Skip to main content

மாயமான குழந்தையை மீட்டுக் கொடுத்த காவலருக்கு குவியும் பாராட்டுகள்

Published on 24/04/2023 | Edited on 24/04/2023

 

police for rescue the missing child

 

மருத்துவமனையில் தாயிடம் இருந்து மாயமான முதல் குழந்தையை பத்திரமாக மீட்டுக் கொடுத்த காவலருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. 

 

கோவை மாவட்டம் சங்கனூர் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். 24 வயதான இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ருக்மணி. இந்த தம்பதிக்கு சித்தார்த் என்கிற 4 வயது ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில், கடந்த வியாழக்கிழமையன்று ருக்மணி தனது இரண்டாவது பிரசவத்திற்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது அவரது மூத்த மகன் சித்தார்த்தும் உடனிருந்தார்.

 

இதையடுத்து மகப்பேறு பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ருக்மணிக்கு இரண்டாவது முறையாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. அந்த சமயம், குழந்தை பிறந்த செய்தியறிந்த பெற்றோரும் உறவினர்களும் மகிழ்ச்சியில் திளைத்த நேரத்தில் மணிகண்டன் - ருக்மணி தம்பதியின் மூத்த மகன் சித்தார்த் திடீரென மாயமாகியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மணிகண்டன் தன்னுடைய உறவினர்களை அழைத்துக் கொண்டு மகன் சித்தார்த்தை மருத்துவமனை முழுவதுமாக தேடி அலைந்துள்ளனர். அப்போது அந்த மருத்துவமனையில் பாதுகாப்புப் பணியில் இருந்த முதல்நிலை காவலர் ஸ்ரீதர் என்பவர் மெயின்ரோட்டில் நின்று கொண்டிருந்த சித்தார்த்திடம் பேச்சு கொடுத்துள்ளார். 

 

இதைத் தொடர்ந்து, அந்த சிறுவன் தன்னை முழுமையாக அடையாளப்படுத்திக் கொள்ளாததால் அச்சிறுவனுக்கு உணவுப்பண்டங்கள் வாங்கிக் கொடுத்து ஒவ்வொரு வார்டாக அழைத்துச் சென்றுள்ளார். அப்போது, மகப்பேறு வார்டில் இருந்த தனது தாயை அடையாளம் காட்டிய பிறகு அச்சிறுவன் மணிகண்டன் - ருக்மணி தம்பதியின் மகன் என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, மாயமான சிறுவனை பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைத்த காவலரை மருத்துவமனையில் இருந்த அனைவரும் வெகுவாகப் பாராட்டியுள்ளனர். அதுமட்டுமின்றி, குழந்தைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ளுமாறு போலீசார் அங்கிருந்தவர்களிடமும் அறிவுறுத்திவிட்டுச் சென்றுள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

பிரபல ரவுடி நடுரோட்டில் வெட்டிக்கொலை; இறந்த பின்னும் முகத்தை சிதைத்த கொடூரம்

Published on 03/07/2024 | Edited on 03/07/2024
Notorious rowdy attacked in the middle of the road; The brutality that disfigured the face even after lose their live

பிரபல ரவுடி நடுரோட்டில் சரமாரி வெட்டிக்கொலைசெய்யப்பட்டதோடு இறந்த பின்னும் அவரின் முகத்தை சிதைத்த கொடூர சம்பவம் வேலூரில் நிகழ்ந்துள்ளது.

வேலூர் அடுத்த அரியூர் பாரதி நகரைச் சேர்ந்தவர் பிரபல ரவுடியான எம்.எல்.ஏ. ராஜா (எ) ராஜ்குமார் (42). இவர் மீது பல்வேறு கொலை, வழிப்பறி, கடத்தல் போன்ற வழக்குகள் வேலூர் மாவட்டத்தில் உள்ள பல காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் நேற்று (02.07.2024) இரவு  ரவுடி ராஜா அரியூர் மெயின் ரோட்டில் உள்ள டீக்கடையில் இருந்து தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு புறப்பட்டு சென்றுள்ளார். அப்போது அம்பேத்கர் சிலை அருகே சென்றபோது எதிரே காரில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் ராஜாவின் இருசக்கர வாகனத்தின் மீது மோதி உள்ளனர்.

இதில் நிலை தடுமாறி ரோட்டில் விழுந்த ரவுடி ராஜாவை காரில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் கண்ணிமைக்கும் நேரத்தில் வீச்சரிவாள்களால் சரமாரியாக வெட்டியதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த ராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். ஆனாலும் ஆத்திரம் அடங்காத கும்பல் ராஜாவின் முகத்தை சரமாரியாக வெட்டியதில் அடையாளம் தெரியாத அளவுக்கு முகம் சிதைந்தது. பின்னர் கொலை கும்பல் ஒரு வீச்சு அரிவாளை அங்கேயே போட்டுவிட்டு அவர்கள் வந்த காரில் தப்பிச் சென்றுள்ளது. இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த அரியூர் காவல் துறையினர் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். படுகொலை செய்யப்பட்ட ரவுடி ராஜாவின் சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வேலூர் எஸ்.பி மணிவண்ணன் நேரில் விசாரணை மேற்கொண்டார்.

கொலை செய்துவிட்டு காரில் தப்பி சென்ற கும்பலை உடனே பிடிக்கும்படி போலீசாருக்கு எஸ்.பி உத்தரவிட்டார். இதையடுத்து டிஎஸ்பி திருநாவுக்கரசு மற்றும் போலீசார் பல்வேறு பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அதோடு கொலை நடந்த பகுதியில் பதிவான சிசிடிவி கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்யும் பணியையும் தொடங்கினர்.

இதற்கிடையே காரில் தப்பிச்சென்ற கொலை கும்பலை வேலூர் வல்லம் பகுதியில் உள்ள சுங்கச்சாவடி பகுதியில் போலீசார் மடக்கி பிடித்தனர். பிடிபட்ட 4 பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். அசம்பாவிதத்தை தடுக்க காவல்துறை குவிக்கப்பட்டதால் அரியூர் பகுதியில் நள்ளிரவில் பரபரப்பாக காணப்பட்டது.

Notorious rowdy attacked in the middle of the road; The brutality that disfigured the face even after lose their live


இதுகுறித்து போலீசார் கூறியதாவது:

அரியூர் பகுதியைச் சேர்ந்த ரவுடி ராஜா என்கின்ற எம்.எல்.ஏ ராஜா மீது 3 கொலை வழக்குகள் மற்றும் 15க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ளன. இவருக்கு திருமணம் நடந்து 3 குழந்தைகள் உள்ளன. வழக்கம்போல டீக்கடைக்கு சென்றுவிட்டு மீண்டும் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்த போது காரில் வந்த ஒரு கும்பல் திடீரென காரை ராஜா மீது மோதி ராஜாவை சரமாரியாக வெட்டி படுகொலை செய்து தப்பியோடியுள்ளனர். அவர்களை கைது செய்து, காரை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம்.

முதல்கட்ட விசாரணையில், பிடிபட்டவர்கள் அரியூர் பகுதியைச் சேர்ந்த சந்துரு, அஜித் குமார், ராஜேஷ், தேஜேஷ் என்பதும், இவர்களுக்கும் ரவுடி எம்எல்ஏ ராஜாவுக்கும் இடையே ஏற்கனவே நடந்த கொலைகள் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது தெரியவந்தது. இதில் பழிதீர்த்து கொள்ளவும், ஏரியாவில் யார் பெரியவர் என்பதிலும் அவர்களுக்கிடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. அப்போது நடந்த வாக்குவாதத்தில், ‘உங்களை நான் கொலை செய்யாமல் விடமாட்டேன்’ என்று ரவுடி ராஜா கூறியதாக தெரிகிறது. இதனால் நம்மை கொலை செய்வதற்கு முன்பு நாம் அவரை தீர்த்துக் கட்ட வேண்டும் என்று திட்டமிட்டு இந்த கொலையை செய்துள்ளனர். பிடிபட்டுள்ள 4 பேர் மீதும் ஏற்கனவே எதாவது வழக்குகள் உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது எனக் கூறினர்.

Next Story

116 பேர் உயிரிழப்பு; தப்பியோடிய போலே பாபாவுக்கு வலைவீச்சு

Published on 03/07/2024 | Edited on 03/07/2024
116 people lost their lives; bole Baba

உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் என்ற பகுதியில் நேற்று (02.07.2024) ஆன்மிகக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆன்மிக சொற்பொழிவாளர் போலே பாபா உரையாற்றினார். இவரது பேச்சைக் கேட்க 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். இதற்காக கூட்டம் கூட்டமாக வந்த மக்கள் திரும்பிச் செல்லும்போது வெளியே செல்ல வழியின்றி நெரிசலில் சிக்கினர். இதனால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பலரும் மயங்கி விழுந்துள்ளனர். இந்த சிக்கி குழந்தைகள், பெண்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்தில் சிக்கி காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இந்த கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 2 லட்சம் நிதியுதவி வழங்கவும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்கவும் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். மேலும் இது தொடர்பாக உயர்மட்டக்குழு விசாரணை செய்யவும் அவர் உத்தரவிட்டுள்ளார். மேலும் பிரதமர் மோடி ஹத்ராஸில் நடந்த விபத்தில் இறந்தவர்களின் உறவினர்களுக்குப் பிரதமரின் பொது நிவாரண நிதியில் இருந்து 2 லட்சம் ரூபாயும், இந்த விபத்தில் காயமடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் ரூபாயும் வழங்க உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாகப் பலரும் தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

116 people lost their lives; bole Baba

தற்போதைய தகவலாக ஹத்ராஸ் கூட்ட நெரிசல் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 116 ஆக அதிகரித்துள்ளது. 18 பேர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த கூட்ட நெரிசல் விபத்து தொடர்பாக கூட்டத்தை நடத்திய சாமியார் போலே பாபா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தப்பித்து ஓடிய சாமியார் போலே பாலாவை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். குறிப்பாக மணிபூரி மாவட்டத்தில் உள்ள ராம் குதிர் அறக்கட்டளை கட்டிடத்தில் போலே பாபா பதுங்கி இருக்கிறார் என்ற தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.