Skip to main content

கரோனாவில் இறந்தவர் உடல் ஒப்படைக்கப்பட்ட குடும்பத்தில் 10 பேருக்கு கரோனா.. அமைச்சர் தொகுதி அவலம்!!

Published on 18/07/2020 | Edited on 18/07/2020

 

pudukottai corona rate

 

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கி உள்ளது. ஆயிரம் பேரை தொட உள்ளதாக அதிகாரபூர்வமான கணக்கு சொல்கிறது. ஆனால் பல நேரங்களில் முதல் நாள் கணக்கில் இருந்து அடுத்த நாள் குறைத்து காட்டப்பட்டதெல்லாம் கணக்கிட்டால் ஆயிரத்தை தாண்டும்.

 

கடந்த 15 நாட்களுக்கு முன்பு வரை அன்னவாசல், விராலிமலை, பொன்னமராவதி ஒன்றியங்களில் இருந்தே கரோனா தொற்று அதிகம் காணப்பட்டது. அதேபோல கடந்த வாரம் அன்னவாசல் பகுதியை சேர்ந்த ஒருவர் காய்ச்சல் என்று திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்ற நிலையில் சில நாட்களில் இறந்துவிட்டார். ஒருநாள் முழுவதும் உடலை உறவினர்களிடம் கொடுக்கவில்லை, பிறகு உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளனர். அப்போது கரோனா இருக்குமானால் திருச்சியிலேயே அடக்கம் செய்ய உறவினர்கள் ஒப்புதல் கொடுத்துள்ளனர். ஆனால் மருத்துவமனை நிர்வாகம் பரிசோதனை முடிவு நெகட்டிவ் என்று சொல்லி உடலை உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.

 

கரோனா இல்லை என்று சொன்னதால் உடலை வாங்கி வந்தனர். உறவினர்கள் வந்து சடங்குகள் செய்து உறவினர்களே முறைப்படி உடல் அடக்கம் செய்துள்ளனர். உடல் அடக்கம் செய்யப்பட்ட அடுத்த நாள் இறந்தவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை தகவல் கொடுத்ததால் இறுதி சடங்கில் கலந்து கொண்ட அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.

 

இறுதி சடங்கில் கலந்து கொண்டவர்களில் முதல்கட்டமாக 20 பேருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனை முடிவு இன்று காலை வெளியானது. அதில் இறந்தவரின் குடும்பத்தில் உள்ள குழந்தைகள் உள்பட அதே குடும்பத்தில் உள்ள 10 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அவர்களை புதுக்கோட்டை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். இதனால் அந்த சடங்கில் கலந்து கொண்ட அத்தனை பேரும் அச்சத்தில் உள்ளனர்.

 

இறந்தவர் உடலை ஒரு நாள் முழுவதும் வைத்திருந்த மருத்துவமனை நிர்வாகம் அவருக்கு எடுக்கப்பட்ட கரோனா பரிசோதனை முடிவு தெரியும் வரை உடலை உறவினர்களிடம் ஒப்படைக்காமல் இருந்திருந்தால் இத்தனை பேர் பாதிக்கப்பட்டிருக்கமாட்டார்கள். உறவினர்கள் கலந்து கொண்டிருக்கவும் மாட்டார்கள். இப்போது சிறு குழந்தைகள் வரை பாதிக்கப்பட்டு கலந்து கொண்டவர்களும், கிராமத்தினரும் இத்தனை அச்சத்திற்கு போய் இருக்க மாட்டார்கள். மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தொகுதியில் என்பதைவிட அவர் ஊருக்கு அடுத்த ஊரில் இப்படி ஒரு அவல நிலை நடந்திருப்பதை பார்த்து மக்கள் வேதனைப்படுகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்