Published on 04/06/2022 | Edited on 04/06/2022
மதுரை விளாங்குடி பகுதியில் கழிவுநீர் குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த வடமாநில தொழிலாளி மண் சரிந்து விழுந்து பலியான விவகாரத்தில் 3 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மதுரை மாநகராட்சி விளாங்குடி பகுதியில் பாதாளச் சாக்கடை அமைப்பதற்கான பள்ளம் தோண்டும் பணியை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வந்தது. இப்பணியில் ஈடுபட்டிருந்த வடமாநில தொழிலாளி ஒருவர், திடீரென ஏற்பட்ட மண் சரிவில் சிக்கிக்கொண்டார். சிக்கிக்கொண்ட தொழிலாளியை பொக்லைன் இயந்திரம் மூலம் மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், தலை துண்டாகி தொழிலாளி பலியானார்.
இது தொடர்பாக விளாங்குடி போலீஸார் விசாரணை செய்துவரும் நிலையில், ஒப்பந்த நிறுவனர் மேலாளர் பாலு, பணியிட பொறியாளர் சிக்கந்தர், பொக்லைன் ஓட்டுநர் சுரேஷ் குமார் ஆகிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.