Skip to main content

“ஆம்னி பேருந்துகள் அனைத்தும் இயங்கும்” - போராட்டம் வாபஸ்

Published on 24/10/2023 | Edited on 24/10/2023

 

Notification that all omni buses will be operated in Tamil Nadu

 

தமிழகம் முழுவதும் இன்று மாலை 6 மணி முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது என தென் மாநில ஆம்னி பேருந்துகள் கூட்டமைப்பு அறிவித்திருந்த தற்போது போராட்டம் வாபஸ் பெறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

வார விடுமுறை, ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி தொடர் விடுமுறை முன்னிட்டு வெளியூர்களில் வேலை பார்ப்பவர்கள் தங்களது சொந்த ஊருக்கு சென்றுள்ளனர். விடுமுறையின் தொடக்கத்தில் ஆம்னி பேருந்துகள் அதிக கட்டண வசூல் செய்ததாக கூறி 120 ஆம்னி பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த 120 ஆம்னி பேருந்துகளையும் விடுவிக்க கோரி இந்த அறிவிப்பை தென் மாநில ஆம்னி பேருந்துகள் கூட்டமைப்பு அறிவித்திருந்தது. 

 

விடுமுறை முடிந்து ஊர் திரும்ப பயணிகள் ஆயத்தமாகி வரும் நிலையில் தற்போது இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் அனைத்து ஆம்னி பேருந்துகளும் வழக்கம்போல் இயங்கும் என தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. அச்சங்கத்தின் செயலாளர் மாறன் செய்தியாளர்களை சந்தித்தபோது, “எங்கள் சங்கத்தில் 1,500 பேருந்துகள் உள்ளன; அவை அனைத்தும் வழக்கம் போல் இயங்கும். எங்கள் சங்கத்தில் தான் அதிக பேருந்துகள் இருக்கிறது. பொதுமக்கள் பயப்பட வேண்டாம்” என தெரிவித்துள்ளார். இரு சங்கங்களும் வெவ்வேறு அறிவிப்பை வெளியிட்டுள்ளதால் பொதுமக்கள் குழப்பத்தில் உள்ளனர். 

 

இந்த நிலையில் வேலை நிறுத்தத்தை வாபஸ் பெறுவதாக தென் மாநில பேருந்துகள் கூட்டமைப்பு சங்கம் அறிவித்துள்ளது. முன்னதாக போக்குவரத்து இணை ஆணையர் முத்து பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் ஆம்னி பேருந்து வேலை நிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. மேலும் பேச்சுவார்த்தையில் தவறுதலாக சிறைபிடிக்கப்பட்ட வாகனங்களை நாளைக்குள் விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், முறையாக வரி கட்டிய வாகனங்களை விடுவிப்பதாக அரசு தரப்பு உறுதியளித்துள்ளது. இதையடுத்து நடுவழியில் பயணிகளை இறக்கிவிட்டு வாகனங்களை சிறைபிடிக்கக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை அரசு தரப்பு ஏற்றுக் கொண்டதால் போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக தென் மாநில ஆம்னி பேருந்து கூட்டமைப்பு சங்கம் தெரிவித்துள்ளது.  

 

 

 

சார்ந்த செய்திகள்