Skip to main content

நாடாளுமன்றத் தேர்தல்; அ.தி.மு.க. விருப்ப மனு விநியோகம்

Published on 19/02/2024 | Edited on 19/02/2024
Parliamentary elections; Distribution of form in ADMK

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்திய தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.

அந்த வகையில் அ.தி.மு.க. சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக தொகுதிப் பங்கீட்டுக் குழு, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, தேர்தல் பிரச்சாரக் குழு, தேர்தல் விளம்பரக் குழுக்கள் அமைக்கப்பட்டன. அதன்படி இந்தக் குழுவினர் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான விருப்ப மனு விநியோகம் பிப்ரவரி 21 ஆம் தேதி தொடங்கும் என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இது குறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், “நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளில் அ.தி.மு.க. சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட விரும்புகின்ற அ.தி.மு.க.வினர் தலைமைக் கழகத்தில் வருகின்ற 21.02.2024 முதல் 01.03.2024 வரை, தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை, உரிய கட்டணத் தொகையைச் செலுத்தி அதற்கான விண்ணப்பப் படிவங்களைப் பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் பூர்த்தி செய்து மீண்டும் தலைமைக் கழகத்தில் வழங்கலாம்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் இது குறித்து கட்சியின் பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “அ.தி.மு.க. சார்பில் மக்களவைப் பொதுத் தேர்தலில் வேட்பாளர்களாகப் போட்டியிட விரும்புகின்றவர்கள் பொதுத் தொகுதிக்கு ரூ.20 ஆயிரமும், தனித் தொகுதிக்கு ரூ.15 ஆயிரமும் என உரிய தொகையைத் தலைமைக் கழகத்தில் செலுத்தி விண்ணப்பப் படிவங்களைப் பெற்றுக்கொள்ளலாம்” எனத் தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்