Skip to main content

பொங்கல் திருநாள்; பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

Published on 14/01/2024 | Edited on 14/01/2024
Pongal festival; Security arrangements are strict

தமிழர் திருநாளான பொங்கல் திருநாள் நாளை (15-01-2024) தமிழகம் முழுவதும் கொண்டாடப்படவுள்ளது. அதனைத் தொடர்ந்து மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் கொண்டாடப்பட உள்ளது. அந்த வகையில், பொங்கல் பண்டிகை கால விடுமுறையையொட்டி வெளியூர்களில் பணி செய்வோர் மற்றும் கல்லூரியில் படிப்பவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு பயணப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் பொங்கல் திருநாளை முன்னிட்டு பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்க தமிழ்நாடு காவல்துறை சார்பாக 50 ஆயிரம் காவல்துறையினர் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “பொங்கல் திருநாளை முன்னிட்டு கடை வீதிகள், பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்கள், கோவில் மற்றும் சுற்றுலாத் தலங்களில் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்க தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு காவல்துறை சார்பாக விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாடு முழுவதும் 50 ஆயிரம் காவல்துறையினர் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை மற்றும் பெங்களூரூ நகரங்களில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு பொதுமக்கள் செல்வதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் மற்றும் வாகன விபத்து ஏற்படாமல் தடுக்க நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட மாவட்ட மற்றும் மாநகர காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும், குடிபோதையிலும் வாகனம் ஓட்டுபவர்கள் மற்றும் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது.

காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால், பொதுமக்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகளை தெரிவிப்பதுடன், பொங்கல் விழாக்கள் சிறப்பாக நடைபெற பாதுகாப்பு பணியில் உள்ள காவல்துறையினருக்கு முழு ஒத்துழைப்பு வழங்க கேட்டுக்கொண்டுள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்