Skip to main content

ஓ.பி.எஸ்.-ஐ விரட்டிய பட்டாளம்மன்!

Published on 14/11/2018 | Edited on 14/11/2018
ops 4



ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த ஊரான பெரியகுளம் தொகுதியில் உள்ள கள்ளுப்பட்டியில் பிரசித்த பெற்ற கோவிலாக இருந்து வருகிறது பட்டாளம்மன் திருக்கோவில். 
 

ஊர் கட்டுப்பாட்டில் இருந்து வந்த இந்த கோவில் தற்போது அறநிலையத்துறை கட்டுப்பாட்டிற்கு வந்திருக்கிறது. இருந்தாலும் பாரம்பரிய பூசாரிகள் தான் பட்டாளம்மனுக்கு பூஜைகள் செய்து வருகிறார்கள்.
 

இப்படிப்பட்ட பட்டாளம்மனை பொதுமக்கள் முதல் அரசியல்வாதிகள் வரை வணங்கி சென்றாலே அவர்கள் நினைத்த காரியம் நடக்குமாம். அதுனாலேயே தேர்தல் வந்தால் தேனி மாவட்டத்தில் உள்ள ஓ.பி.எஸ். உள்பட சர்வ கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதிகள் எல்லாம் இந்த பட்டாளம்மன் திருக்கோவிலுக்கு படையெடுத்து வந்து வழிபட்டு விட்டுத்தான் தேர்தல் பணியை தொடங்குவது ஒரு நடைமுறையாகவே இருந்து வருகிறது. 
 

அதுபோலதான் வரக்கூடிய இடைத்தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தலுக்கான பணிகளை தற்போது தேனி மாவட்டத்தில் ஓ.பி.எஸ். உசுப்பிவிட்டு இருக்கிறார். அதை தொடர்ந்து தான் ஊர் ஊருக்கு கட்சி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டமும் நடந்து வருகிறது. 
 

ஆனால் கடந்த 11ம் தேதி முதன் முதலில் பெரியகுளத்தில் கட்சி நிர்வாகிககளின் ஆலோசனைக் கூட்டம் தொடங்குவதற்கு முன்பு வழக்கம்போல் கள்ளுப்பட்டியில் உள்ள பட்டாளம்மனை வழிபட்டு வருவதற்காக மாலை 4 மணிக்கு பெரியகுளத்தில் உள்ள சில ர.ர.க்களுடன் ஓ.பி.எஸ். பட்டாளம்மன் கோவிலுக்கு சென்றார். 

 

ops


அப்போது கோவிலில் முன் கதவை சாத்தி இருப்பதை கண்டு டென்சன் அடைந்த உடன் வந்த ர.ர.க்கள் அதை திறந்துவிட்டு ஓ.பி.எஸ்.-ஐ உள்ளே அழைத்து சென்றனர். அப்பொழுது கோவிலுக்குள் பூசாரி இல்லாமல் மூலஸ்தானமே பூட்டி இருப்பதை கண்டு ஓ.பி.எஸ். உள்பட ர.ர.க்களும் அதிர்ச்சி அடைந்துவிட்டனர். 
 

அப்படி இருந்தும் ஓ.பி.எஸ். அரைமணி நேரத்திற்கு மேல் கோவில் வளாகத்திற்குள் காத்து கிடந்தும் கூட பூசாரி வரவில்லை என்பதால் டென்சன் அடைந்த ஓ.பி.எஸ். பட்டாளம்மனை வழிபடாமலேயே திரும்பி சென்று, முதன் முதலில் பெரியகுளத்தில் தேர்தலுக்கான ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி இருக்கிறார்.
 


இதுபற்றி அப்பகுதியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் சிலரிடம் கேட்டபோது... தேர்தல் காலங்களில் இந்த பட்டாளம்மனை வணங்கிவிட்டு சென்றாலே வெற்றி பெற்று விடுவார்கள் என்று ஒரு ஐதீகம் இருந்து வருகிறது. அதுனாலேயே ஓ.பி.எஸ். டிடிவி, ஜெயராமன், பார்த்திபன், பொன்.முத்துராமலிங்கம், ஆரூண், செல்லப்பாண்டியன், மூக்கையா இப்படி பல சர்வ கட்சியினரும் வந்து பட்டாளம்மனை வணங்கிவிட்டு சென்றிருக்கிறார்கள். தொடர்ந்து வந்து கொண்டும் இருக்கிறார்கள். 
 

அதுபோல்தான் தற்போது தேர்தல் வர இருப்பதால் முதன் முதலில் பட்டாளம்மனை தரிசிப்பதற்கு ஓ.பி.எஸ். வருவதாக காலையிலேயே ஒன்றிய செயலாளர் அன்னபிரகாசிடம் சொல்லியிருக்கிறார்கள். அப்படியிருந்தும் ஒன்றியம் ஓ.பி.எஸ். வருவதை தெரியப்படுத்தாமலும் கட்சிக்காரர்களுக்கு சரிவர தெரியப்படுத்தாமலும் இருந்துவிட்டார். 
 

ஏற்கனவே கள்ளுப்பட்டியில் டிடிவி ஆதரவாளர்கள் தான் பெரும்பான்மையாக இருந்து வருகிறார்கள். ஆளுங்கட்சிகாரர்கள் பெயரளவில் தான் இருக்கிறார்கள். அதுலயும் உள்கட்சி கோஷ்டி பூசலும் இருப்பதால் ஓ.பி.எஸ். வருவதை யாருமே கண்டுகொள்ளவில்லை. கோவில் பூசாரிக்கும் தெரியப்படுத்தவில்லை. இந்தநிலையில்தான் திடீரென ஓ.பி.எஸ். கோவிலுக்க வரவே கோவில் மூலஸ்தானமும் பூட்டி இருப்பதை கண்டு மனம் நொந்துபோய் திரும்பிவிட்டார். 
 

இதுவரை பட்டாளம்மனை முதலில் வணங்கி வந்த ஓ.பி.எஸ்.-க்கு இப்படி பட்டாளம்மனை அவரை விரட்டியிருப்பதை பார்க்கும்போது வரக்கூடிய தேர்தலில் வெற்றியே ஓ.பி.எஸ்-க்கு சாதகமாக அமையுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க முடியும் என்று கூறினார்கள்.  

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழகத்தில் பா.ஜ.க., அதன் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு!

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
Announcement of constituencies contested by BJP and its allies in TN

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழகம் மற்றும் புதுவையில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அந்தவகையில் பா.ஜ.க.வின் தேசிய பொதுச் செயலாளரும், கட்சியின் தலைமையிடத்து பொறுப்பாளருமான அருண் சிங் 3 ஆம் கட்டமாக தமிழ்நாட்டில் உள்ள 9 தொகுதிகளுக்கான பா.ஜ.க.வின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று (21.03.2024) வெளியிட்டிருந்தார். அதன்படி சென்னை தெற்கு - முன்னாள் ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், மத்திய சென்னை - வினோஜ் பி.செல்வம், கிருஷ்ணகிரி - சி. நரசிம்மன், நீலகிரி - எல்.முருகன், திருநெல்வேலி - நயினார் நாகேந்திரன், கன்னியாகுமரி - பொன். ராதாகிருஷ்ணன், வேலூர் - புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம், பெரம்பலூர் - இந்திய ஜனநாயக கட்சியின் பாரிவேந்தர் ஆகியோர் தாமரைச் சின்னத்தில் போட்டியிட உள்ளனர் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் பா.ஜ.க. மற்றும் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல் வெளியாகி யுள்ளது. அதன்படி திருவள்ளூர், வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, நாமக்கல், திருப்பூர், நீலகிரி, கோயம்புத்தூர், பொள்ளாச்சி, கரூர், சிதம்பரம், நாகப்பட்டினம், தஞ்சாவூர், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 19 தொகுதிகளில் பா.ஜ.க. நேரடியாக போட்டியிடுகிறது. அதே சமயம் தாமரை சின்னத்தில் புதிய நீதிக்கட்சி வேலூர் தொகுதியிலும், இந்திய ஜனநாயக கட்சி பெரம்பலூர் தொகுதியிலும், இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் சிவகங்கை தொகுதியிலும், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் தென்காசி தொகுதியிலும், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு இராமநாதபுரம் தொகுதியிலும் போட்டியிட உள்ளன.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பிரசர் குக்கர் சின்னத்தில் திருச்சி மற்றும் தேனி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட உள்ளது. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சைக்கிள் சின்னத்தில் ஈரோடு, ஸ்ரீபெரும்புதூர் மற்றும் தூத்துக்குடி ஆகிய 3 தொகுதிகளில் போட்டியிட உள்ளது. பட்டாளி மக்கள் கட்சி காஞ்சிபுரம், அரக்கோணம், தர்மபுரி, ஆரணி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், திண்டுக்கல் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 10 தொகுதிகளில் போட்டியிட உள்ளது.

Next Story

இரட்டை இலை சின்னம் வழக்கு; சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
Madras High Court action decision on double leaf symbol case

அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை பிரச்சனை பூதாகரமாகி ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ். ஆகிய இருவரும் நீதிமன்றத்திலும் தேர்தல் ஆணையத்திலும் முறையிட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமியை அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராகத் தேர்தல் ஆணையம் கடந்த ஆண்டு ஏப்ரல் 20 ஆம் தேதி (20.04.2023) அங்கீகரித்தது. இதன் மூலம் இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமி வசம் என்பது உறுதியானது. 

அதே சமயம் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தொடர்ந்து அ.தி.மு.க.வின் கொடிகள், பெயர், லெட்டர் பேடு, சின்னங்களைப் பயன்படுத்தி வந்தார். இதனால் அ.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுகிறது. எனவே அ.தி.மு.க.வின் கொடிகள், பெயர், லெட்டர் பேடு, சின்னங்களை ஓ. பன்னீர்செல்வம் பயன்படுத்த தடை விதிக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி சதீஷ்குமார், ‘எத்தனை முறைதான் ஒரே ஒரு விவகாரத்திற்காக நீதிமன்றத்தின் கதவை தட்டுகிறீர்கள்’ என ஓ.பி.எஸ். தரப்புக்கு கண்டனம் தெரிவித்ததோடு, அ.தி.மு.க.வின் கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை ஓ.பி.எஸ். பயன்படுத்த இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தின் தனி நீதிபதி அளித்த இந்த இடைக்காலத் தடையை எதிர்த்து ஓ. பன்னீர்செல்வம் தரப்பு மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் ஆர். மகாதேவன், முகமது ஷஃபிக் அமர்வு முன்பு விசாரணை நடைபெற்று வந்தது. 

அப்போது ஓ. பன்னீர்செல்வம் தரப்பில், “பொதுக்குழு தொடர்பான பிரதான சிவில் வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே எந்த தடையும் விதிக்கக் கூடாது” என வாதிடப்பட்டது. இதனையடுத்து ஓ.பி.எஸ். தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதில், அ.தி.மு.க. கொடி, பெயர், சின்னம், லெட்டர் பேட் உள்ளிட்டவற்றை ஓ. பன்னீர்செல்வம் பயன்படுத்த தடை விதித்தது செல்லும் எனவும், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கி இருந்தது. மேலும் சம்பந்தப்பட்ட நீதிபதியை அணுகி நிவாரணம் பெற ஓ. பன்னீர்செல்வத்திற்கு நீதிபதிகள் அறிவுறுத்தி இருந்தனர்.

அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன்பு கடந்த 4 ஆம் தேதி (04.03.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய நாராயணன் ஆஜராகி வாதிடுகையில், “அ.தி.மு.க.வில் உறுப்பினராக இல்லாத ஓ.பன்னீர்செல்வம் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் இன்னமும் தன்னை அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் எனக் குறிப்பிட்டுள்ளார். அ.தி.மு.க.வில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியே கிடையாது. அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினராக கூட இல்லாத ஒருவர் இன்னமும் தன்னை ஒருங்கிணைப்பாளராக கூறி வருகிறார். நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், கட்சிக்கு சம்பந்தம் இல்லாத ஒருவர் கட்சி நடவடிக்கையில் தலையிடுவது தொண்டர்கள் மத்தியில் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தும்” எனத் தெரிவித்திருந்தார். இவ்வாறு எடப்பாடி பழனிசாமியின் தரப்பு வாதம் நிறைவடைந்தது.

இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (18-03-24) விசாரணைக்கு வந்தது. அப்போது, உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார், ‘அதிமுக இரட்டை இலை சின்னம், கொடியை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த நிரந்தர தடை விதித்து அதிரடி தீர்ப்பளித்தார். இரட்டை இலை சின்னம், கொடி, லெட்டர் பேட் ஆகியவற்றை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த ஏற்கனவே இடைக்கால தடை விதித்திருந்த நிலையில், தற்போது நிரந்தர தடை விதித்திருப்பது ஓ.பி.எஸ் ஆதரவாளர்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.