திமுக தலைவர் கலைஞரின் 95வது பிறந்தநாள் வருகையையொட்டி திமுக தொண்டர்களுக்கு பிறந்தநாள் கொண்டாட்டம் குறித்து செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தில்,
என் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞர் அவர்களின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் நம் உயிரனைய தலைவரின் 95வது பிறந்தநாள் விழா கொண்டாட்ட மடல்.
அவருடைய உடல் அசைவுகள் கொஞ்சம் குறைந்திருக்கலாம். ஆனால் அவரின்றி எதுவும் அசைவதில்லை, அரை நூற்றாண்டுகால அரசியல் வரலாற்றில்! இந்தியாவில் வேறெந்தத் தலைவருக்கும் இல்லாத அருமை பெருமைகளைக் கொண்டவர் நம் தலைவர் கலைஞர். எப்போதெல்லாம் மாநிலத்திலும் மத்தியிலும் அரசியல் நெருக்கடிகள் நேர்கின்றனவோ அப்போதெல்லாம் தலைவர் கலைஞர் வகுத்தளிக்கும் வியூகங்களே தீர்வுகளாகும் வரலாற்றை தமிழ்நாடும் இந்தியாவும் பதிவு செய்துள்ளன.
இன்று இந்தியாவைப் பிடித்து ஆட்டும் மதவாத சக்தியினால், சிறுபான்மை சமுதாயத்தவர் அச்சத்தில் உறைந்திருக்கிறார்கள். பெரும்பான்மையாக உள்ள இந்து மதத்தைச் சேர்ந்த மக்களாவது நிம்மதியாக இருக்கிறார்களா என்று பார்த்தால், அவர்களும் துன்பத்தில் உழன்று கொண்டிருக்கிறார்கள். இந்துக்களாக இருந்தாலும் இந்தியர்களாக இருந்தாலும் பா.ஜ.க ஆட்சி செய்யாத மாநிலங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தால் அவர்களின் அடிப்படை உரிமைகள் பறிபோகின்றன. அவர்களின் தாய்மொழி மீது இந்தித் திணிப்பு எனும் கொடூர ஆயுதத்தினால் தாக்குதல் நடத்தப்படுகிறது. சமஸ்கிருதம் எனும் பேச்சுவழக்கற்ற மொழிக்குத் தரப்படும் அதீத மரியாதை, அவரவர் தாய்மொழிகளுக்குத் தரப்படுவதில்லை. தமிழ்த்தாய் வாழ்த்து தவிர்க்கப்படுகிறது. இசைக்கப்பட்டாலும் அவமரியாதை செய்யப்படுகிறது.
அவரவர் மண்ணுக்கேற்ற-அவரவர் பண்பாட்டுக்குரிய-அவரவர் உடல்திறனுக்கேற்ற உணவை சாப்பிடுவதற்குக்கூட அனுமதி மறுக்கப்பட்டு, உணவு சாப்பிட்டதற்காக அடித்துக் கொல்லப்படும் அவலத்தைக் கண்டு நெஞ்சம் பதறுகிறது. அப்படிப் பதறுகிற நேரத்தில், தமிழ்நாட்டு மக்கள் மட்டுமல்ல, இந்தியாவின் பிற மாநிலங்களில் உள்ள சிந்தனையாளர்கள் - செயல்பாட்டாளர்கள் - அறிஞர் பெருமக்களின் நினைவுக்கு வருபவர் இந்தியாவின் மூத்த அரசியல் தலைவரான-நம் உயிருக்கும் மேலான தலைவர் கலைஞர் அவர்கள்தான்.
அவர்தான் 14 வயதிலேயே புலி வில் கயல் பொறிக்கப்பட்ட தமிழ்க்கொடியை கையில் ஏந்தி, இந்தி ஆதிக்கத்தை எதிர்த்துப் போர்க்குரல் எழுப்பியவர. 80 வயதிலும் சளைக்காமல் போராடி, வாதாடி தாய்மொழியாம் தமிழுக்கு செம்மொழித் தகுதியைப் பெற்றுத் தந்தவர். பெரும்பான்மை மக்களும்- சிறுபான்மை மக்களும் சம உரிமையுடனும் சகோதரத்துவத்துடனும் வாழும் மதசார்பற்ற கொள்கையைப் பரவச் செய்தவர். மத்திய ஆட்சியாளர்களால் மாநில உரிமைகள் பறிபோகாதபடி மாநில சுயாட்சிக் கொள்கையை முன்னிறுத்தி, இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்காகவும் குரல் கொடுத்தவர். தேசிய அரசியலின் பார்வையைத் தென்னகத்தின் பக்கம் திருப்பியதுடன் மட்டுமல்லாமல், தமிழகத்தின் உத்தரவை டெல்லி ஏற்றிடும் வகையில், தெற்கில் உதித்த திராவிடச் சூரியனாக எந்நாளும் ஒளி வீசுபவர். சமூக நீதிக் கொள்கையை வி.பி.சிங் ஆட்சிக்காலத்தில் மண்டல் கமிஷன் அறிக்கையின் மூலம் இந்தியாவின் தேசியக் கொள்கையாக மாற்றிய திராவிடப் பெருந்தலைவர்.
தலைவர் கலைஞரின் கண்ணசைவிலும் கருத்துப் பரப்பிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட குடியரசுத் தலைவர்களையும், பிரதமர்களையும் இந்திய வரலாறு தனது பக்கங்களில் வரவு வைத்துள்ளது. அதனால்தான் ஜனநாயக நெறிமுறைகளுக்கும் அரசமைப்புச்சட்ட மாண்புகளுக்கும் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள இன்றைய நிலையில், அவரது நினைவு இந்திய அரசியல் தலைவர்களுக்கு ஏற்படுகிறது. கட்சி மாறுபாடுகளின்றி அனைத்துத் தரப்பினரும் கோபாலபுரம் வந்து அவரது உடல்நலனை விசாரிக்கின்றனர். அவரது வாழ்த்துகளைப் பெற்று மகிழ்கின்றனர்.
தமிழ்நாட்டில் மட்டும் சிலருக்கு அவரை வசைபாடினால் தங்களுக்கு அரசியல் வாழ்வு என்ற நிலை இன்றும் நிலவுகிறது. அண்ணாவின் தம்பியான தலைவர் கலைஞரோ, வாழ்க வசவாளர்கள் என்று அவர்களுக்கும் வாழ்வளித்துக் கொண்டிருக்கிறார். மத்தியில் நடைபெறும் எதேச்சதிகார ஆட்சிக்கு, மாநிலத்தில் உள்ள ஆட்சி மண்டியிட்டுக் கிடப்பதால், மாநிலத்தின் உரிமைகள் ஒவ்வொன்றாகப் பறிபோய்க் கொண்டிருக்கின்றன. நீட் தேர்வு எனும் கொடுவாள் ஆண்டுதோறும் நரபலி கேட்கிறது. சமூக நீதிக் கொள்கைக்குப் புதைகுழி தோண்டும் வகையில் மத்திய ஆட்சியாளர்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், மாநில அரசாங்கத்தார் வாய் திறக்காமல் மவுனம் சாதித்துக்கொண்டு இருக்கிறார்கள். தனிப்பட்ட பதவி சுகத்துக்காகப் பொது உரிமைகள் அடகு வைக்கப்படுகின்றன.
நெருக்கடி நிலை காலமாக இருந்தாலும், மதவெறி சக்திகளின் கை ஓங்குகிற சூழலாக இருந்தாலும் இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பாதுகாத்து-ஜனநாயக மீட்புப் போரை முன்னின்று நடத்தி- மதச்சார்பின்மை சக்திகளை ஒருங்கிணைக்கும் ஆற்றல் கொண்டவர் தலைவர் கலைஞர் என்பதை வடபுலத்துத் தலைவர்களும் மனதார ஒப்புக் கொள்கிறார்கள். இன்று இந்தியாவின் பன்முகத்தன்மையை சிதைத்து-ஒரு மதம்-ஒரு மொழி-ஒரே கலாச்சாரம் -ஒரு கட்சி ஆட்சி என்கிற சர்வாதிகாரப் போக்கு மேலோங்குவதையும், அதற்காக ஜனநாயகத்தின் விழுமியங்களைப் புறக்கணித்து-மக்களாட்சியைக் கேலிக்கூத்தாக்க நினைப்போரையும் நாடு எதிர்கொண்டிருக்கிறது.
மத்திய அரசின் பிரதிநிதியான ஆளுநரை வைத்துக் கொண்டு மாநிலங்கள் தோறும் மறைமுக ஆட்சி நடத்த நினைக்கும் பா.ஜ.க.வின் எதேச்சதிகாரப் போக்கை தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகம் உள்ளிட்ட பல மாநிலங்கள் நேரடியாக அனுபவித்துள்ளன. இந்த நிலை மாறவும், மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் காணவும், மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் கண்டு ஜனநாயகத்தை மீட்கவும், ஓரணியில் நிற்கவேண்டிய அவசியத்தை மீண்டும் மீண்டும் நமக்கு நினைவூட்டுகிறது தலைவர் கலைஞரின் பேராற்றல்.
தமிழ்நாட்டை அதிககாலம் ஆட்சி செய்த முதல்வர் – அதிகமான திட்டங்களை தமிழ்நாட்டுக்குத் தந்து-இந்தியாவுக்கே முன்னோடியாகத் திகழ்ந்த தலைவர் என்ற பெருமை கொண்ட தலைவர் கலைஞர் அவர்களின் 95வது பிறந்தநாள் என்பது, காலண்டரில் கிழித்தெறியும் சாதாரண நாள் அல்ல. காலம் தன் வரலாற்றுப் பக்கத்தில் பதிவிட்டுள்ள சாதனைச் சரித்திர நாள். நூற்றாண்டு கண்ட திராவிட இயக்கத்தின் 95 வயது தலைவருக்கு, பொதுவாழ்வு வயது 81, திரையுலக வயது 71, கழகத்தின் தலைமைப் பொறுப்பேற்றதிலிருந்து அரை நூற்றாண்டு, 50 ஆண்டுகாலமாக தமிழ்நாட்டு அரசியல் சக்கரம் அவரை அச்சாணியாகக் கொண்டே சுழல்கிறது.
ஜூன் 3ல் தொடங்கி மாதம் முழுவதும் தமிழகம் எங்கும் தலைவர் கலைஞர் அவர்களின் 95வது பிறந்தநாளை எழுச்சியுடனும் மகிழ்ச்சியுடனும் கொண்டாடுவோம். அதற்கு கட்டியங்கூறும் வகையில் கழகத்துடன் இணைந்து மக்கள் நலனுக்காகக் களம் காணும் தோழமைக் கட்சித் தலைவர்கள் அனைவரும், தலைவர் கலைஞர் வளர்ந்த-அவரை வார்த்தெடுத்த-தமிழ்நாட்டிலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தலைவரை வெற்றி பெறச் செய்த திருவாரூர் தொகுதியில் ஜூன் 1 அன்று, அண்ணா திடலில் நடைபெறும் பிறந்தநாள் விழா மாபெரும் பொதுக்கூட்டத்தில் வாழ்த்துரை ஆற்றுகின்றனர். நீண்ட நெடுங்காலமாக தலைவர் கலைஞரின் தோளோடு தோள் நின்று துணைபுரியும் அவரது அரசியல் தோழரான கழகப் பொதுச்செயலாளர் இனமானப் பேராசிரியர் பெருந்தகை அவர்கள் தலைமையேற்க, தலைவரின் சொந்த மண்ணாகிய திருவாரூரில் அவரது மைந்தன் என்ற பெருமையுடனும் அவரது இயக்க உடன்பிறப்பு என்ற தகுதியுடனும் நானும் பங்கேற்கிறேன்.
தமிழ்நாடும் இந்தியாவும் இன்றைய சூழலில் எதிர்பார்க்கும் மூத்த தலைவரான நம் தலைவர் கலைஞர் உடல்நலக்குறைவால் ஓய்வில் இருந்தாலும், அவரது சிந்தனைகளை முறையாகச் செயல்படுத்த - அவரது வழிகாட்டுதலில் மகிழ்வுடன் களம் காண கழகத்தின் ஒரு கோடிக்கும் அதிகமான அவரது உடன்பிறப்புகள் அனைவரும் அணி திரள்வோம்! நாடெங்கும் வீடெங்கும் தலைவர் கலைஞரின் 95வது பிறந்தநாளைக் கொண்டாடுவோம்! அந்த சரித்திர நாயகரின் சாதனைகளை எட்டுத் திக்கும் எடுத்துச் சென்று ஒவ்வொரு நெஞ்சத்திலும் பதிவு செய்வோம்!. தலைவர் கலைஞர் அவர்கள் நல்ல உடல்நலத்துடன் காணப்போகும் அவரது நூற்றாண்டு விழாவுக்கு முன்னோட்டமாக அமையட்டும் இந்த 95வது பிறந்தநாள்! இந்தியாவுக்கே வழிகாட்டும் தலைவர் கலைஞர் அவர்கள், நமக்குச் சொந்தமான தலைவர் என்பது நாம் பெற்றிருக்கும் தனித்தகுதி அல்லவா! இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இந்தியாவுக்கே வழிகாட்டும் இணையற்ற நம் தலைவருக்கு வயது 95! - தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!
சார்ந்த செய்திகள்
Next Story
'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.
அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.
பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
Prime Minister Narendra Modi’s toxic speech is vile and highly deplorable. Fearing public anger against his failures, Modi has attempted to whip up religious sentiments and resorted to hate speech to avoid what seems to be an imminent defeat. Hate and discrimination are the real… https://t.co/MA9OeaVYIi pic.twitter.com/SmM9yHmryT
— M.K.Stalin (@mkstalin) April 22, 2024
Next Story
குடியைக் கெடுக்கும் குடிக்கு முடிவு கட்டப்படுவது எப்போது? - ராமதாஸ்
குடிப்பழக்கம் உள்ள பெற்றோரின் பிள்ளைகளுக்கு சுயமரியாதை குறைவு என ஆய்வில் வெளியாகியுள்ளது; குடியைக் கெடுக்கும் குடிக்கு முடிவு கட்டப்படுவது எப்போது? என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான பெற்றோர்களின் பிள்ளைகள் சுயமரியாதைக் குறைவு, தாழ்வு மனப்பான்மை உள்ளிட்ட மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்படுகின்றனர் என்று சென்னை மருத்துவக் கல்லூரியின் சமூக மருத்துவ நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. குடிக்கும் பெற்றோரின் பிள்ளைகள் இளம் வயதிலேயே மதுப்பழக்கம் மற்றும் புகையிலைப் பழக்கத்திற்கு அடிமையாகுதல், தீய செயல்களில் அடிக்கடி ஈடுபடுதல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கும் ஆளாவதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த ஆய்வு முடிவுகள் சிறிதும் அதிர்ச்சியோ, ஆச்சரியமோ அளிக்கவில்லை. மாறாக, மதுப்பழக்கத்தின் தீமைகள் குறித்து பல பத்தாண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி கூறி வரும் குற்றச்சாட்டுகளை உறுதி செய்திருக்கிறது.
அனைத்து சமூகக் கேடுகளுக்கும் ஆணிவேர் மதுப்பழக்கம் தான். தினமும் குடித்து விட்டு வந்து வீட்டில் உள்ளவர்களை கொடுமைப் படுத்தும் தந்தை உள்ள வீட்டில், அவர்களின் பிள்ளைகளால் நிம்மதியாக படிக்க முடியாது; சமூகத்தில் தலை நிமிர்ந்து நடக்க முடியாது என்பது நடைமுறையில் நாம் கண்டு வரும் உண்மை ஆகும். தந்தை குடிப்பதைப் பார்க்கும் பிள்ளைகளும் மது எளிதாக கிடைக்கும் போது அந்தப் பழக்கத்திற்கு அடிமையாவது வழக்கம் தான்.
இந்த உண்மைகளைத் தான் சென்னை மருத்துவக் கல்லூரியின் ஆய்வு உறுதி செய்திருக்கிறது. அதனால் தான் குடி குடியைக் கெடுக்கும், குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும் என்ற எச்சரிக்கை வாசகங்கள் மதுப்புட்டிகள் மீது எழுதப்பட்டன. மதுவே முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், தமிழ்நாட்டை மாறி மாறி ஆட்சி செய்து வரும் திமுகவும், அதிமுகவும் மதுவின் தீமைகளை கருத்தில் கொள்ளாமல் சட்டப்படியாக அரசுக்கு கிடைக்கும் வருமானத்தையும், சட்டவிரோதமாக தங்களுக்கு கிடைக்கும் லாபத்தையும் மட்டுமே கருத்தில் கொண்டு தமிழகத்தின் அனைத்து வீதிகளிலும் மதுவை வெள்ளம் போல ஓட விடுகின்றன.
அதுமட்டுமின்றி, மதுப்புட்டிகளில் மதுவின் தீமைகளை குறிக்கும் வகையிலான, 'குடி, குடியை கெடுக்கும்; குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும்; மது நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்குக் கேடு' என்ற, விழிப்புணர்வு வாசகங்களை நீக்கி விட்டு, 'மது அருந்துதல் உடல் நலத்திற்கு கேடு; பாதுகாப்பாக இருப்பீர். மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டாதீர்' என்ற மென்மையான வாசகங்களை அச்சிட்டது தான் திமுக, அதிமுக அரசின் சாதனைகள் ஆகும்.
எந்த வகையில் பார்த்தாலும் மது மிகப்பெரிய சமூகக் கேடு என்பதில் மாற்றமில்லை. மது இல்லாத தமிழகத்தில் குடும்பங்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள்; குழந்தைகள் சுயமரியாதையுடன் நல்லவர்களாக வளர்வார்கள். எனவே, குடியைக் கெடுக்கும் குடிப்பழக்கத்திற்கு முடிவு கட்டும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள மதுக்கடைகளை மூடிவிட்டு முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.