Skip to main content

விளையாடினாலும் வெடிக்கும்! -சிறுவர்களைப் பதம் பார்த்த சிவகாசி பட்டாசு! 

Published on 12/12/2018 | Edited on 12/12/2018

பட்டாசுக்குத் தடைகோரி வழக்கு, உச்ச நீதிமன்ற நிபந்தனைகள், பட்டாசு ஆலைகள் மூடல் என தொழில் நெருக்கடியால் தொடர்ந்து தத்தளிக்கிறது சிவகாசி. கள்ள வரவான சீனப்பட்டாசுகள் ஆபத்தானவை என்று சிவகாசி பட்டாசு ஆலை அதிபர்கள் கூறிவரும் நிலையில், சிவகாசி தயாரிப்பான ஃபேன்சி ரக பட்டாசு வெடித்து மூன்று சிறுவர்கள் படுகாயம் அடைந்திருக்கின்றனர். 

 

CRACK


சிவகாசி காரனேசன் காலனி பகுதியில்  ‘ஐஸ்க்ரீம் பால்’ வடிவில் ஏதோ ஒன்று கிடந்திருக்கிறது. அந்த ஏரியா சிறுவர்களான நவீன்ராம், சமிஸ்கா, பிரசன்னா ஆகியோர் அதைக் கையில் எடுத்து விளையாடியிருக்கின்றனர். அதில் ஒட்டப்பட்டிருந்த செலபன் டேப்பை ஒருவன் பிய்த்துப் பார்த்தபோது, சூடம் போல ஏதோ ஒட்டப்பட்டிருந்திருக்கிறது. உடனே சிறுவர்கள் மூவரும் குஷியாகி, சூடம் கொளுத்தி சாமி கும்பிட்டு விளையாடுவோம் என்று அங்கு வீடு கட்டுவதற்காக குவிக்கப்பட்டிருந்த மணலுக்குள் அந்தப் பந்தைப் புதைத்து, மேற்பகுதியில் தீக்குச்சியால் உரசிப் பற்ற வைத்திருக்கின்றனர். அடுத்த நொடியே, அந்த ஏரியாவே அலறும் விதத்தில் பெரும் சத்தத்துடன் வெடித்திருக்கிறது அந்தப் பந்து. சிறுவர்கள் மூவரும் தூக்கி எறியப்பட்டனர். 

 

CRACK

 


இந்த விபத்தில் தலைமுடி கருகி, விழிகள் பொசுங்கி, மணிக்கட்டுக்குக் கீழே வலதுகை முறிந்து தொங்கிவிட்டது. சிறுமி சமிஸ்காவுக்கு வலது கை விரல்கள் மூன்றிலும் படுகாயம். பிரசன்னாவுக்கும் தலைமுடி கருகிவிட்டது. கண்களில் பாதிப்பு. உடனடியாக, இவர்களின் பெற்றோர் தனியார் மருத்துவமனைகளுக்குக் கொண்டுசென்று சிகிச்சை அளித்தனர். விஷயம் அறிந்த சிவகாசி கிழக்கு காவல்நிலைய காக்கிகள் விசாரணை நடத்தினர். 

 


வானத்தில் பறந்துசென்று வெடிக்கும் ஃபேன்சிரக பட்டாசில் தூக்குமருந்து என்று சொல்லப்படும் மணிமருந்தை பிளாஸ்டிக்கிலான பந்து ஒன்றி அடைத்து வைத்திருப்பார்கள். மேலே சென்று, வண்ண ஒளிச்சிதறல்களுடன் வெடிக்கும் இந்த ஃபேன்சிரக பட்டாசு தரமின்றி தயாரிக்கப்பட்டிருந்தால், வெடிக்காமல் அப்படியே தரையில் விழுந்துவிடும். அப்படி விழுந்த ஒரு பந்துதான் இது. அந்த ஏரியாவில் தீபாவளிக்குத்தான் பலரும்  வெடித்திருக்கிறார்கள்.  ஒரு மாதம் கடந்தும், மழையில் நனைந்து, வெயிலில் காய்ந்த அந்த வெடிப்பந்து  வீரியம் குறையாமல் இருந்திருக்கிறது. அதனால்தான், திரி இல்லாத நிலையிலும்,  பற்றவைத்ததும் வெடித்திருக்கிறது.  

 


‘போலீஸ் ஸ்டேஷனுக்கு அலையவேண்டும்;  விசாரணைகளைச் சந்திக்க வேண்டும்’ என்ற பயத்தில் சிறுவர்களின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் எதுவும் அளிக்கவில்லை.  பிறகென்ன? வெடியைத் தரமற்று தயாரித்த பட்டாசு உரிமையாளர் தப்பிவிட்டார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்காளர் அட்டை இங்கே! என் ஓட்டு எங்கே? - வாக்காளர் ஆத்திரம்

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
 Sivakasi, voter panic due to inability to vote
சாந்தி - சங்கரன்

தமிழ்நாட்டில் உள்ள 6 கோடியே 23 லட்சம் வாக்காளர்களில், ஒரு கோடியே 74லட்சத்து 44 ஆயிரம் பேர் வாக்களிக்கவில்லை. மொத்தத்தில், அதி முக்கிய ஜனநாயகக் கடமையை நிறைவேற்றாத வாக்காளர்கள் 28 சதவீதம் பேர் உள்ளனர். இவர்களில் யார் யாருக்கு என்னென்ன  கஷ்டமான சூழ்நிலையோ தெரியவில்லை. ஆனாலும், வாக்களிக்கும் முக்கியத்துவத்தை உணராமல், சோம்பேறித்தனமாக வீட்டிலோ, அலட்சியமாக வெளியூர்களிலோ இருந்தவர்கள், அனேகம் பேர்.

சிவகாசியில் வாக்குச்சாவடி ஒன்றிலிருந்து நம்மை அழைத்த சங்கரன், தன்னையும் தன் மனைவி சாந்தியையும் வாக்களிக்க அனுமதிக்காததால், கொதித்துபோய்ப் பேசினார்.  “இத்தனை வருடங்களாக ஓட்டு போட்டுட்டு இருக்கேன். வாக்காளர் அடையாள அட்டை எங்ககிட்ட இருந்தும், இந்தத்தேர்தல்ல உங்களுக்கு ஓட்டு இல்லைன்னு சொன்னா, இது அக்கிரமம் இல்லியா? இதெல்லாம் எப்படி நடக்குது? ரொம்பக் கொடுமையா இருக்கு. எங்களுக்கு ஓட்டு இல்லைன்னு சொல்லி, அங்கேயிருந்த சிவகாசி மாநகராட்சி அலுவலர்களைப் பார்க்கச் சொன்னாங்க.

 Sivakasi, voter panic due to inability to vote

மூணு மாசத்துக்கு முன்னால லிஸ்ட்லசெக் பண்ணும்போது எங்க பேரு இருந்துச்சுன்னு நான் சொன்னேன். லிஸ்ட்ல உங்க பேரு இல்ல. போன் நம்பர் தப்பா இருக்குன்னாங்க. அப்புறம் இன்டர்நெட்ல EPIC நம்பரை போட்டுப் பார்த்து, எலக்‌ஷன் கமிஷன்ல என் பேரு இருக்கிறத காமிச்சதும், அப்படியான்னு சொல்லி, ஓட்டு போடவிட்டாங்க. ஆனா..என் வீட்டுக்காரம்மா சாந்திக்கு ஓட்டு இல்லைன்னு சாதிச்சிட்டாங்க. அவங்க ரொம்பவும் மனசு வேதனைப்பட்டு, நூறு சதவீதம் வாக்களிப்போம்னு போர்டு வைக்கிறாங்க. ஆனா.. ஓட்டு போட வந்தவங்களுக்கு ஓட்டு இல்லைங்கிறாங்க. அப்படின்னா.. நான் வச்சிருக்கிற வாக்காளர் அடையாள அட்டைக்கு என்ன மதிப்புன்னு மொதல்ல சத்தம் போட்டாங்க. அப்புறம் அழுதுட்டாங்க.” என்றார் ஆதங்கத்துடன்.

 Sivakasi, voter panic due to inability to vote

இதே சிவகாசியில், சிவகாசி மாநகராட்சியின் முதலாவது வார்டு திமுக கவுன்சிலர் செல்வத்தின் பெயரும் வாக்காளர் பட்டியலில் இல்லை. சென்னை சாலிகிராமத்தில் வாக்களிக்கச் சென்ற நடிகர் சூரியின் பெயரும் வாக்காளர் பட்டியலில் இல்லை. அவராலும் வாக்களிக்க முடியாமல் போனது. வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தும் வாக்களிக்க வராத கோடிக்கணக்கானோர் இருக்கிறார்கள். வாக்காளர் அடையாள அட்டை வைத்திருந்தும் வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டுப்போன சாந்தி, நடிகர்சூரி போன்றோரும் நிறையப்பேர் இருக்கிறார்கள். வாக்களிப்பதில் உள்ள குறைபாடுகளுக்குத் தீர்வுகாண முடியாத நிலையில் உள்ளது டிஜிட்டல் இந்தியா என்று கடுமையாக சாடுகின்றனர் சமூக ஆர்வலர்கள். 

Next Story

பாஜக வெடித்த பட்டாசு; இரண்டு குடிசைகள் எரிந்து நாசம்; மக்கள் போராட்டம்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
BJP burst firecrackers; Two huts were destroyed by fire; People's struggle

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இந்நிலையில் நாகையில் பாஜக வேட்பாளர் பிரச்சாரத்தின்போது வெடிக்கப்பட்ட பட்டாசு இரண்டு குடிசைகள் மீது பட்டு, பற்றி எரிந்துள்ளது. இதனால் குடிசை வீடுகள் இரண்டு முற்றிலும் சேதமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அந்தப் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த பாஜக வேட்பாளர் ரமேஷை வரவேற்பதற்காக கோட்டாட்சியர் அலுவலகத்தின் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் பாஜகவினரால் பட்டாசு வெடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

அப்போது பட்டாசு பொறிகள் அருகில் இருந்த குடிசை வீடுகளில் பட்டு இரண்டு வீடுகள் பற்றி எரிந்தது. இதில் பக்கிரிசாமி, சுப்பிரமணியன் ஆகிய இருவரின் குடிசை வீடுகள் முற்றிலுமாக எரிந்து நாசமானது. இந்நிலையில் அந்தப் பகுதியில் இருந்த மக்கள் குடிசை வீட்டை இழந்தவர்களுக்கு ஆதரவாக பாஜக நிர்வாகிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பாஜக மாவட்டத் தலைவர் கார்த்திகேயனை முற்றுகையிட்டு வீடுகளை இழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென சரமாரியாக கேள்வி எழுப்பினர். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இழப்பீடு வழங்கப்படும் என எழுத்துபூர்வமாக தெரிவித்தால் மட்டுமே பாஜக மாவட்டத் தலைவரை விடுவிப்போம் எனக்கூறி பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.