Skip to main content

மகளை காணவில்லை என புகாரளித்த தந்தை... மீட்க சென்றும் மீட்காமல் திரும்பிய போலீஸ்!

Published on 26/11/2021 | Edited on 26/11/2021

 

the police who went to rescue and returned without rescuing

 

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ளது டி.புதுப்பாக்கம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் தனசேகர் (31). இவர் சென்னையில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்துவந்துள்ளார். அதே நிறுவனத்தில் ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியைச் சேர்ந்த 28 வயது திவ்யபிரபா என்பவரும் பணிபுரிந்துவந்துள்ளார். இருவரும் ஒரே நிறுவனத்தில் பணிபுரிந்தபோது அறிமுகமாகி காதலித்துள்ளனர். இந்த நிலையில், சித்தூர் அருகே உள்ள நாராயண வரம் போலீசில் திவ்யபிரபாவின் தந்தை தனது மகளைக் காணவில்லை என புகார் அளித்துள்ளார்.

 

அவரது புகாரின்பேரில் வழக்குப் பதிவுசெய்த ஆந்திர போலீசார், விசாரணை நடத்தியதில் திவ்ய பிரபா சென்னையில் தன்னுடன் வேலை செய்த தனசேகருடன் கடந்த மாதம் 24ஆம் தேதி திண்டிவனம் அருகே உள்ள மயிலம் முருகன் கோவிலில் திருமணம் செய்துகொண்டது தெரியவந்துள்ளது. மேலும், அவர்கள் தனசேகரனின் சொந்த ஊரான டி.புதுப்பாக்கத்தில் தங்கியிருப்பதைக் கண்டறிந்தனர். இதையடுத்து திவ்யாவை மீட்டு ஆந்திர மாநிலத்துக்கு அழைத்துச் செல்வதற்காக அவர் தந்தையுடன் நாராயண வரம் போலீசார் நேற்று (25.11.2021) புதுப்பாக்கம் கிராமத்திற்கு வந்துள்ளனர்.

 

அங்கிருந்த புதுமணத் தம்பதிகள் இருவரையும் அழைத்துச் சென்று திண்டிவனம் தாசில்தாரிடம் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கு வேறு மாநில வழக்கு என்பதால் நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள் என போலீசாரிடம் திண்டிவனம் தாசில்தார் தெரிவித்துள்ளார். இதையடுத்து, காதல் திருமணம் செய்துகொண்ட தம்பதிகள் தனசேகர் - திவ்ய பிரபா ஆகியோரிடம் வாக்குமூலம் மட்டும் பெற்றுக்கொண்டு திண்டிவனத்திலிருந்து அவர்கள் இருவரையும் தனசேகரன் ஊருக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் திண்டிவனம் பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டது.

 

 

சார்ந்த செய்திகள்