சென்னை - திருச்சி ரயில்வே மார்க்கத்தில் விழுப்புரம் ஜங்ஷனில் கடந்த ஏழாம் தேதி மாலை 5 மணியளவில் ரயில்வே இன்ஸ்பெக்டர் செந்தில்நாதன் ஏட்டு ரவி போலீஸ்காரர் ரங்கபாஷ்யம் ஆகிய மூவரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
![railway platform-money-Handing over to owner](http://image.nakkheeran.in/cdn/farfuture/2j1XaidOzeoAXbIRuG9FtCWTUVikX2xm9E3aUA9O8VE/1578729972/sites/default/files/inline-images/111_78.jpg)
அப்போது ஐந்தாவது பிளாட்பாரம் அருகே இன்ஸ்பெக்டர் செந்தில் நாதன் தற்செயலாக நடந்து சென்றபோது அவர் எதிரில் தண்டவாளத்தை ஒட்டி ஒரு சின்ன பேக் கிடந்துள்ளது. அதை தற்செயலாக எடுத்து உள்ளே பார்த்தபோது அதில் இரண்டு லட்ச ரூபாய் பணம், ஆதார் கார்டு, பான் கார்டு, பள்ளி கல்லூரி சான்றிதழ்கள் என அனைத்தும் ஒரிஜினலாக உள்ளே வைக்கப் பட்டு இருந்தது.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் செந்தில் நாதன், ஏட்டு ரவி மற்றும் போலீஸ்காரர் ரங்கபாஷ்யம் ஆகியோரை அழைத்துக்கொண்டு நேராக ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டரிடம்
சென்று விவரத்தைக் கூறி, அதில் உள்ள பொருட்களை எல்லாம் அவரை சாட்சியாக வைத்து பரிசோதனை செய்தனர். பின்னர் திருச்சி ரயில்வே கோட்ட எஸ்பி செந்தில் குமார் அவர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பிறகு அந்தப் பையில் கண்டெடுத்த ஆதார் கார்டில் உள்ள செல்போன் நம்பர் மூலம் தொடர்பு கொண்டு விவரம் கேட்டனர்.
அப்போது பேசிய இளைஞர் தேனி மாவட்டம் உத்தமபாளையம் அடுத்த கூடலூரை சேர்ந்த அண்ணாதுரை மகன் 29 வயது பிரபாகரன் என்பவர் உறுதிசெய்யப்பட்டது. அவர் கூறும்போது விழுப்புரம் ஜங்ஷனில் சென்னையில் இருந்துதிருச்சி வழியாக காரைக்குடி செல்லும் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயிலை பிடிப்பதற்காக வேகமாக சென்ற போது பையை தவற விட்டதை ஒப்புக் கொண்டதோடு பையில் உள்ள மத்த பணம் அது எத்தனை நோட்டுகள் இருந்தது மற்றும் அதில் பள்ளி கல்லூரி சான்றிதழ்கள், ஆதார் கார்டு, பான் கார்டு என தவர விட்ட அனைத்து விவரங்களையும் சரியாக கூறினார்.
இதையடுத்து அவர் திருச்சி ரயில்வே எஸ்பி செந்தில் குமார் அலுவலகத்திற்கு வர வழைக்ப்பட்டார். அவரது முன்னிலையில் பிரபாகரன் மற்றும் அவரது தந்தை அண்ணாதுரை ஆகிய இருவரும் வருகை தந்தனர். அவர்களிடம் பணம் மற்றும் உரிய சான்றிதழ்கள் அனைத்தும் ஒப்படைத்தார் எஸ்பி செந்தில்குமார். அப்போது பிரபாகரன் தந்தை அண்ணாதுரை கூறும்போது, "தான் மிகவும் வறுமையான குடும்பத்தில் பிறந்தவன். எனது மகனை படிக்க வைப்பதற்காக சுடுகாட்டில் பணி செய்து வருகிறேன். அதன்மூலம் எனது மகன் படிப்புக்கும் வேலைக்கும் வேண்டுமென சிறுக சிறுக சேர்த்து வைத்த பணம் என் உழைப்பு வீண்போகவில்லை.
இறைவன் அருளால் காவல்துறை அதிகாரிகள் அதை கண்டெடுத்து, எங்களிடம் ஒப்படைத்தது மிகப்பெரிய சந்தோஷத்தையும் இன்ப அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது என்று கண்ணீர் மல்க நன்றி கூறி விடை பெற்றனர். பொதுவாக காவல்துறையினரில் இதுபோன்று நேர்மையான முறையில் செயல்படுபவர்களை காண்பது அரிதிலும் அரிது பிரபாகரனின் பனத்தையும் சான்றிதழ்களையும் நேர்மையாகச் செயல்பட்டு ரயில்வே எஸ்பி செந்தில்குமார் மூலம் உரியவர்களிடம் ஒப்படைத்த ரயில்வே இன்ஸ்பெக்டர் செந்தில்நாதன் மற்றும் சக போலீஸ்காரர்கள் ரவி ரங்கபாஷ்யம் ஆகியோரை பொதுமக்கள் மிகவும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.