Skip to main content

அரசுப் பணியை உதறிவிட்டு முழுநேர சமூக சேவை - பிரம்மிக்க வைக்கும் பிரிதிவிராஜ்

Published on 01/05/2023 | Edited on 01/05/2023

 

கடந்த வாரம், தூத்துக்குடி மாவட்டம் - ஸ்ரீவைகுண்டம் வட்டம் - முறப்பநாடு கோவில்பத்து கிராம நிர்வாக அதிகாரி லூர்து பிரான்சிஸ் கொலை செய்யப்பட்டதால், கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்கக்கோரி தமிழகம் முழுவதும் கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்.

 

இந்நிலையில் அருப்புக்கோட்டை வட்டம் – கள்ளக்காரி கிராமத்தில் வி.ஏ.ஓ.வாகப் பணியாற்றி வந்த பிரிதிவிராஜ், தன்னுடைய 37வது வயதில் பணியை ராஜினாமா செய்துவிட்டு அதற்கான காரணத்தைத் தெரிவித்துள்ளார்.  

 

‘இந்த காலகட்டத்தில் ஒருவர் நேர்மையானவராக அரசுப் பணியில் இருப்பது எவ்வளவு கடினம் என்பது அனைவருக்கும் தெரியும். சட்டவிரோத செயல்களுக்குத் துணை போகமாட்டேன் என்றும் மக்களுக்காக உழைப்பேன் என்றும் அரசுப் பணியில் அடியெடுத்து வைக்கும் ஒவ்வொருவரும் ஒரு காலகட்டத்தில் புற அழுத்தம் காரணமாக தங்கள் கொள்கைகளை தாங்களே கரைத்துக்கொண்டு பணமே குறி என்று மாறிவிடுகிறார்கள். அரசியல் அழுத்தம், அதிகாரிகளின் அழுத்தம்,  அதைவிட இச்சமூகத்தில் கொலை - கொள்ளை செய்பவர்களின் அழுத்தத்திற்குக்கூட அடிபணிந்து,  தடம் மாறிப்போகும் அரசு ஊழியர்களுக்கு இடையே,  எதுவாயினும் உயிர் போயினும் நேர்மையைக் கைவிடேன் என்ற நெஞ்சுரத்தோடு வாழும் நேர்மையாளர்கள் என்ற சிறுபான்மைக் கூட்டத்தில் நானும் ஒருவன்.

 

எத்தனையோ அச்சுறுத்தல்கள்,  எத்தனையோ மிரட்டல்கள்,  எத்தனையோ அழுத்தங்கள் வந்தபோதிலும்,  மக்களின் வரிப்பணத்திலிருந்து சம்பளம் பெறும் நான், மக்களுக்காக உழைக்க வேண்டிய கடமையுணர்வுகொண்ட ஒரு  அரசு ஊழியன் என்ற கர்வத்திலேயே, அத்தனை அழுத்தங்களையும் புறந்தள்ளிவிட்டுப் பயணித்தேன். பணமும்,  நிலமும்,  பதவியுமே வாழ்வின் அதிமுக்கியத் தேவை எனக்  கருதுபவர்கள், எந்தத் தவறையும் செய்யும் துணிவுக்குச் சென்றுவிடுகிறார்கள். அத்தகைய தவறானவர்களால்,  இச்சமூகத்தின் அத்தனை விதிகளுக்கும் கட்டுப்பட்டு வாழும் மக்களுக்கு எந்த நன்மையும் சென்று சேர்வதில்லை. ஒரு கிராம நிர்வாக அலுவலராய்,  விதிகளுக்கு உட்பட்டு, அதிகாரத்திற்கு உட்பட்டு என்ன செய்ய முடியுமோ,  அதைச் செய்தேன்.  ஆனாலும் எந்த ஒரு மாற்றத்தையும் இந்தக் கட்டமைப்பில் என்னால் கொண்டுவர முடியவில்லை  என்ற வருத்தம் என்னைத் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

 

மக்களுக்காக மக்களால் ஏற்படுத்தப்பட்ட அரசாங்கத்தில், மக்களுக்குச் சேர வேண்டிய உதவியை அரசிடமிருந்து மக்களிடம் கொண்டு சேர்ப்பதுவே அரசுப் பணி. ஆனால் கொம்பு முளைத்துவிட்டதாய்த் திரியும் பலருக்கு இது உரைப்பதே இல்லை. உரைக்கும் நாள் வரும். அந்நன்னாளில்,  நானும் ஒரு  நேர்மையான அரசு ஊழியனாய் இருந்தேன் என்று கடைசிப் பெருமூச்சை விட்டபடி உயிர்பிரியக் காத்திருக்கிறேன்.’ என உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.

 

மேலும் பிரிதிவிராஜ் “ஒரு நேர்மையான அரசு அலுவலர் சந்திக்கக்கூடிய அடிப்படை பிரச்சனைகளை நான் சந்திக்காமல் இல்லை.  வேலைக்கு வந்த 2011-2012 காலகட்டத்திலேயே நிறைய சந்தித்தேன். அரசியல் அழுத்தங்களையும் சந்தித்திருக்கிறேன்.  அரசு உயர் அதிகாரிகள் தந்த அழுத்தங்களையும் சந்தித்தித்திருக்கிறேன். இவையனைத்தும் கண்டிக்க வேண்டிய விஷயம்தான். ஒரு நேர்மையான கிராம அதிகாரி அநியாயம் செய்பவர்களுக்கு எதிராகப் போராடினால்,  இதுதான் (கொலை) நடக்கும் என்றால்  இனிவரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் எதுவும் நடக்காதபடி, சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும்.  அரசு ஊழியர்களின் பாதுகாப்பை  அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும்.” என்கிறார்.

 

நம்மிடம் பிரிதிவிராஜ், “நான் ராஜினாமா செய்ததற்கு என்னுடைய தனிப்பட்ட மனநிலை, குடும்பச் சூழ்நிலைதான் காரணம். தற்போது, அரசியல் அழுத்தமோ, அதிகாரிகள் அழுத்தமோ எதுவும் இல்லை. முழுநேர குடும்ப நலன், அறக்கட்டளை சார்ந்த சமூகப் பணிகளை மேற்கொள்வதற்காகவே அரசுப் பணியைத் துறந்திருக்கிறேன்.” என்றார்.

 

அடுத்து என்ன செய்யப்போகிறார் பிரிதிவிராஜ்?

 

வி.ஏ.ஓ.வாக இருந்தபோது, கரோனா காலகட்டத்தில் பிரிதிவிராஜ் ஆற்றிய சேவைக்காக, அன்றைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடமிருந்து விருது பெற்றுள்ளார். சமூக அக்கறையுள்ள பிரிதிவிராஜ், விபத்தில் தன்னுடைய தம்பி ராஜேஷ் இறந்த பிறகு, தம்பி பெயரில் இலவச ஆம்புலன்ஸ் சேவை செய்து வருகிறார். இராஜேஷ் உதவும் கரங்கள் டிரஸ்ட், கலாம் மன நிறைவு இல்லம் நடத்தி வரும் பிரிதிவிராஜ், உணவளித்து மகிழ், இரத்த தானம், கல்விச்சேவை, கட்டணமில்லா ஆம்புலன்ஸ் சேவை, இயலா நிலை உறவுகளின் இறுதிச்சடங்கு சேவை ஆகியவற்றில் இனி முழு நேரமும் ஈடுபடவிருக்கிறார்.

 

‘கருவறை முதல் கல்லறை வரை நான் பார்க்கும் உன்னதப் பணி’ என 2011ல் வி.ஏ.ஓ. பணியில் சேர்ந்தபோது பெருமிதத்துடன் குறிப்பிட்ட பிரிதிவிராஜ்,  ‘தனிமனித ஒழுக்கமே நல்ல துணை. அது கடினமென்றாலும் விரும்பி காத்திட வேண்டும்.’ என்ற கொள்கையில் உறுதியாக இருக்கிறார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விஏஓ தற்கொலை; தலைமறைவான இருவருக்கு போலீசார் வலை

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 VAO case; Police net for two fugitives

திருப்பூரில் விஏஓ ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்கொலை தொடர்பாக அவர் எழுதி வைத்துள்ள கடிதத்தின் அடிப்படையில் போலீசார் இருவரை தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை கணக்கம்பாளையம் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் கருப்பசாமி. சொந்த ஊரான பொள்ளாச்சிக்கு கடந்த 22ஆம் தேதி சென்ற விஏஓ கருப்பசாமி, தென்னை மரத்திற்கு வைக்கும் மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அக்கம்பக்கத்தில் இருந்த உறவினர்கள் உடனடியாக கருப்பசாமியை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், செல்லும் வழியிலேயே விஏஓ கருப்பசாமி உயிரிழந்தார்.

இந்த நிலையில் விஏஓ கருப்பசாமி தனது கைப்பட எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று உறவினர்களிடம் சிக்கியது. அந்த கடிதத்தில் தன்னுடைய தற்கொலைக்கான காரணம் குறித்தும் தன்னுடைய இந்த முடிவுக்கு மணியன் என்பவரும், கிராம நிர்வாக உதவியாளரான சித்ரா என்பவரும் தான் காரணம் என எழுதப்பட்டிருந்தது. கடிதத்தை சான்றாக வைத்த அவருடைய உறவினர்கள் சம்பந்தப்பட்ட இருவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உடுமலை கோட்டாட்சியரிடம் புகார் அளித்தனர். அதேபோல் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பாக  40-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் தற்கொலைக்கு தூண்டியவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏற்கனவே கருப்புசாமி எழுதிவைத்து கையெழுத்திட்ட கடிதங்களையும் தற்கொலைக்கு முன்னதாக கருப்பசாமி எழுதிய கடிதம் ஆகியவற்றை ஒப்பிட்டு பார்த்த போலீசார் அதை உறுதி செய்தனர். முன்னதாக சந்தேக மரணம் என பதிவு செய்யப்பட்ட வழக்கு தற்கொலைக்கு தூண்டுதல் என்ற வழக்கிற்கு கீழ் மாற்றப்பட்டது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கிராம நிர்வாக உதவியாளர் சித்ரா மற்றும் மணியன் ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. உடுமலை வட்டாட்சியர் சுந்தரம், சித்ராவை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். தொடர்ந்து சித்ரா தலைமறைவானதால் அவருடைய வீட்டில் பணியிடை நீக்கத்திற்கான நோட்டீஸ் ஒட்டப்பட்டது. தற்பொழுது விஏஓ தற்கொலை தொடர்பாக கிராம உதவியாளர் சித்ராவையும் மணியன் என்பவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story

லஞ்ச வழக்கில் தொடர்புடைய கிராம நிர்வாக அலுவலர் கைது

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
Village administration officer arrested in bribery case

திருச்சி அருகேயுள்ள முசிறியில் லஞ்ச வழக்கில் கிராம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீசார்  கைது செய்துள்ளனர்.

திருச்சி மாவட்டம், முசிறியை சேர்ந்தவர் கண்ணன். அவரது நிலத்தை பட்டா மாறுதல் செய்வதற்காக முசிறி வட்டாட்சியர் அலுவலகத்தை நாடினார். பட்டா பெயர் மாற்றம் செய்ய துணை வட்டாட்சியர் தங்கவேல், ரூ. 25,000 லஞ்சம் கேட்டுள்ளார். இது தொடர்பான புகாரின் பேரில், 27.12.2023 அன்று அவரிடம் லஞ்சப் பணம் கொடுத்தபோது, திருச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் துணை வட்டாட்சியர் தங்கவேலை கைது செய்தனர்.

இந்த வழக்கில் கிராம நிர்வாக அலுவலர் விஜயசேகருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. ஆனால் அவர் தலைமறைவானதைத் தொடர்ந்து தேடி வந்த நிலையில், விஜயசேகரை வியாழக்கிழமை(21.3.2024) கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.