![tamilnadu rains regional meteorological centre in chennai](http://image.nakkheeran.in/cdn/farfuture/PqH0DCJEFwv_mv318wKk_xL9ukmU4jsoa_YM-0YEqdE/1603871785/sites/default/files/inline-images/MET3422_17.jpg)
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
செய்தியாளர்களைச் சந்தித்த சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் பாலச்சந்திரன், "தமிழகம் மற்றும் கேரளாவில் வடகிழக்குப் பருவமழை இன்று முதல் தொடங்கியது. வடகிழக்குப் பருவமழையின் போது ஆண்டின் சராசரி மழை அளவில், தமிழகம் 60% மழையைப் பெறும். வடகிழக்குப் பருவமழையின் போது தமிழகத்தின் சராசரி மழை அளவு 44 செ.மீ. இந்தாண்டுக்கான மழை பதிவு சராசரியை ஒட்டியோ அல்லது சராசரியை விட அதிகமாகவோ இருக்கும்.
நெல்லை, தென்காசி, விருதுநகர், ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு வடதமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஏனைய தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகரில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; நகரின் சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக, மேலூர் (மதுரை) - 6 செ.மீ., மானாமதுரை, திருபுவனம் (சிவகங்கை) - 5 செ.மீ மழை பதிவாகியுள்ளது." இவ்வாறு பாலச்சந்திரன் கூறினார்.