Skip to main content

விலைவாசி உயர்வு; அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு 

Published on 13/07/2023 | Edited on 13/07/2023

 

Price rise ADMK announcement

 

மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைவாசி உயர்வைக் கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

 

இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற இந்த இரண்டாண்டு காலத்தில், தமிழ் நாட்டில் மக்கள் வாழ்வே கேள்விக்குறியாகி உள்ளது. மக்கள் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தும் தக்காளி, சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், பீன்ஸ், அவரைக்காய், கேரட் உள்ளிட்ட காய்கறிகளின் விலைகளும்; துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, புளி, சீரகம் உள்ளிட்ட மளிகைப் பொருட்களின் விலைகளும் தற்போது கடுமையாக உயர்ந்துள்ளது. மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை நியாயவிலைக்கடைகள் மூலம் வழங்குவதாக வெற்றுத் தம்பட்டம் அடித்துக்கொள்ளும் திமுக அரசு, அதை முறையாகச் செயல்படுத்தவில்லை. விலைவாசி உயர்வு காரணமாக, சாதாரண ஏழை, எளிய, நடுத்தர மக்கள் வாழவே முடியாத சூழ்நிலை தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது

 

அதிமுக ஆட்சிக் காலங்களின்போது, இயற்கை இடர்ப்பாடுகளாலும், இன்னும் சில காரணங்களாலும் அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வு ஏற்படும் நேரங்களில், ஜெயலலிதாவின் அரசு தனிக் கவனம் செலுத்தி, அதற்கு ஏற்ற நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அண்டை மாநிலங்களில் இருந்து காய்கறி உள்ளிட்ட மளிகைப் பொருட்களை கொள்முதல் செய்து நியாயவிலைக்கடைகள் மற்றும் கூட்டுறவு பண்டகசாலைகள் மூலமாக மக்களின் தேவைகள் உடனுக்குடன் பூர்த்தி செய்யப்பட்டதுடன், அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையைக் கட்டுக்குள் வைத்தது ஜெயலலிதாவின் அரசு என்பதை இந்த நேரத்தில், நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

 

அதேபோல், இந்த இரண்டாண்டு திமுக ஆட்சியில், தமிழ்நாட்டு மக்கள் சொல்லொனா துயரத்திற்கு ஆளாகி உள்ளனர். வாழவே வழியற்று நிர்க்கதியாய் நிற்கின்ற மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகிறது. தமிழ்நாட்டு மக்கள் 10 ஆண்டுக் காலமாக மறந்து போயிருந்த மின்வெட்டு திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அறிவிக்கப்படாத மின்வெட்டால் சிறு, குறு தொழில் முனைவோர் செய்வதறியாது கலங்கி நின்ற நேரத்தில், மூன்று மடங்கிற்கும் மேலான மின்கட்டண உயர்வு என்ற பேரிடியை இறக்கியது இந்த திமுக அரசு. மனசாட்சியற்ற இந்த திமுக அரசு, அதிமுக அரசு கொடுத்து வரும் இலவச மின்சாரத்தையும் தடுப்பதற்கான முயற்சிகள், அதைத் தொடர்ந்து சொத்து வரி, வீட்டு வரி 100 சதவீதம், கடை வரி 150 சதவீதம் வரை உயர்வு., இதன் காரணமாக வீட்டு வாடகை உயர்வு, பால் மற்றும் பால் பொருட்களின் விலை உயர்வு, கட்டுமான பொருட்களின் விலை உயர்வு, வெளியூர் செல்லும் பேருந்துகளின் கட்டணம் உயர அனுமதித்தது இந்த திமுக அரசு.

 

இது போதாதென்று திமுக அரசு பத்திரப் பதிவுத் துறையில் மக்கள் தங்கள் சொத்துக்களை சந்ததியினருக்கு பெயர் மாற்றம் செய்தல், குடியிருப்பதற்கு மனை வாங்குதல், சொத்துக்களை அடமானம் வைத்து கடன் பெறுதல் உள்ளிட்ட பதிவுகளுக்கு பல மடங்கு கட்டணங்களை உயர்த்தி, மக்களை மேலும் கடனாளிகளாக ஆக்கப் பார்க்கிறது. திமுக அரசின் ஆட்சிக் காலத்தில், அனைத்துத் துறைகளும் ஊழல் மயப்படுத்தப்பட்டு நாட்டின் ஜனநாயகம் கேலிப் பொருளாக்கப்பட்டு மக்கள் வாழ்வு சீரழிக்கப்படுகிறது. மின்சாரத் துறை, டாஸ்மாக், பத்திரப் பதிவுத் துறை எனத் தொடங்கி, சகல துறைகளிலும் ஊழல் கோலோச்சுகிறது.

 

நாட்டில் அனுமதியின்றி நான்காயிரத்திற்கும் மேற்பட்ட பார்கள் இயங்குகிறது என்று நான் குற்றச்சாட்டு வைத்து அதிமுக போராடிய நிலையில் அங்கொன்றும், இங்கொன்றுமாக பார்களுக்கு சீல் வைத்தது திமுக அரசு என்றால், இரண்டாண்டு காலம் அந்த பார்கள் அனுமதியின்றி இயங்கியது உண்மைதானே. அப்படியெனில், இரண்டாண்டுகள் அந்த முறையற்ற பார்களில் இருந்து பல கோடி ரூபாய் ஊழல் செய்யப்பட்டது தெரிய வருகிறது. இதுபோல, அனைத்துத் துறைகளிலும் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது. ஊழலில் திளைக்கின்ற திமுக அரசின் மக்கள் விரோத, ஜனநாயக விரோதப் போக்கினை வன்மையாகக் கண்டிக்கிறேன். எதற்கெடுத்தாலும் மத்திய அரசு மீது பழிபோட்டு தப்பிக்கப் பார்க்கிறார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். முதலமைச்சரின் இத்தகைய மக்கள் விரோதச் செயலுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

 

இந்நிலையில், மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தத் தவறிய திமுக அரசைக் கண்டித்தும், அனைத்துத் துறைகளிலும் ஊழல் தலைவிரித்து ஆடுவதைக் கண்டித்தும், இவற்றையெல்லாம் கண்டும் காணாமல் இருந்து வரும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை கண்டித்தும் அதிமுக சார்பில் வரும் 20 ஆம் தேதி வியாழக்கிழமை காலை 10 மணியளவில், வருவாய் மாவட்டத் தலைநகரங்களில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும். இந்தக் கண்டன ஆர்ப்பாட்டங்களில், சம்பந்தப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த அதிமுகவினர் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்