தமிழக அரசுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த 29 வழக்குகளை தேமுதிக தலைவர் விஜயகாந்த், பொருளாளர் பிரேமலதா உள்ளிட்டோர் வாபஸ் பெற்றதால் அவை தள்ளுபடி செய்யப்பட்டன.
2012-ஆம் ஆண்டிலிருந்து தேமுதிக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டங்களில் தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா மற்றும் அமைச்சர்களுக்கு எதிராகப் பேசிய கருத்துகள் உண்மைக்குப் புறம்பாகவும், நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையிலும் இருப்பதாகக் கூறி தேமுதிக தலைவர் விஜயகாந்த், பொருளாளர் பிரேமலதா, பார்த்தசாரதி, வெங்கடேசன் மற்றும் இளங்கோவன் ஆகியோர் மீது சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் தமிழக முதலமைச்சர் சார்பிலும் மற்றும் அமைச்சர்கள் சார்பிலும் 29 அவதூறு வழக்குகள் தொடரப்பட்டன. அந்த வழக்குகள், சம்மந்தப்பட்ட மாவட்ட நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில், தங்கள் மீதான அவதூறு வழக்குகளை ரத்து செய்யக்கோரி தொடர்ந்த 29 வழக்குகளையும் வாபஸ் பெறுவதாக விஜயகாந்த், பிரேமலதா உள்ளிட்டோர் தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றை ஏற்றுக்கொண்ட சென்னை உயர் நீதிமன்றம், வாபஸ் பெற அனுமதியளித்து, விஜயகாந்த், பிரேமலதா உள்ளிட்ட 5 பேரின் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.