Skip to main content

அமைச்சர் விஜயபாஸ்கரின் தனி உதவியாளர் கார் விபத்தில் பலி!

Published on 12/01/2020 | Edited on 12/01/2020

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகில் உள்ள பரம்பூர் கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன்- ஊராட்சிமனறத் தலைவர் இந்திரா ஆகியோரின் மகன் பவு (எ) வெங்கடேசன் (31). இவர் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சட்டமன்ற உறுப்பினராகி அமைச்சரானது முதல் தனி உதவியாளராக இருந்து வந்தார். 
 

புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் அமைச்சரை பார்க்க வரும் எவரும் முதலில் பவு- வை பார்த்த பிறகே அமைச்சரை பார்க்க முடியும். அமைச்சர் செல்லும் இடங்களில் அவருடன் செல்வார். அமைச்சருக்கு மிகவும் நம்பிக்கையானவராக இருந்ததால், இவர் அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட தலைவராகவும் நியமிக்கப்பட்டிருந்தார்.

pudukkottai district tamilnadu health minister vijaya baskar pa car incident


இந்நிலையில் புதுக்கோட்டையில் நேற்று (11.01.2020) மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் மற்றும் துணைத் தலைவர், ஒன்றிய ஊராட்சி குழுத்தலைவர் உள்ளிட்ட பதவிகளில் வெற்றி பெற்ற அதிமுகவினருக்கு வாழ்த்துக்கூறி இரவு சென்னைக்கு சென்ற அமைச்சர் விஜயபாஸ்கரை திருச்சி விமான நிலையத்தில் விட்டு விட்டு பொலிரோ காரில் அவரது சொந்த ஊரான பரம்பூருக்கு சென்று கொண்டிருந்த பவு(எ) வெங்கடேஷசன் கிளிக்குடி வீரபெருமாள்பட்டி அருகே சாலையில் சென்று கொண்டிருந்த கார் எதிர்பாராத விதமாக புளியமரத்தில் மோதி விபத்துக்குள்ளானது, 
 

இந்த விபத்தில் அமைச்சரின் தனி உதவியாளர் பவு(எ) வெங்கடேசன் மற்றும் பொலிரோ காரை ஓட்டிச்சென்ற இடையபட்டியைச் சேர்ந்த செல்வம்(38) உள்ளிட்ட இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், இதனையடுத்து அருகே இருந்தவர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்த வெங்கடேஷ் மற்றும் செல்வம் உள்ளிட்ட இருவரின் உடலை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பவு (எ)வெங்கடேசனின் உடல் இலுப்பூர் அரசு மருத்துவமனையிலும் ஓட்டுநர் செல்வம் உடல் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது, இந்த விபத்து குறித்து அன்னவாசல் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
 

சாலை விபத்தில் அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் உள்ளிட்ட இருவர் உயிரிழந்த சம்பவத்தால் அமைச்சர் மட்டுமின்றி அதிமுகவினரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். சென்னை சென்றுள்ள அமைச்சர் விஜயபாஸ்கர் உடனடியாக புதுக்கோட்டை திரும்ப உள்ளதாக தகவல் கூறுகின்றன. 

 

 

சார்ந்த செய்திகள்