
விழுப்புரம் மாவட்டம், அவலூர்பேட்டையில் துணை அஞ்சலகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த அஞ்சலகத்தில் 2016-19ம் ஆண்டுகளில் செஞ்சி பகுதி அஞ்சலக ஆய்வாளர் ராஜ்குமார் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அந்த அஞ்சல கணக்கு வழக்குகளை சரிபார்த்த போது ஒரு லட்சத்து 97 ஆயிரம் ரூபாய் கையாடல் செய்யப்பட்டுள்ளதை கண்டறிந்தார். இதற்கு காரணம் அஞ்சலக ஊழியர் மணிகண்டன் என்பது தெரியவந்தது. அவர் கையாடல் செய்த அந்தப் பணம் முழுவதையும் மீண்டும் அஞ்சலகத்தில் செலுத்தியுள்ளார். இது சம்பந்தமாக மணிகண்டன் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர் தற்போது விழுப்புரம் தலைமை தபால் நிலையத்தில் போஸ்ட்மேன் ஆக பணிபுரிந்து வருகிறார்.
இருந்தும் அஞ்சலக துறையின் விதிமுறைகளின்படி இருபத்தி ஆறு மாதங்களுக்குப் பிறகு இதுகுறித்து தற்போதைய செஞ்சி அஞ்சலக ஆய்வாளர் கமல்ராஜ் அவலூர்பேட்டை போலீசில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின் பேரில் மணிகண்டன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கையாடல் செய்த பணத்தை திருப்பி செலுத்தி இருந்தாலும் கையாடல் செய்தது குற்றம் என்பதால் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சம்பந்தப்பட்டவர் மீது போலீசில் புகார் அளித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் அவலூர்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.