வழக்கறிஞர்கள் சங்கம் சார்பாக நீதிமன்றத்தில் சமத்துவ பொங்கல் கொண்டாட்டம்!
தமிழர்களின் பாரம்பரிய விழாவான பொங்கலை முன்னிட்டு விருத்தாசலம் வழக்கறிஞர்கள் சங்கங்கள் சார்பாக ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது. மாவட்ட கூடுதல் நீதிபதி இளவரசன் தலைமையில் நடைபெற்ற இந்த சமத்துவ பொங்கல் விழாவில் மாவட்ட சார்பு நீதிபதி தமிழரசி, மாவட்ட உரிமையியல் நீதிபதி முத்துமுருகன், மாவட்ட நடுவர் மன்ற நீதிபதி சுப்ரமணியன், குற்றவியல் நீதிமன்ற நீதிபதிகள் ஜெயக்குமார், அரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மூத்த வழக்கறிஞர்கள் விநாயகம், மெய்க்கண்டநாதன், விஜயகுமார் மற்றும் பார் அசோசியேஷன், வழக்கறிஞர்கள் சங்கம், பெண் வழக்கறிஞர்கள் சங்கம் உள்ளிட்ட மூன்று சங்கங்களை சேர்ந்த வழக்கறிஞர்கள் கலந்துகொண்டனர். சமத்துவ பொங்கலை முன்னிட்டு நீதிபதிகள், வழக்கறிஞர்கள் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி- சட்டையிலும், பெண் வழக்கறிஞர்கள் பட்டுப்புடவையிலும் பங்கேற்றனர்.
- சுந்தரபாண்டியன்