Skip to main content

புதுச்சேரியில் மக்களவை-இடைத்தேர்தல் பணிகளில் சுணக்கம்! உற்சாகமிழந்த தொண்டர்கள்!  

Published on 28/03/2019 | Edited on 28/03/2019

 

 

புதுச்சேரி மக்களவை தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணி சார்பில் வைத்திலிங்கம் வேட்பாளராக போட்டியிடுகிறார். அதிமுக- என்.ஆர் காங்கிரஸ் கூட்டணியில் நாராயணசாமி வேட்பாளராக போட்டியிடுகிறார்.   மக்கள் நீதி மய்யம் சார்பில் எம்.ஏ.எஸ்.சுப்ரமணியன்,  நாம் தமிழர் கட்சி ஷர்மிளா பேகம், அ.ம.மு.க தமிழ்மாறன் உள்ளிட்டோரும்  வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்.

 

p

 

இதேபோல் தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில்  தி.மு.க சார்பில் வெங்கடேசன், என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் நெடுஞ்செழியன், நாம் தமிழர் கட்சி கவுரி, அ.ம.மு.க முருகசாமி, புதுச்சேரி வளர்ச்சி கட்சி ரவிசங்கர் உள்ளிட்டோர் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்.

மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் நடக்கவுள்ள் புதுச்சேரியில் இன்னும் தேர்தல் பணிகள் சூடுபிடிக்கவில்லை.

 

காங்கிரஸ் மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பதிலேயே கடைசிவரை இழுத்துக் கொண்டிருந்தனர்.   வேட்புமனு தாக்கலுக்கு கடைசி நாளுக்கு  முதல் நாள்தான் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு  உடனடியாக வேட்புமனு தாக்கல் செய்தனர்.  தமிழகத்தில் இதே நாளில்  மனுத்தாக்கல் செய்த வேட்பாளர்கள் வேட்பாளர்கள்  அறிமுகம், தேர்தல் அலுவலகம் திறப்பு,  செயல்வீரர்கள் கூட்டம் முடித்துவிட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை ஆதரித்து பிரதான கட்சிகள் மற்றும் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள்,  நட்சத்திரப் பேச்சாளர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

 

p

 

இந்நிலையில் புதுச்சேரியில் பிரதான கட்சிகளின் இரண்டு வேட்பாளர்களும் பிரச்சாரப் பணியை இன்னும் தொடங்காமல் உள்ளனர்.  இப்போதுதான் வேட்பாளர் அறிமுக கூட்டங்களை நடத்த தொடங்கியுள்ளனர்.

 

அதேபோல் முக்கிய தலைவர்களின் ஆதரவு பிரச்சாரங்களும் இல்லாமல் தேர்தல் களை கட்டவில்லை. காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து உள்ளூர் தலைவர்களான நாராயணசாமி,  நமச்சிவாயம்,  திமுக நிர்வாகிகள் சிவா,  சிவக்குமார் மற்றும் கம்யூனிஸ்ட்கள்,  விடுதலை சிறுத்தைகள் என உள்ளூர் தலைவர்கள் கூட்டங்களில் மட்டும் பங்கேற்று வருகின்றனர்.

 

தமிழக பகுதியான விழுப்புரத்திற்கு  பிரச்சாரத்திற்கு வந்த தி.மு.க பேச்சாளர் நாஞ்சில் சம்பத் மட்டுமே காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக வெளியிலிருந்து வந்த பிரச்சாரகர் ஆவார். அதேபோல் என் ஆர் காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமியை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் ரங்கசாமி,  திமுக மாநில செயலாளர் புருஷோத்தமன்,  எம் எல் ஏ அன்பழகன்,  பாஜக மற்றும் பாமக என இவர் தரப்பிலும் உள்ளூர் நிர்வாகிக ளே கூட்டங்களில் பங்கேற்று வருகின்றனர்.

 

 அதேபோல் விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து புதுச்சேரி வழியாக கடலூருக்கு பிரச்சாரம் சென்ற தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் நேற்று ஒரு சில இடங்களில் என் ஆர் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.  ஆனாலும் வேட்பாளர் சார்ந்த கட்சியினரின் தேர்தல் செலவுகளுக்கும்,  கூட்டணி கட்சியினர் தேர்தல் செலவுகளுக்கும் வைட்டமின் 'ப' வழங்கப்படாததால் பணிகளில் கட்சியினர் தீவிரம் காட்டவில்லை. மார்ச் மாதம் முடியப்போகிறது. 

 

ஏப்ரல் மாதம் தொடங்கிய பிறகுதான் தேர்தல் பணிகள் சூடுபிடிக்குமா தெரியவில்லை.  தேர்தலுக்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ளது. புதுச்சேரி மட்டுமல்லாது தமிழ்நாட்டின் காரைக்கால், ஆந்திராவின் ஏனாம், கேரளாவின் மாஹே போன்ற பகுதிகளுக்கும் பிரச்சாரத்தை விரிவுபடுத்த வேண்டியுள்ளது. பிரதான கட்சிகளின் இரண்டு வேட்பாளர்களின் தேர்தல் பணிகளே மந்தமாக உள்ளதால் சிறிய கட்சிகளின் வேட்பாளர்களும் தேர்தல் பணிகளில் ஆர்வம் காட்டவில்லை.   இந்நிலையில்  வேட்பாளர்களும்  இன்னும் தேர்தல் பிரச்சாரம் தொடங்கததால் தொண்டர்கள் உற்சாகமிழந்துள்ளனர்.

சார்ந்த செய்திகள்