
அரசு விரைவுப் பேருந்துகளில் பெண்களுக்கென இரண்டு பிரத்தியேகப் படுக்கைகளை ஒதுக்கீடு செய்து, தமிழ்நாடு அரசுப் பேருந்து போக்குவரத்துக் கழகம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக, தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்து கழகத்தின் மேலாண்மை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். அதில், "அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தால் இயக்கப்படும் படுக்கை வசதி கொண்ட பேருந்துகளில் (படுக்கை வசதி கொண்ட குளிர்சாதன பேருந்து, இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட குளிர்சாதனம் / குளிர்சாதனமில்லா பேருந்துகள்) பெண்களுக்கு தனியாக படுக்கை எண்:1LB, மற்றும் 4LB ஒதுக்கீடு செய்து இணைய தளத்தில் முன்பதிவு செய்து கொள்ள வழிவகை (பதிவேற்றம்) செய்யப்பட்டுள்ளது.
எனவே, இனி வரும் காலங்களில் மேற்படி படுக்கையில் முன்பதிவு செய்த பெண் பயணிகளுக்கு அதனை ஒதுக்கீடு செய்து தரவும் மற்றும் பேருந்து புறப்படும் வரை மேற்கூறிய படுக்கையில் பெண் பயணிகள் எவரும் முன்பதிவு செய்யாத பட்சத்தில் அதனை பொது படுக்கையாக கருதி மற்ற பயணிகளுக்கு ஒதுக்கீடு செய்து தர மேற்கூறிய பேருந்துகளில் பணியாற்றும் நடத்துநர்கள் இதன் மூலம் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.