Skip to main content

சர்க்கரை கலந்து வெல்லம் தயாரிக்க கரும்பு விவசாயிகள் எதிர்ப்பு!!! சேலத்தில் இருதரப்புக்கும் காரசார வாக்குவாதம்!

Published on 17/12/2018 | Edited on 17/12/2018
pongal


 

சேலம் மாவட்டத்தில் ஓமலூர், காடையாம்பட்டி, தின்னப்பட்டி, தீவட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான வெல்லம் உற்பத்தியாளர்கள் உள்ளனர். பொங்கல் பண்டிகையையொட்டி உருண்டை வெல்லம் உற்பத்தி மும்முரமாக நடந்து வருகிறது. இந்தப் பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் வெல்லத்தை, உற்பத்தியாளர்கள் சேலம் செவ்வாய்பேட்டை மூலப்பிள்ளையார் கோயில் அருகே வெல்ல மண்டியில் நடைபெறும் ஏலத்திற்குக் கொண்டு வருவது வழக்கம். 
 

இந்நிலையில் இன்று (டிசம்பர் 17) காலை வெல்லம் உற்பத்தியாளர்கள் மற்றும் கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மகாசபைக் கூட்டம் நடந்தது. அப்போது பேசிய கரும்பு விவசாயிகள் சிலர், கடந்த சில நாள்களுக்கு முன்பு உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில் சர்க்கரை கலந்து தயாரிக்கப்பட்ட பல டன் கலப்பட வெல்லத்தை பறிமுதல் செய்தனர். வெல்லம் உற்பத்தியாளர்களின் இதுபோன்ற செயலால் கரும்பு விவசாயிகளுக்கு போதிய விலை கிடைப்பதில்லை,'' என்றனர்.
 

பலர் முன்னிலையில் கரும்பு விவசாயிகள் பொத்தாம் பொதுவாக இவ்வாறு அதிருப்தியை வெளிப்படுத்தியதால், வெல்லம் உற்பத்தியாளர்கள் அவர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒருகட்டத்தில் இருதரப்புக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. நிலைமை மோசமடைவது குறித்து சிலர் அளித்த தகவலின்பேரில் அன்னதானப்பட்டி போலீசார் நிகழ்விடத்தில் குவிக்கப்பட்டனர். 
 

இதுகுறித்து கரும்பு விவசாயிகள் கூறுகையில், ''சேலம் மாவட்டம் முழுவதும் 300க்கும் மேற்பட்ட வெல்லம் உற்பத்தி ஆலைகள் இயங்கி வருகின்றன. இந்த ஆலைகளில் 100 டன்னுக்கு மேல் வெல்லம் உற்பத்தி செய்யப்படுகின்றன. 
 

கடந்த மூன்று ஆண்டுகளாக மட்ட ரகமான சர்க்கரையை கலந்து வெல்லம் உற்பத்தி செய்து வருகின்றனர். இதனால் 2500 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு டன் கரும்பு, இப்போது 1500 ரூபாய்க்குதான் விற்பனை ஆகிறது. இதனால் டன்னுக்கு ஆயிரம் ரூபாய் வரை இழப்பு ஏற்படுகிறது. கரும்பு விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். ஆகவே, சர்க்கரை கலந்து வெல்லம் உற்பத்தி செய்வதை முற்றிலும் நிறுத்த வேண்டும்,'' என்றனர்.
 

வெல்லம் உற்பத்தியாளர்கள் சங்கத்தலைவர் ரமேஷ்குமார் கூறுகையில், ''சர்க்கரை கலக்காமல் வெல்லம் உற்பத்தி செய்வது தொடர்பாக உற்பத்தியாளர்களை அழைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். இதனை கொஞ்சம் கொஞ்சமாக முறைப்படுத்தி, வரும் காலங்களில் சர்க்கரை கலக்காமல் வெல்லம் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
 

இது ஒருபுறம் இருக்க, வெல்லம் உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகி ஒருவர் தனது பேஸ்புக் பக்கம் மற்றும் வாட்ஸ்அப் தளங்களில், 'எதற்கு கரும்பு விவசாயம் செய்கிறீர்கள்? சாகுங்கள்,' என பதிவிட்டு இருந்தார். இதற்கு கரும்பு விவசாயிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பூச்சிக்கொல்லி மருந்தா? பயிர்க்கொல்லி மருந்தா? - போராடும் விவசாயிகள்! நடவடிக்கை எடுக்கத் தயங்கும் அதிகாரிகள்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Farmers struggle at Pudukkottai District Collectorate

திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் சேர்பட்டி அருகே மறவனூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி செந்தில்குமார் 10 ஏக்கரில் நெல் பயிர் நடவு செய்துள்ளார். கதிர் வரும் நிலையில் இலைசுருட்டுப்புழு காணப்பட்டதால் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள ஒரு தனியார் பூச்சிக்கொல்லி மருந்துக் கடையில் பூச்சிக்கொல்லி மருந்து வாங்கிச் சென்று 8.5 ஏக்கருக்கு தெளித்துள்ளார்.

பூச்சிக்கொல்லி மருந்து தெளித்து சில நாட்களில் பயிர்கள் கருகத் தொடங்கி ஒரு வாரத்தில் முழுமையாக கருகியது. சம்பந்தப்பட்ட மருந்துக் கடையில் கேட்டதற்கு சரியான பதில் இல்லாததால் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டார் விவசாயி செந்தில்குமார். இதனையடுத்து வயலுக்கே வந்து ஆய்வு செய்த வேளாண்துறை அதிகாரிகள் பூச்சிக்கொல்லி மருந்தால் தான் பயிர்கள் கருகிவிட்டதாக சான்றளித்தனர்.

இதனையடுத்து விராலிமலை பூச்சிக்கொல்லி மருந்துக்கடை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், வியாழக்கிழமை தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் துணைச் செயலாளர் சேகர் முன்னிலையில் ஏராளமான விவசாயிகள் கருகிய பயிர்களுடன் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி வந்தனர்.

கருகிய பயிர்களுடன் வந்த விவசாயிகளை ஆட்சியர் அலுவலகத்திற்குள் அனுமதிக்காததால் நுழைவாயிலிலேயே கருகிய பயிர்களை கொட்டியும் கையில் வைத்துக் கொண்டும் ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர். அங்கு வந்த போலீசாரும் வருவாய்த் துறை அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாகக் கூறிய பிறகு ஆட்சியர் அலுவலக நுழைவாயில் போராட்டத்தை விவசாயிகள் முடித்துக் கொண்டனர்.

ஆனால் வேளாண்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் பிச்சத்தான்பட்டியில் திருச்சி மாவட்ட விவசாயிகள் இருவர் செல்போன் கோபுரத்தில் ஏறிவிட்டனர். அதேபோல மற்றொரு குழு விவசாயிகள் விராலிமலை வேளாண் இணை இயக்குநர் அலுவலகத்திற்குச் சென்ற விவசாயிகள் அலுவலகத்திற்குள் நுழைந்து நடவடிக்கை எடுக்கும் வரை போகமாட்டோம்  என்று அங்கேயே படுத்துவிட்டனர்.

அதன் பிறகே சம்பந்தப்பட்ட விராலிமலை பூச்சிக்கொல்லி மருந்துக் கடையை அதிகாரிகள் மூடினர். பூச்சிக்கொல்லி மருந்து கேட்டால் பயிர்க்கொல்லி மருந்து கொடுத்து 8.5 ஏக்கர் நெல் பயிர்களைக் கொன்ற பூச்சி மருந்துக்கடை உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். கடையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு கீரமங்கலத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு காலாவதியான பூச்சிக்கொல்லி மருந்துகளை புதிய லேபிள் ஒட்டி புதிய மருந்தாக விற்பனைக்கு வைத்திருந்த சுமார் 1500 மருந்துப் பாட்டில்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் இப்போது நடவடிக்கை எடுக்க தயக்கம் ஏன் என்ற கேள்வி எழுப்புகின்றனர்.

Next Story

“அனைவரும் ஒன்றுபட வேண்டும்” - விவசாயிகளுக்கு ஆதரவாக காலா பட நடிகர்

Published on 07/03/2024 | Edited on 07/03/2024
nane patekar about farmers

இந்தி மற்றும் மராத்தியில் பல்வேறு படங்களில் நடித்து பிரபலமானவர் நானா படேகர். கடைசியாக தி வேக்ஸின் வார் படத்தில் நடித்திருந்தார். தமிழில் ரஜினியின் காலா படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இப்போது ஜேர்னி (Journey) என்ற தலைப்பில் ஒரு படம் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

திரைப்படங்களில் நடித்துக் கொண்டே மற்றொரு மராத்தி நடிகரான மகரந்த அனஸ்புரேவுடன் இணைந்து ‘நாம்’ என்ற அறக்கட்டளையை நடத்தி வருகிறார். இதன் மூலம் மகாராஷ்டிராவில் உள்ள வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார். இந்த நிலையில், நாசிக்கில் நடைபெற்ற ஷேத்காரி சம்மேளன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசுகையில், “விவசாயிகள் நல்ல நேரத்துக்காகக் காத்திருக்காமல் விடாமுயற்சியின் மூலம் நல்ல காலங்களைக் கொண்டு வர வேண்டும். 

எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வரும் என்பதை நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும். தங்கம் விலை உயரும்போது, அரிசி விலை ஏன் உயரவில்லை? விவசாயிகள் முழு தேசத்திற்கும் உணவு வழங்குகிறார்கள். ஆனால் அவர்களின் குறைகளை தீர்க்க அரசுக்கு நேரமில்லை. இதுபோன்ற அரசிடம் விவசாயிகள் எதையும் கோர வேண்டாம். எந்த மாதிரியான இலட்சியத்தை இளம் தலைமுறைக்கு முன் வைக்கிறீர்கள்? நீங்கள் என்ன செய்கிறீர்கள்? நான் வெளிப்படையாக பேசும் நபர் என்பதால் என்னால் அரசியலில் சேர முடியாது. தற்போதைய நிலையை மாற்ற நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும்” என்றார்.