியாது என்ற வாதம் உண்மைக்குப் புறம்பானது. கச்சத்தீவு தாரை வார்க்கப்படப் போகிறது என்பதை முன்கூட்டியே தெரிந்திருந்தும், அது குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கவோ அல்லது தமிழ்நாட்டில் மிகப் பெரிய அளவில் போராட்டத்தை நடத்தி தாரைவார்ப்பினை தடுக்கவோ தி.மு.க. அப்போது நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக ஒப்பந்தம் முடிந்து இரண்டு மாதங்கள் கழித்து, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் பெயரளவிற்கு, சம்பிரதாயத்திற்கு, மென்மையான முறையில் 21-08-1974 அன்று ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 

இந்தத் தீர்மானத்தின்மீது பேசிய திரு. ஆலடி அருணா அவர்கள், மத்திய அரசு ஆலோசனை நடத்தியதா என்று அப்போதைய முதலமைச்சர் கலைஞர் அவர்களைக் கேட்டபோது, “வெளியுறவுத் துறைச் செயலாளர் கேவல் சிங்கை நான் டெல்லியில் சந்தித்தபோது இதைப் பற்றி அவர் என்னிடம் பேசினார். இதை ஆலோசனை என்று வைத்துக் கொண்டாலும் கூட நான் அவரிடம் சொன்னது; “தமிழ் மக்கள் இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்; தமிழக அரசு இதை ஏற்றுக்கொள்ளாது. கச்சத்தீவு இந்தியாவுக்கே, தமிழகத்திற்கு சொந்தமாக இருக்க வேண்டும் என்று எடுத்துச் சொல்லி மறு நாள் பிரதமரை சந்தித்தபோது, இதைப் பற்றி குறிப்பிட்டு சொன்னேன்" என்று கலைஞர் கூறியிருக்கிறார். இவையெல்லாம் சட்டமன்ற நடவடிக்கைக் குறிப்புகளில் இடம் பெற்றுள்ளன. இவற்றையெல்லாம் படித்து கச்சத்தீவு வரலாற்றினை தெரிந்து கொள்ளாமல், மனம் போன போக்கில் பேசுவது முதலமைச்சருக்கு அழகல்ல.


அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கச்சத்தீவு ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அனுப்பிய தீர்மானத்தை எதிர்த்து வெளிநடப்பு செய்த ஒரே கட்சி அதிமுக தான் என்று தி.மு.க. தலைவர் கூறியிருக்கிறார். தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைத் தான் தி.மு.க. தலைவர் குறிப்பிடுகிறார் என்று கருதுகிறேன். கச்சத்தீவு தாரைவார்ப்பு ஒப்பந்தம் குறித்து முன்கூட்டியே தெரிந்தும் அதை எதிர்த்து மிகப் பெரிய அளவில் போராடாமல், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்காமல் மாபெரும் துரோகத்தை செய்த மாநில அரசினைக் கண்டிக்காமல், அரசியல் ஆதாயத்திற்காக மத்திய அரசை மட்டும் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால்தான் அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இந்த உண்மையை மறைத்து பொத்தாம் பொதுவாக அ.தி.மு.க. வெளிநடப்பு செய்தது என்பது உண்மைக்குப் புறம்பான தகவல்.

 

கச்சத்தீவு பிரச்சனையில் துரோகத்தின் மறுஉருவம் என்றால் அது தி.மு.க.தான். கச்சத்தீவு ஒப்பந்தத்தை முன்கூட்டியே தெரிந்திருந்தும் அதனை எதிர்த்து குரல் கொடுக்காமல் மவுனம் காத்ததுதான் துரோகம். 2008 ஆம் ஆண்டு கச்சத்தீவு தொடர்பான ஒப்பந்தங்கள் செல்லத்தக்கவை அல்ல என்று ஜெயலலிதா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தபோது, அதனை ஆமோதித்து பதில் மனுவை தாக்கல் செய்யாமல், “... uniform stand has to be taken both by the Central and State Governments" 660 கருத்து தி.மு.க. அரசால் அப்போது தெரிவிக்கப்பட்டதுதான் துரோகம். இந்தத் துரோகங்களை செய்தது தி.மு.க. கச்சத்தீவில் மட்டுமல்ல, காவிரி நீர்ப் பிரச்சனை, முல்லைப் பெரியாறு பிரச்சனை, மாநில சுயாட்சி, மத்திய-மாநில வரிப் பங்கீடு என எல்லாவாற்றிலும் பல துரோகங்களை செய்த கட்சி தி.மு.க. இப்பொழுது வாய்கிழிய பேசும் தி.மு.க. தலைவர், 17 ஆண்டுகள் தொடர்ந்து மத்திய அமைச்சரவையிலே வளம் கொழிக்கும் இலாக்காக்களை வைத்துக் கொண்டிருந்தபோது கச்சத்தீவு பற்றி ஏன் வாய் திறக்கவில்லை? அடுத்த ஆண்டு வரவிருக்கும் மக்களவைத் தேர்தலை மனதில் வைத்து மீண்டும் புளுகு மூட்டைகளை அவிழ்த்துவிட ஆரம்பித்து இருக்கிறார் தி.மு.க. தலைவர். இது பலிக்காது. மக்கள் தி.மு.க.வை பற்றி நன்கு புரிந்து கொண்டு விட்டார்கள். வருகின்ற மக்களவைத் தேர்தலில் மிகப் பெரிய வீழ்ச்சியை தி.மு.க. சந்திக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்