Skip to main content

1200 ஆண்டுகளுக்கு முன்பு தமிழன் கட்டிய ஏரி கண்டுபிடிப்பு!

Published on 24/02/2020 | Edited on 24/02/2020

தமிழகத்தில் நடைபெறும் அகழ்வாராய்ச்சியில் ஏராளமான அதிசயங்கள் தொடர்ந்து வெளிவந்துகொண்டிருக்கிறது. அப்படித்தான் இதுவும். 

 

oldest lake invention in erode

 

 

ஈரோடு மாவட்டம் பவானி அருகே பிரம்மதேசம் கிராமம் கல்லாம்பாறை பகுதியில் கல்வெட்டு ஆய்வாளர்கள் புலவர். ராசு, சக்திபிரகாஷ், வேலுதரன் ஆகியோர் கல்வெட்டு தொடர்பாக ஆய்வு நடத்தினர். அந்த ஆய்வில்,ஒரு ஓடைக்கு அருகில் கி.பி. 8-ம் நூற்றாண்டை சேர்ந்த ஒரு ஏரி இருந்தது கல்வெட்டு மூலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது கொங்கு மண்டலத்தின் மிகவும் பழமையான ஏரி என்பது தெரியவந்ததாக புலவர் ராசு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், "கல்வெட்டில் செருக்கலி நாடாளரால் பணிக்கப்பட்டது என்று கூறப்பட்டுள்ளது. அதாவது ஏரி இருந்த பகுதி செருக்கலிநாடு என்று அழைக்கப்பட்டு வந்தது. பின்னர் வடகரை நாடு என்று அழைக்கப்பட்டது. இந்த நாட்டை நிர்வாகம் செய்தவர்கள் நாடாளர் எனப்பட்டனர். ஊரை ஆண்டவர் ஊராளி என அழைக்கப்பட்டதை போல, நாட்டை ஆண்டவர் நாடாளர் என்று அழைக்கப்பட்டனர். அதுவே பிற்காலத்தில் நாட்டார் எனப்பட்டனர். 

இந்த நாடாளரால் ஏரி உருவாக்கப்பட்டது. கல்வெட்டின் மூலமாக ஏரியின் பெயரை நட்டன் ஏரி என்று அழைக்கப்பட்டு வந்தது தெரியவந்தது. ஏரியின் கரை சிறை என்றும், ஏரியின் நீர்வெளியேறும் மதகு வாய் என்றும் கூறப்பட்டது. ஏரிபோல கரைகளுக்கு நட்டன் சிறை, மதகுகளுக்கு நட்டன் வாய் என்று அழைக்கப்பட்டது. இது சிவபெருமான் பெயர் அல்லது தனிப்பட்ட தலைவன் பெயராக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த ஏரியின் பயனை நாடாளரின் வழியினராகிய மக்கள் பேரர் அல்லாமல், வேறு யாராவது அனுபவித்தால், அவர்கள் வம்சம் அற்றுப்போவார்கள்.

 



அதாவது நாடாளரின் வம்சத்தினர் அனுபவித்ததாக குறிப்பிடப்பட்டு உள்ளது. மேலும், பேச்சு ஒலியைப்போல தலை என்பதற்கு தலைய் என்று கல்வெட்டில் எழுதப்பட்டுள்ளது. அதாவது ஏரியை பாதுகாத்தவர், அடி (கால்) எங்கள் தலைமேலது என்று கூறப்பட்டது. நீர்ப்பாசன வசதி கல்வெட்டின் தொடக்கத்தில் பல்லவர் கிரந்த எழுத்தான ஸ்ரீ என்று பொறிக்கப்பட்டுள்ளது. தொன்மையான தமிழ் எழுத்துகள் சிலவற்றில் தமிழ் பிராமி தாக்கமும், சில எழுத்துகளில் வட்டெழுத்தின் சாயலும் உள்ளன.

இதே காலத்தை சேர்ந்த ஸ்ரீ சோழிக அரையன் அகணிதன் குளம் கரூர் அருகே வெள்ளியணை என்ற ஊரில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. எனவே பிற்காலத்தில் 8 ஆறுகளில் 90 அணைகள் கட்டி நீர்ப்பாசன வசதி பெருக்கிய கொங்கு மக்களின் தொடக்க முயற்சியை இது காட்டுகிறது. இதன் விவரம் ஈரோடு மாவட்ட நிர்வாகத்துக்கும், தொல்லியல் துறைக்கும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க தொன்மையான கல்வெட்டை பாதுகாக்க வேண்டும்" என்றார்.  

 

 

சார்ந்த செய்திகள்