Skip to main content

“இரு கரம் கூப்பி நன்றி தெரிவிக்கிறேன்” - பிரேமலதா விஜயகாந்த் உருக்கம்

Published on 29/12/2023 | Edited on 29/12/2023
premalatha vijayakanth thanked tamilnadu government

நடிகரும் தேமுதிக நிறுவனத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான, விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாகச் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலை உயிரிழந்தார். இவரது மறைவு தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து கூட்டம் அதிகமாக வரவே, விஜயகாந்த்தின் உடல் சென்னை தீவுத்திடலுக்கு மாற்றப்பட்டு பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள், ரசிகர்கள், தொண்டர்கள் திரைப் பிரபலங்கள் பலரும் விஜயகாந்த்தின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்கள். காலை முதலே, பலரும் அஞ்சலி செலுத்திய நிலையில், விஜயகாந்த்தின் இறுதி ஊர்வலம் தீவுத் திடலில் இருந்து தொடங்கி பூந்தமல்லி சாலை வழியாக கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் மாலை கொண்டுவரப்பட்டது. 

அங்கு, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், தெலுங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த இறுதிச் சடங்கில் மா. சுப்ரமணியன், தா.மோ. அன்பரசன், கே.என். நேரு, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் டி.ஆர். பாலு எம்.பி. உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதனையடுத்து தமிழக அரசு சார்பில், மறைந்த விஜயகாந்த்திற்கு 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதை செய்யப்பட்டது. அதன்பிறகு, குடும்ப முறைப்படி சடங்குகள் செய்யப்பட்டு உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்த நிலையில், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியதாவது, “நமது விஜயகாந்த் இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட முதல்வருக்கும், அமைச்சர்களுக்கும், மற்ற அரசியல் கட்சித் தலைவர்களுக்கும், திரைப் பிரபலங்களுக்கும், காவல்துறையினருக்கும், ஊடகவியலாளர்களுக்கும், அனைவருக்கும் எனது நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். விஜயகாந்த்தின் இறுதிச் சடங்கின்போது அனைத்து வகையிலும் முழு பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்த காவல்துறைக்கு நன்றி. விஜயகாந்த் அணிந்திருந்த மோதிரத்தை அவரோடு சேர்த்து அடக்கம் செய்திருக்கிறோம். மேலும், விஜயகாந்த்திற்கு சமாதி அமைக்கப்பட்டு, அங்கு புகைப்படம் வைக்கப்பட்டு 24 மணி நேரமும் விளக்கு ஏற்றப்படும். ஒட்டுமொத்த தொண்டர்களும் வழிபடக் கூடிய ஒரு கோவிலாக அமைக்கப்படும்” என்று கூறினார்.

சார்ந்த செய்திகள்