Skip to main content

“அரசியல் பழி வாங்கும் படலம் பாஜக ஆட்சியில் நடைபெற்று வருகிறது” - ஆர்.எஸ். பாரதி

Published on 21/12/2023 | Edited on 21/12/2023
Political vendetta is taking place in BJP regime  R.S. Bharti

திமுக அமைச்சர் பொன்முடி வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகப் புகார் எழுந்ததைத் தொடர்ந்து தொடரப்பட்ட வழக்கில் சிறப்பு நீதிமன்றம் அமைச்சர் பொன்முடியை விடுவித்து தீர்ப்பளித்திருந்தது. இந்நிலையில் இந்தத் தீர்ப்பை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ள நிலையில், இன்று சிறைத் தண்டனை அறிவிக்கப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் டிசம்பர் 21ல் பொன்முடி மற்றும் அவரது மனைவி நேரில் அல்லது காணொளி வாயிலாக ஆஜராக வேண்டும் என நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று காலை அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் நீதிமன்றத்திற்கு வந்தனர். அதனைத் தொடர்ந்து கொடுக்கப்பட்ட தண்டனை உத்தரவில், பொன்முடி அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு மூன்றாண்டுகள் சிறைத் தண்டனை, தலா 50 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டார். மேலும் மேல்முறையீடு செய்வதற்காக 30 நாட்களுக்குத் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தண்டனை விதிக்கப்பட்டதால், சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர் உள்ளிட்ட பதவிகளை இழந்துள்ளார் பொன்முடி.

இந்நிலையில் முன்னாள் அமைச்சர் பொன்முடியை திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “திமுகவை பொறுத்தவரையில் எந்த வழக்கையும் சந்திக்கத் தயார். சிஏஜியை வைத்து 2ஜி வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கு என்ன ஆனது. இன்றைக்கு அதே சிஏஜி 7.5 லட்சம் முறைகேட்டை மோடி மீது சொல்லி இருக்கிறது. பொன்முடி மீதான தீர்ப்பை பாஜகவை தவிர வேறு யாரும் கண்டுகொள்ளவில்லை. அரசியல் பழி வாங்கும் படலம் தொடர்ந்து பாஜக ஆட்சியில் நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார். 

சார்ந்த செய்திகள்