Skip to main content

வெகுளியாக கேள்வி கேட்ட சிறுவன்; காட்டுமிராண்டித் தனமாகத் தாக்கும் நபர்

Published on 18/10/2023 | Edited on 18/10/2023

 

 person severely beaten a drunken boy

 

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த கூடத்துப்பட்டியில் வசித்து வருபவர் கட்டடத் தொழிலாளி அருளப்பன். இவரது இரண்டாவது மகன் 8 வயது சிறுவன், அருகே உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 3 ஆம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று மாலை பள்ளி வகுப்புகள் முடிந்த நிலையில், இல்லம் தேடிக் கல்வி வகுப்பிற்காகச் சென்ற சிறுவன் வகுப்பில் படித்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது அதே வகுப்பில் 2-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை வீட்டிற்கு அழைத்துச் செல்ல வந்த மாணவியின் தந்தையிடம், நீங்கள்தான் அந்த சிறுமியின் தந்தையா? என சிறுவன் கேட்டுள்ளார். 

 

அப்போது போதையில் இருந்த சிறுமியின் தந்தை, என்னை தெரியாமல் இந்த ஊரில் இருக்கியா? என சிறுவனை சரமாரியாக கன்னத்தில் அறைந்தும், நெஞ்சில் எட்டி உதைத்தும் தகாத வார்த்தைகளால் திட்டியும் உள்ளார். இதில் மாணவன் நெஞ்சின் உள் ரத்தக் காயமடைந்து பெற்றோரால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளார். இந்நிலையில் சிறுவன் மீது போதை ஆசாமி தாக்குதல் செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவியது. தகவலறிந்து நிகழ்விடத்துக்குச் சென்ற போலீஸார் பாதிக்கப்பட்ட மாணவனின் தந்தையிடம் விசாரணை மேற்கொண்டனர். 

 

 person severely beaten a drunken boy

 

அதனைத் தொடர்ந்து சிறுவனின் தந்தை அருளப்பன் அளித்த புகாரின் பேரில், சிறுமியின் தந்தை வின்சென்ட்ராஜை  வையம்பட்டி போலீஸார் வழக்குப் பதிந்து கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 8 வயது சிறுவனை காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கப்படும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பதைபதைக்கும் காட்சியாக வைரலாகி வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்